அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இனி கனவுதான் ஆனால் அய்ரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற எளிய விதிகள்

viduthalai
2 Min Read

வாசிங்டன், ஜன. 24- அமெரிக்காவில் எச்-1பி விசாவை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த விசா திட்டம் முடிவுக்கு வந்தால், இந்தியர்கள் அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவது கடினமாகிவிடும். எனவே வெளிநாட்டில் கனவுடன் இருப்பவர்கள் அமெரிக்காவுக்கு மாற்றாக வேறு சில நாடுகளைப் பற்றி யோசிக்கலாம்.
சில நாடுகளில் அங்கு வந்து படிக்கும் இந்தியர்களுக்கு படிப்பை முடித்த பிறகு நிரந்தர குடியுரிமையை பெறுவது எளிதாக இருக்கும். அந்த நாடுகளைப் பற்றி இத்தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

பிரான்ஸ்:

அய்ரோப்பிய நாடான பிரான்சில் அய்ந்து ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, மாணவர்கள் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். படிப்பை முடித்த பிறகு, மாணவர்கள் ‘தற்காலிக குடியுரிமை அனுமதிக்கு’ விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் முதுகலை படித்திருந்தால் அல்லது சொந்தமாக நிறுவனத்தைத் தொடங்க விரும்பினால் மட்டுமே இந்த அனுமதி கிடைக்கும். அனுமதி பெற்ற பிறகு, நீங்கள் நாட்டில் அய்ந்து ஆண்டுகள் செலவிட வேண்டும், பின்னர் நீங்கள் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

அயர்லாந்து:

அயர்லாந்தில் மூன்று நிபந்தனைகளுக்குப் பின் நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படுகிறது. அதில் முதல் நிபந்தனை, மாணவர் விசாவில் வந்து உங்கள் படிப்பை முடிக்க வேண்டும். பிறகு பட்டதாரி விசா பெற்று ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை வேலை செய்ய வேண்டும். இந்த விசா மூலம் ‘ஸ்பான்சர்ஷிப்’ இல்லாமல் முழுநேர வேலையைச் செய்ய முடியும். பட்டதாரி விசாவில் இருக்கும்போது, நீங்கள் ஒரு வேலைக்கு நீண்ட காலத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். குறைந்தபட்சம் அய்ந்து ஆண்டுகளுக்கு வேலை செய்ய வேண்டும். இதற்குப் பிறகு நிரந்தரக் குடியுரிமைக்கு தகுதி பெறுவீர்கள்.

நார்வே:

நார்வேயில் நிரந்தர குடியுரிமை பெற, குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு குடியிருப்பு அனுமதி பெற்றிருக்க வேண்டும். படிப்பின்போது செலவழித்த நேரம் இதில் கணக்கிடப்படாது. நிரந்தரக் குடியுரிமைக்கு, நீங்கள் ஒரு நார்வே பல்கலைக்கழக பட்டம் பெற்றிருக்க வேண்டும். உங்களை நிதி ரீதியாக ஆதரிக்க போதுமான பணம் உங்களிடம் இருக்க வேண்டும். நார்வே மொழியும் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் பெயரில் குற்றவியல் பதிவு எதுவும் இருக்கக்கூடாது. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்த பிறகு, நீங்கள் நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
நெதர்லாந்து:
நெதர்லாந்தில் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க, வெளிநாட்டு மாணவர்கள் படிக்கும் நேரம் உட்பட குறைந்தது அய்ந்து ஆண்டுகள் அந்நாட்டில் வாழ்ந்திருக்க வேண்டும். சிலர் அய்ந்தாண்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக படிப்பை முடித்த உடனேயே ஓரியண்டேஷன் ஆண்டிற்கான குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கின்றனர். இதனால் மேலும் படிக்க நேரம் கிடைக்கும். அய்ந்தாண்டு நிபந்தனையை முடித்தவுடன், நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

ஜெர்மனி:

ஜெர்மனியில் உங்கள் படிப்பை முடித்த பிறகு, செட்டில்மென்ட் பெர்மிட் (ஜெர்மனில் நிரந்தர குடியுரிமை) பெறுவீர்கள். ஆனால் இதற்காக, இரண்டு ஆண்டு வேலைக்கான குடியிருப்பு அனுமதி பெறுவது போன்ற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதற்காக முதலில் ஜெர்மனியில் ஒரு வேலை தேட வேண்டும். ஜெர்மன் மொழியும் தெரிந்திருக்க வேண்டும். மற்ற அய்ரோப்பிய நாடுகளைவிட ஜெர்மனியில் நிரந்தர குடியுரிமை பெறுவது எளிது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *