வாரணாசி, ஜன. 26- சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், உத்தரப் பிரதேச மேனாள் முதலமைச்சருமான முலாயம் சிங்குக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துகளைக் கூறியதற்காக அனுமான் கர்ஹி கோயில் அர்ச்சகர் மஹந்த் ராஜு தாஸ் மீது வாரணாசி நீதிமன்றத்தில் அவதூறு வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
மஹந்த் ராஜு தாஸ் அண்மையில் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் முலாயம் சிங்குக்கு எதிராக அவதூறான கருத்துகளை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ராஜு தாஸுக்கு எதிராக வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பிரேம் பிரகாஷ் யாதவ் அவதூறு வழக்கைத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், அடுத்த மாதம் 17ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வழக் குரைஞர் பிரேம் பிரகாஷ் யாதவ் கூறியதாவது:
ஏழைகளின் நல வாழ்வுக்காக பாடுபட்ட முலாயம் சிங் குறித்து ராஜு தாஸ் மரியாதை குறைவான கருத்துகளைத் தெரிவித்தார்.
இது எங்களது உணர்வுகளைப் புண் படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை வாரணாசி நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதி மன்றம் அடுத்த மாதம் 17ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
ராஜு தாஸுக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பு கிறோம். அது பெரிய தலைவர்களைப் பற்றி மற்றவர்கள் அவதூறான கருத்துகளைக் கூறுவதைத் தடுக்கும் வகையில் அமைய வேண்டும் என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனோஜ் ராஜ் தூப்சாண்டி கூறுகையில், ‘ராஜு தாஸுக்கு எதிராக புகாரைப் பதிவு செய்வதற்காக வார ணாசி காவல்துறை ஆணையரை எங்கள் கட்சித் தொண்டர்கள் அணுகினர்.
எனினும் எங்கள் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. தற்போது இந்த வழக்கை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதேவேளையில், ராஜு தாஸுக்கு எதிராக வாரணாசி காவல் துறை யினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
முலாயம் சிங் குறித்து ராஜு தாஸ் தெரிவித்த கருத்துகளுக்கு பாஜகவின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்.பி. கட்சித் தலைவர் ஓம்பிரகாஷ் ராஜ்பரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘முலாயம் சிங் இந்த மாநில முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.
ஒன்றிய பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்துள்ளார். பின்தங்கிய சமூகங்களுக்காக பாடு பட்ட பெரிய தலைவர் அவர். முலாயம் சிங்குக்கு எதிரான கருத்துகளைக் கண்டிக்கிறேன்’ என்றார்.