வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சண்டிகர் தமிழ் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் பொதுச் செயலர் சுப.இராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் தமிழர் களை ஏமாற்ற தொடர்ந்து ஊடகங்களில் போலி விளம் பரங்கள் வெளியிட்டு பணமோசடி செய்யும் போலி முகவர்கள் பஞ்சாப், மொகாலி, சண்டிகர் ஆகிய பகுதிகளில் பெருகியுள்ளனர். தமிழர்களை ஈர்த்து கனடா போன்ற நாடுகளில் வேலைவாய்ப்பு எனப் பொய்யான உத்தரவாதம் அளித்து பெருந்தொகையை பெற்றுக்கொண்டு ஏமாற்றுவதும், கேள்வி கேட்போரை மிரட்டுவதும் தொடர் நிகழ்வுகளாகி அச்சுறுத்துகின்றன.
இவர்களிடம் பெருந்தொகையைக் கொடுத்து ஏமாந்து தவிக்கும் தமிழர்கள் மதுரை மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். விமானப் பயணச்சீட்டுகளை குறைந்த கட்டணத்தில் வழங்குவதாகப் பொய்யாக அறிவித்து, ஏமாறும் தமிழர்களிடம் தொடர் வசூலில் ஈடுபடும் அவலமும் நடக்கிறது.
இவ்வகை மோசடிகள் தொடராதபடி, மதுரை உள்ளிட்ட தமிழ்நாடு மாவட்டங்களில் இனிமேலும் யாரும் ஏமாறாமல் காக்கும் வகையில் ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.