5,000 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு உலக நாகரிகத்தின் துவக்கப் புள்ளி தமிழர்களே!

viduthalai
7 Min Read

தமிழ்நாடு முதலமைச்சர் 23.01.2025 அன்று உலகிற்கே தமிழர்களின் அதிமுக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டார் அது என்னவென்றால் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் உருக்கு இரும்பு என்ற கார்பன் கலக்கப்பட்ட உறுதியான இரும்பை பயன்படுத்த துவங்கி விட்டனர் என்பதாகும்.

அறிவியலின் வேகம்

இதுநாள் வரை நாம் 15 ஆம் நூற்றாண்டில் தொழில் நுட்பம் அய்ரோப்பியர்களின் கைவசம் சென்ற பிறகு தான் உலகம் நவீனத்தை நோக்கிச் சென்றது என்று இதுவரை பேசிவந்தோம், அது கிட்டத்தட்ட உண்மையும் கூட, நீராவி எஞ்சின் கண்டுபிடிப்பு – அதிலிருந்து புறப்பட்ட அறிவியலின் வேகம் இன்று இந்த பேரண்டத்தின் எல்லை வரையும் ஆழ்கடலின் அடித்தளத்தையும் பார்க்கவைத்தது, மனித இனத்தில் 23 லட்சம் ஆண்டுகால பயணத்தில் மிக முக்கியமான அசுரப்பாய்ச்சலை தந்து 400 ஆண்டுகளில் நவீனங்கள் அனைத்தும் விரல் நுனியில் வந்துவிட்டது.

கட்டுரை, ஞாயிறு மலர்
ஆனால் இந்த அசுரப்பாய்ச்சலுக்கு இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழினம் விதை போட்டது. ஆனால் வடக்கே பரவிய வேதமரபு முதலாம் நூற்றாண்டிற்கு முன்பாக மெல்ல மெல்ல தென் இந்தியாவில் பரவ அறிவுசார் களங்கள் அனைத்திலும் வர்ணமுறையை திணித்ததால் தமிழர்களின் நாகரீக ஆற்றல்வளம் அப்படியே நின்றுவிட்டது.

இரும்பின் முக்கியத்துவம்

மனிதர்கள் இரும்புக்கு முன்பாகவே தாமிரத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். ஆனால், இரும்பின் அளவுக்கு தாமிரம் உறுதியான உலோகம் இல்லை என்பதால், வனங்களை அழித்து விவசாய நிலமாக்குவதில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. தவிர, தாமிரத்தைவிட இரும்பின் உருகும் வெப்பநிலை அதிகம். அதற்கேற்ற உலைகளும் தாமிர காலத்தில் கிடையாது. ஆகவே, ஒரு சமூகம் இரும்பின் பயன்பாட்டை அறியத் துவங்கியது என்றால், இரும்பை உருக்குவதற்கான தொழில்நுட்பத்தை அறிந்திருப்பதோடு, நாகரிகத்தின் அடுத்த கட்டத்திற்கும் நகரத் துவங்கியது என்பதைக் குறிக்கிறது. இதற்குப் பிறகு வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட சமூகம் உருவாகி, உபரி உற்பத்தி, செல்வம், இனக் குழுக்களுக்குத் தலைமை, அரசு ஆகியவையும் உருவாகத் துவங்கியது.
ஆகவேதான் இரும்புக் காலத்தின் துவக்கம் எப்போது ஏற்பட்டது என்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது.
உலக அளவில் மிகப் பழமையான இரும்பு 1911ஆம் ஆண்டில் வட எகிப்தில் அல் – கெர்சே (Al – Gerzeh) என்ற இடத்தில் இருந்த கல்லறைகளில் இருந்து எடுக்கப்பட்டது. இந்தக் கல்லறைகளில் இருந்து 9 மணிகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றின் காலம் கி.மு. 3,400 முதல் 3,100வரையாக இருக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இவை இரும்புத் தாதை உருக்கி செய்யப்பட்டவையல்ல. மாறாக விண்கற்களில் இருந்து கிடைத்த இரும்பில் செய்யப்பட்டவை.

தொழில்நுட்பம்

இரும்புத் தாதை உருக்கி இரும்பு செய்யும் தொழில்நுட்பம் கி.மு. 1,300வாக்கில் அனடோலியா (தற்போதைய துருக்கி) பகுதியில் தொடங்கியதாக கருதப்பட்டுவந்தது. அங்கிருந்தே இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் உலகின் மற்ற பகுதிகளுக்குப் பரவியதாகவும் கருதப்பட்டது. ஆனால், இரும்பின் பயன்பாடு எப்படித் துவங்கி, எப்படிப் பரவியது என்பது தொடர்பான விவாதங்கள் இப்போதும் தொடர்ந்து நடந்துவருகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை, கி.மு. 1,000ஆவது ஆண்டுவாக்கில்தான் இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அறிமுகமானதாக ஆரம்பத்தில் கருதப்பட்டது. ஆனால், சமீபத்தில் இந்தியா முழுவதும் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள், இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அதற்கு முன்பே இந்தியாவில் இருந்ததை உறுதிப்படுத்தின.

“உதாரணமாக உத்தரப் பிரதேசத்தின் அக்தாவில் கிடைத்த இரும்பின் காலம் கி.மு. 1,800 முதல் 1,450 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது. தெலங்கானாவின் கச்சிபவுலியில் கிடைத்த இரும்பு கி.மு. 2,200அய் சேர்ந்ததாக இருக்கலாம் எனத் தெரியவந்தது.

இந்த நிலையில்தான், தற்போது ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலம் கி.மு. 2,500 முதல் கி.மு. 3,345வரை இருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆகவே 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் இருந்திருக்கிறது

வட இந்தியாவில் கிடைத்ததைப் போல தமிழ்நாட்டில் அதிக அளவு செம்பு கிடைக்காத காரணத்தால் இங்கு செம்புக் காலம் வழக்கத்திலிருக்கவில்லை. இருந்தபோதும் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட ஈமத் தாழிகளில் கி.மு. 15ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தைச் சேர்ந்த உயர்தர தகர – வெண்கலப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
அதேபோல, சாஸ்தாபுரம், அடுக்கம், சூலப்புரம், திருமலாபுரம், ஆரோவில் போன்ற இடங்களிலும் இதுபோன்ற பொருட்கள் கிடைத்திருக்கின்றன.

அகழாய்வுகள்

ஆனால், தமிழ்நாட்டில் எவ்வளவோ அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் உயர்தர தகர – வெண்கலப் பொருட்களின் உற்பத்தி மய்யம் இருந்ததற்கான சான்றுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்கிறது இந்த அறிக்கை.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்பு தொல்பொருள்களை ஆய்வுசெய்தபோது அவற்றின் காலம் கி.மு. 3,345 வரை செல்வதாக, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

அதாவது, சுமார் 5,350 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ்நாட்டில் இருந்தது கண்டறியப்பட்டிருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

இதற்கு முன்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் கிடைத்த இரு இரும்புப் பொருட்களுடன் இருந்த கரிமப் பொருட்கள் ஏ.எம்.எஸ் (Accelerator Mass Spectrometry – ஒரு மாதிரியில் உள்ள அய்சோடோப்புகளின் விகிதங்களை அளவிடும் நுட்பம்) என்ற முறையில் காலக் கணக்கீடு செய்யப்பட்டபோது, ஒரு கரிமப் பொருளின் சராசரி மய்ய அளவீட்டுக் காலம் கி.மு. 2172 என்று தெரியவந்தது.

ஆகவே, தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாக கருதப்பட்டது. தற்போதைய முடிவுகளின்படி, இரும்பின் பயன்பாடு மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இருப்பது தெரியவந்திருக்கிறது.

இரும்பின் தொன்மை

‘இரும்பின் தொன்மை’ என்ற பெயரிலான இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தற்போது வெளிவந்துள்ள காலக்கணிப்பின்படி உலக அளவில் இரும்பை உருக்கிப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் தமிழ்நாட்டில்தான் முதலில் இருந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டு தொல்லியல் ஆய்வில் இரும்பின் பயன்பாடு மீதான ஆர்வத்தைத் தூண்டியது, சேலம் மாவட்டம் மாங்காட்டில் கிடைத்த இரும்பு வாள்தான். சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டத்தில் உள்ள மாங்காடு என்ற இடத்தில் நடந்த தொல்லியல் ஆய்வில் இரும்பு வாள் ஒன்று கிடைத்தது. இந்த வாளை காலக் கணக்கீட்டுக்கு உட்படுத்தியபோது, அதன் காலம் கி.மு. 1,604 முதல் கி.மு. 1,416 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது. அவ்வளவு தொன்மையான இரும்பு கிடைத்தது தமிழ்நாட்டில் அதுதான் முதல்முறை. இந்தக் கண்டுபிடிப்புதான் தமிழ்நாடு தொல்லியல் வட்டாரத்தில், இரும்பின் மீதான ஆர்வத்தைத் தூண்டியது.

அதற்கடுத்ததாக, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கீழ்நமண்டியில் 2023இல் நடந்த அகழாய்வில் சில ஈமப்பேழைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த ஈமப் பேழைகளில் கிடைத்த இரும்பு மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, அவற்றின் காலம் தோராயமாக கி.மு. 1769 முதல் 1615 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் கிடைத்த இரும்பின் காலமும் கி.மு. 2,172ஆக இருப்பது தெரியவந்தது. இந்தக் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு, இரும்பின் மீதான கவனம் மேலும் அதிகரித்தது. இந்த நிலையில்தான் ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்பு தொல்பொருட்களின் காலம் கி.மு. 2,600 முதல் கி.மு. 3,345 வரை இருப்பது தெரியவந்திருக்கிறது.

ஆதிச்சநல்லூரைப் பொறுத்தவரை, அதன் வாழ்விடப் பகுதியில் 220 செ.மீ. ஆழத்தில் கிடைத்த இரும்புப் பொருளுடன் கிடைத்த கரிமப் பொருட்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், அவற்றின் காலம் சராசரியாக கி.மு. 2613ஆக இருக்கலாம் எனத் தெரியவந்திருக்கிறது. அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் சிறீ வைகுண்டத்திற்கு 10 கி.மீ. தூரத்தில் இருக்கும் சிவகளையில் நடத்தப்பட்ட அகழாய்வில் மூன்று முதுமக்கள் தாழிகள் கிடைத்தன.
இதில் இருந்த கரிமப் பொருட்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அதில் கிடைத்த ஒரு கரிமப் பொருளின் காலம் கி.மு. 3,345 எனத் தெரியவந்திருப்பதாக தமிழ்நாடு அரசின் அறிக்கை கூறுகிறது. ஆகவே, அந்தக் கரிமப் பொருளுடன் இருந்த இரும்பின் காலமும் அதுவாகவே கணக்கிடப்பட்டிருக்கிறது.

“ஹரப்பா நாகரீகத்தை ஆரம்பகால ஹரப்பா நாகரீகம், முதிர்ந்த ஹரப்பா நாகரீகம், பிற்கால ஹரப்பா நாகரீகம் என பிரித்துப் பார்க்க முடியும். ஆரம்பகால ஹரப்பா நாகரீகம் என்பது கி.மு. 3,300வாக்கில் நிலவியது.”

உருக்கு இரும்பு

“தற்போது சிவகளையில் கிடைத்திருக்கும் இரும்பும் அதே காலகட்டத்தைச் சேர்ந்தது. ஹரப்பா நாகரீகத்தைப் பொறுத்தவரை அங்கே இரும்பு கிடையாது. செப்பு தான் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இரும்பு உருக்கி, பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வட இந்தியா செப்புக் காலத்தில் இருந்தபோது, விந்திய மலைக்கு தெற்கே இருந்த பகுதிகள் இரும்புக் காலத்தில் இருந்தன என்ற முடிவுக்கு வர முடியும்”
உறுதிமிக்க உருக்கு இரும்பை தமிழர்கள் கோலிகுண்டு விளையாடவோ, அல்லது சிலை செய்து பூஜிக்கவோ பயன்படுத்தி இருக்க மாட்டார்கள்

குறிப்பாக வட இந்தியாவின் மகாஜனபத் என்ற குடியிருப்புகள் உருவான பிறகு இரும்பின் பயன்பாடு அதிகரித்தது என்று கூறுவார்கள். ஆனால் மகாஜனபத் பட்டியலில் தென் இந்தியா வரவில்லை. மகாஜனபத் காலம் கிமு 1500 ஆண்டுகாலம் ஆகும். ஆதாவது கங்கைச் சமவெளி நாகரீகத்தின் மத்திய காலம் என்று கருத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மகாஜனபத் என்ற மனிதக் குடியிருப்புகளுக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் உறுதியான இரும்பை தயார் செய்து அதனை பயன்படுத்த துவங்கிவிட்டார்கள் என்றால் அவர்கள் இந்த உறுதியான இரும்பின் மூலம் பல கருவிகளைக் கண்டுபிடித்திருப்பார்கள்.

அந்த கண்டுபிடிப்புகள் என்ன என்ன என்ற ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்த ஆய்வுகளின் முழுமையான விவரம் வரும் போது தமிழர்கள் தான் நாகரீகத்தின் துவக்கப்புள்ளியாக இருந்தனர் என்பது தெரியவரும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *