திருச்சி, ஜன. 25- திருச்சி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 51ஆவது ஆண்டு விழா 24.01.2025 வெள்ளிக் கிழமை காலை 10.00 மணியளவில் பள்ளி வளாகத்தில் உள்ள என்.எஸ்.கிருஷ்ணன் அரங்கில் “சீரும்சிறப்புமாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் செயலர் வீ.அன்புராஜ் தலைமையேற்க, சிறப்பு விருந்தினராக பள்ளியின் மேனாள் மாணவி. பொறியாளர் ஏ.என். சாரா, (நிர்வாகப் பொறியாளர், நீர் வளத்துறை) பங்கேற்றார்.
மொழி வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில் பள்ளி மாணவியர் தங்கள் கண்கவர் வரவேற்பு நடனம் மூலம் அனைவரையும் வரவேற்றனர். பள்ளியின் செயலர் வீ.அன்புராஜ் வரவேற்புரை யாற்றி. நிகழ்விற்கு வந்திருந்தோரை வரவேற்று, சிறப்பு விருந்தினருக்கு பயனாடை மற்றும் சிறப்பு பரிசு வழங்கி சிறப்பித்தார். பள்ளியின் தலைமையாசிரியை சு.பாக்கியலெட்சுமி, 2023-2024 ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்து, பள்ளியின் சாதனைகளைப் பறைசாற்றினார். அதனைத் தொடர்ந்து பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி கடந்து வந்த 51ஆண்டுகால வரலாற்றை படம்பிடித்துக் காட்டக்கூடிய நாடகம் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் திறன். கையெ ழுத்துப் பயிற்சி, செயற்கை நுண்ணறிவின் நிறை குறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆங்கில நாடகத்தையும், கிராமிய நடனம். மேற்கத்திய நடனம் ஆகியவற்றை செய்து காட்டி கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தளித்தனர்.
விருது வழங்கல்
2023-2024ஆம் கல்வியாண்டில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவியர் களுக்கு விருது வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 100 சதவீத வருகைப்பதிவு பெற்ற மாணவிகளுக்கும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
2023-2024 கல்வியாண்டில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் இயற்பியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற பி.கவின்முக்தா என்ற மாணவிக்கு சித்தார்த்தன் கணபதி நினைவாக ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
டாக்டர் தசரதன் திலகவதயால் வழங்கப்படும் பரிசுத்தொகை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் 12ஆம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஆர். கலைச்செல்வி என்ற மாணவிக்கும், 10ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற ஆர். சஞ்சனா என்ற மாணவிக்கும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
2023-2024ஆம் கல்வியாண்டில் அரசுப் பொதுத்தேர்வில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சியை ஈட்டித் தந்த ஆசிரியர்களுக்கு, செயலர் அவர்களால் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
சுய ஒழுக்கம் அவசியம்
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராகவும், இப்பள்ளியின் முன்னாள் மாணவியாகவும் வருகை புரிந்த பொறியாளர் ஏ.என். சாரா தனது உரையில் மாணவிகளுக்கு ஒழுக்கம் (Self Discipline) அவசியம், அலைபேசியை மாணவியர்கள் பயனுள்ள தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். மனதை ஒருநிலைப் படுத்துவதற்கு யோகா, தன்னம்பிக்கை அவசியம் என்றும், பெற்றோர்களுடைய துன்பங்களை உணர்ந்து சிறப்பாக படிக்கவேண்டும் என்றும், எவ்வளவு தான் பெற்றோர்களுக்கு வேலை இருந்தாலும் தங்களு டைய பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிக்க கற்றுக் கொள்ளவேண்டும். பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவிகள் என்றாலே தனித்துவமாக தெரிவார்கள். அது பெரியார் அறக்கட்டளையின் சிறப்பு என்றே சொல்லலாம். மாணவியர்கள் எந்த செயல் செய்தாலும் நானே முதல் என்று உறுதி ஏற்கவேண்டும். உங்களுடைய படிப்பு முன்னேற்றம் மட்டுமே உங்களுடைய இலக்காக இருக்கவேண்டும்.
ஆண்கள், பெண்களை போட் டியாளர்களாகவே நினைக்கிறார்கள். அதை எதிர்கொள்ளும் ஆற்றல் மாணவிகளுக்கு அவசியம் வேண்டும் என்றும் குறிப்பிட்டு, மாணவிகளுக்கு தன்னுடைய வாழ்க்கையையே இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் கூறி சிறப்பானதொரு உரையை நிகழ்த்தினார்.
இறுதியாக 11ஆம் வகுப்பு மாணவி எஸ்.சிறீமதுவந்தி நன்றி நவில நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.