வாசிங்டன், ஜன.25- அமெரிக் காவில் பிறப்புக் குடியுரிமையை ரத்து செய்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவுக்கு வாசிங்டன் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பிறப்புக் குடியுரிமை சட்டம்
கடந்த 20ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், பிறப்புக் குடியுரிமை நடைமுறையை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு அடுத்த 30 நாட்களில் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதை எதிர்த்து ஜனநாயக கட்சி ஆளும் 22 மாகாணங்களின் அரசுகள் சார்பில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு உள்ளன. இதில் வாசிங்டன், அரிசோனா, இலினொய், ஒரிகன் ஆகிய மாகாண அரசுகள் தொடர்ந்த வழக்கு மேற்கு வாசிங்டன் பெடரல் நீதிமன்றத்தில் நேற்று (24.1.2025) விசாரணைக்கு வந்தது.
மாகாண அரசுகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், “அரசமைப்பை மாற்றும் வகையில் அதிபர் ட்ரம்ப் பிறப்பு குடியுரிமை நடைமுறையை ரத்து செய்திருக்கிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.
சட்டத்துக்கு எதிரானது
அமெரிக்க அரசின் நீதித் துறை தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், “அமெரிக்காவின் நலன் கருதி சட்டப்பூர்வமாகவே பிறப்புக் குடியுரிமை நடைமுறை ரத்து செய்யப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜான் கிளார் கஹனோர் கூறியதாவது:
இந்த உத்தரவை சட்டப் பூர்வமானது என்று எப்படி கூற முடியும். பிறப்புக் குடியுரிமை ரத்து உத்தரவு அதிர்ச்சியளிக்கிறது. இது அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. அதிபர் ட்ரம்பின் உத்தரவுக்கு 14 நாட்கள் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும்.இவ்வாறு நீதிபதி ஜான் கிளார் கஹனோர் தெரிவித்தார்.
அமெரிக்க அரசின் பிறப்புக் குடியுரிமை நடைமுறையின் மூலம் ஆண்டுதோறும் வெளிநாட்டு பெற்றோருக்கு பிறக்கும் சுமார் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அந்த நாட்டின் குடியுரிமை கிடைத்து வருகிறது. இந்த நடைமுறையால் இந்திய பெற்றோருக்கு பிறந்த சுமார் 16 லட்சம் பேருக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்திருக்கிறது. அதிபர் ட்ரம்பின் உத்தரவால் இந்திய பெற்றோர் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.