சீமான் செயலுக்கு வலுக்கும் கண்டனம்!
கோவை,ஜன.26- சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்தனர். இந்நிலையில், நாதக ஒருங்கிணைப் பாளர் சீமான் திமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக ஒரு தொலைக் காட்சிக்கு பேட்டியளித்த சீமான், பெண் பத்திரிகையாளரின் கேள்வி ஒன்றிற்கு அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் பத்திரிகையாளரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூட சீமானுக்கு தெரியாதா என்று சமூக வலைதளங்களில் மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சர்ச்சைப் பேச்சு
பெரியார் குறித்து சீமான் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்து களைப் பேசி வந்தார். பெரியார் குறித்து இந்த அவதூறு கருத்துகள் திராவிட கட்சிகள் மற்றும் பெரியாரிய உணர்வாளர்களை கொதிப்படையச் செய்தது. இந்நிலையில், பெரியாரிய அமைப்பு களைச் சேர்ந்த பலரும் சமீபத்தில் சீமானின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாம் தமிழர் கட்சியில் இருக்கும் தொண்டர்களுக்கும் சீமானின் பெரியார் குறித்த நிலைப்பாடும், பேச்சும் பிடிக்காததால் கட்சியில் இருந்து விலகத் தொடங்கினர். இந்நிலையில், நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னை அண்ணா அறிவா லயத்தில் 24.1.2025 அன்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.
இந்நிலையில், ஈரோடு இடைத் தேர்தலை முன்னிட்டு பிரச் சாரத்திற்காக கோவை விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுக்கு சீமான் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அதிர்வலை
இதுதொடர்பாக, ஒரு தொலைக் காட்சிக்கும் சீமான் தனியே பேட்டியளித்திருந்தார். அப்போது, பெண் பத்திரிகையாளர் நீங்கள் பிரபாகரன் அவர்களுடன் எடுத்துக் கொண்ட ஒளிப்படம் தொடர்பாக அவரது அண்ணன் மகன் கருத்து தெரிவித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினார்.
அப்போது, ஆத்திரமடைந்த சீமான் பெண் பத்திரிகையாளரிடம் அநாகரீமான வார்த்தைகளில் பதில் அளித்துள்ளார். இந்த சம்பவம் பத்திரிகையாளர் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு தங்களது கட்சியில் 50 சதவீதம் என்று மார்தட்டிக் கொள்ளும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் பெண் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு இப்படி அநாகரீகமாக பதில் அளிப்பதா என்றும், சீமான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.
ஏற்கெனவே ஆண் பத்திரிகை யாளர்களிடம் ஒருமையில் பேசி வந்த நிலையில், தற்போது சீமான் பெண் பத்திரிகையாளர் முன்பு அநாகரீகமான வார்த்தை களைப் பயன்படுத்தி பேசியுள்ளது பத்திரிகையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்டனங்கள்
சீமானின் இந்த அநாகரீகமான செயலுக்கு பல்வேறு மூத்த பத்திரிகை யாளர்களும், பத்திரிகையாளர் சங்கங்களும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
மேலும், சீமானுக்கு எதிராகப் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், காவல் துறையில் புகார் அளிக்கவுள்ளதாகவும் பத்திரிகையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தைக் கண்டித்து சென்னை பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் கண்ணியக் குறைவான வார்த்தைகளை தொடர்ந்து பயன்படுத்திவரும் நாம் தமிழர் கட்சிஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை பத்திரி கையாளர் மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
ஊடகங்களில் உரையாடும் எளிய மனிதர்களே நாகரிகமான சொற்களை பயன்படுத்தும்போது, ஒரு கட்சித் தலைவரான சீமான் பொது இடங்களிலும் ஊடக சந்திப்புகளிலும், தொடர்ந்து ஆபாச மற்றும் இழி சொற்களை பயன்படுத்திவருவது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
கோவையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், பிரபாகரனின் அண்ணன் மகன் சீமான் மீது எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளை கேள்வியாக முன்வைத்த பெண் செய்தியாளரிடம், முகம்சுளிக்கும் வகையில் சீமான் பதிலளித்திருக்கிறார்.
முதிர்ச்சியின்மை
செய்தியாளரை தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு சொல்ல வில்லை என்றாலும், பெண் செய்தியாளருக்கு பதிலளிக்கிறோம் என்ற கவனமும் பொறுப்பும் இல்லாமல் (அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளைக் கொண்டு) சீமான் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
சீமான், பொது இடங்களிலும் ஊடக சந்திப்புக்களிலும் முதிர்ச்சியான சொற்களைப் பயன் படுத்துவதும், கண்ணியம் அறிந்து நடந்துகொள்ள வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதேபோல, கோவை பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொது வாழ்க்கைக்கு வந்து ஆண்டுகள் பல கழிந்தும் பொதுவெளியில் பெண்கள் மத்தியில் நாகரீகமாக பேசத் தெரியாத ச்ச்ச்சீமானே.. கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் வன்மையான கண்டனங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.