சென்னை, பிப். 2- திமுக ஆட்சி பொறுப் பேற்ற பிறகு, இதுவரை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட 7,400 ஏக்கர் கோயில் நிலம் மீட்கப்பட்டு உள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக அறநிலையத் துறை வெளியிட்ட அறிக்கையில், “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனும் பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில் பயணிக்கும் திராவிட மாடல் அரசு தமிழ் நாட்டில் மதச்சார்பின்மையை கடைப்பிடித்து சமய நல்லிணக்கத்தை ஆதரிக்கும் அரசாக விளங்குகிறது. மேலும் மக்களின் சமய நம்பிக்கைகளுக்கு உரிய மதிப்பளித்து திருப்பணிகளை சிரத்தையுடன் மேற் கொண்டு வருகிறது.
திராவிட மாடல் அரசு மக்களின் சமய உணர்வுகளை மதித்து இறை வழிபாட்டுத்தலங்களை மேலும் வளப்படுத்திவதில் பெரும் அக்கறையோடு செயல்படும் அரசு என்பதற்கு இந்து சமய அற நிலையத் துறையின் சிறப்பான செயல்பாடுகள் சான்றாகியுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தற்போதுவரை 2,392 திருக்கோவில்களில் திருப்பணி கள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுழுக்குகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 7,132 கோடி ரூபாய் மதிப்புள்ள 7,400ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, 12,202 திருக்கோவில்களில் 5,515 கோடி ரூபாய் செலவில் 23,234 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருத்தலங்களின் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக, 1,770 கோடி ரூபாய் செலவில் 19 கோவில் வளாகங்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முதலமைச்சரின் வழிக்காட்டுதல்களால் திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களின் உள்ளம் அறிந்து செயல்படும் முதலமைச்சரின் நடவடிக்கைகளால் மக்கள் மகிழ்ச்சியோடு திருக்கோவில்களில் வழிபட்டு வருகிறார்கள்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.