புதுடில்லி, பிப். 3- 31.1.2025 அன்று தாக்கலான ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில், தமிழ்நாட்டின் பெயர் 44 முறை இடம்பெற்றுள்ளது.
தொழிற்சாலை, தனிநபர் சராசரி, சிறு, குறு, நடுத்தர தொழில்கள், விவசாயம், சேவை, திறன் வளர்ப்பு கல்வி, முதலீட்டாளர்களுக்கு ஆதரவு ஆகியவற்றில் தமிழ்நாடு எவ்வாறு முன்னிலை வகிக்கிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டின் காலணி, பாரம்பரிய தோல் துறையில் தமிழ்நாடு 38 சதவீத பங்கு தமிழ்நாட்டை அங்கீகாரம் வகிக்கும் நிலையில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
நாட்டின் தோல் பொருள் ஏற்றுமதியில், தமிழ்நாடு 47 சதவீத பங்கு வகிக்கிறது எனவும், தைவானின் பெங் டே உட்பட வெளிநாட்டு முதலீடுகள், உலக காலணி தயாரிப்பு நிறுவனங்களை ஈர்க்க அரசு எடுத்துள்ள முயற்சிகள் போன்றவையும் பட்டியலிடப்பட்டு உள்ளன.
வருங்காலத்தில் காலணி தொழில் முதலீடுக்கான மாவட்டங்களாக மதுரை, சிவகங்கை ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, உற்பத்தியாளர்களுக்கு தேவையான நிலம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கைடன்ஸ் எனப்படும் தமிழ்நாடு அரசின் முதலீடு மேம்பாட்டு முகமை, பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரு வதாகவும், மாண்டரின், ஜப்பான், கொரிய மொழிகளில் விளம்பரங்களை தயாரித்து வெளியிடுவதாகவும்; தற்போது ஜெர்மன், பிரெஞ்ச் மொழிகளிலும் விளம்பர தயாரிப்பு நடைபெறுவதாகவும் கூறப்பட்டு உள்ளது.
முதலீட்டாளர்களுக்கு பிரத்யேக அதிகாரி நியமிக்கப்பட்டு, தொழில் துவங்க வழிகாட்டப்படுவதால், உற்பத்தி ஆலை துவங்க ஆதரவான மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.