புனே, ஜன.23 மராட்டிய மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் புஷ்பக் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக அஞ்சி பயணிகள் சிலர் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ரயில் நின்றது. தொடர்ந்து புஷ்பக் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தியை நம்பி சில பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி ஓடியுள்ளனர்.
அவர்கள் தண்டவாளத்தைக் கடந்தபோது மறுபுறம் வந்த கருநாடக விரைவு ரயில் பயணிகள் மீது மோதியதில் 11 பேர் உயிரிழந்ததாகவும், 40 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. விபத்தை அடுத்து மீட்பு பணிகளை ரயில்வே அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்தநிலையில், உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.