இந்தியாதான் பலி ஆடு! உலக பொருளாதார மன்றம் எச்சரிக்கை!
டாவோஸ்,ஜன.26- உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டம் 24.1.2025 அன்று நடந்தது. இதில், இனி வரும் நாட்களில் உலக பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இது இந்தியாவுக்கு மிகவும் ஆபத்தான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
பெரும் பணக்காரர்கள், பில்லியனர்கள் உலக பொருளாதார மன்றத்தின் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
இந்த மன்றத்தின் ஆண்டு கூட்டம் நேற்று சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றது. இந்த மன்றம் சார்பில் அறிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது. இது பணக்காரர்கள் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.
பொருளாதாரப் பின்னடைவு
அமெரிக்காவை சேர்ந்த பிரபல மேலாண்மை ஆலோசனை நிறுவனமான ஆலிவர் வைமன் உடன் சேர்ந்து தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில், உலகம் முன்னெப்போதைவிடவும் இனி வரும் நாட்களில் பொருளாதாரத்தில் பின்னோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எந்த அளவுக்கு எனில் ரூ.51 லட்சம் கோடியில் தொடங்கி, ரூ.419 லட்சம் கோடி வரை உலக வர்த்தகம் பாதிக்கப்படலாம். உலக நாடுகளின் ஜி.டி.பி.யில் இந்த பணம் 5 சதவீதம் ஆகும்.
பொருளாதார பாதிப்புகள் ஏன்?
உலக நாடுகள் மத்தியில் இருக்கும் பிரிவினைகள், தன்னிச்சையாக செயல்படுதல் போன்ற காரணங்களால் இவை ஏற்படும் என்று உலக பொருளாதார மன்றம் கணித்திருக்கிறது. இதனை ‘geoeconomic fragmentation’ என்றும் குறிப்பிட்டிருக்கிறது. இலகுவாக சொல்வதெனில், டிரம்ப் வந்தவுடன் ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் இன்ன பிற நாடுகளுக்கும் பொருளாதார தடைகளை வீசி எறிந்திருக்கிறார்.
பதிலுக்கு இந்த நாடுகளும் அமெரிக்க பொருட்கள் மீதான தடையை அறிவித்து வருகின்றன. இப்படி செய்வதுதால் புவிசார் அரசியலில் பிளவு ஏற்படும். உலக அளவில் விநியோக சங்கிலியில் உடைப்பு ஏற்படும். வர்த்தக போரும் உருவாகும்.
எந்த அளவுக்கு பாதிப்புகள் இருக்கும்?
உலக பொருளாதார மன்ற அறிக்கையில், இனி வரும் நாட்களில் ஏற்படும் பாதிப்புகள் கடந்த 2008 பொருளாதார வீழ்ச்சியை விடவும், கரோனா பெரும் தொற்று காலத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை விடவும் மோசமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு இதனால் பாதிப்புகள் இருந்தாலும் அந்த நாடுகள் இதனை சமாளித்துக்கொள்ளும். ஆனால், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளால் இதை தாங்கிக்கொள்ள முடியாது.
இந்தியாவுக்கு எந்த அளவுக்கு பாதிப்பு?
இந்தியா மட்டுமல்லாது பிரேசில், துருக்கி, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வளர்ந்து வரும் நாடுகள் இதனால் கடுமையாக பாதிக்கப்படும்.
இந்த நாடுகளில் ஜி.டி.பி. 10 சதவிகிதத்திற்கும் குறைவாக போக வாய்ப்பு இருக்கிறது. இவையெல்லாம் அணிசேரா நாடுகளாக இருக்கிறது. அதாவது ரஷ்யாவிடமும் உதவியை வாங்கிக்கொள்ளும், அமெரிக்கா விடமும் பேச்சு வார்த்தையில் ஈடுபடும். ஆனால் பஞ்சாயத்து என்று வந்துவிட்டால் எந்த பக்கமும் நிற்காது.
ஆனால் எதிர்காலத்தில் வரும் பொருளாதார தாக்கங்கள், அணிசேரா நாடுகள் என்கிற ஒரு கூட்டமைப்பையே இல்லாமல் காலி செய்துவிடும். அதாவது இந்த நாடுகள் நிச்சயம் எதாவது ஒரு பெரிய நாட்டின் பக்கம் சார்ந்தே ஆகவேண்டும் என்கிற நிலை உருவாகிவிடும். ஆக இவ்வளவு பிரச்சினைகள் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு காத்திருக்கின்றன.