நேற்றைய (22.1.2025) தொடர்ச்சி…
முதலாளி – தொழிலாளி
“இந்தியா உண்மையான விடுதலை பெறுவதற்கு வருணாசிரம மத வித்தியாசங்களை அடியோடு அழித்து கடவுள், மோட்சம், கர்மபலன், மறு பிறப்பு, விதி முதலிய விஷயங்களில் இருந்துவரும் மூட நம்பிக்கையை ஒழித்து, தன் நம்பிக்கையையும், தன் முயற்சியையும் உண்டாக்கும்படியான கொள்கைகளை மக்களுக்கு புகட்டி, பூமிக்கு உடையன் – குத்தகைக்கு உழுபவன், முதலாளி – தொழிலாளி, ஆண் – பெண், மேல் ஜாதி – கீழ் ஜாதி என்ற பேதங்களை அகற்றி தொழில் முறைகளிலும், சமுக வாழ்விலும், அரசியலிலும் சகலருக்கும் ஈடுபட அவகாசமும், சம அந்தஸ்தும் சம உரிமையும், சம ஊதியமும் கிடைக்கக்கூடிய முறையில் நமது சமுகத்தைத் திருத்தியமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று இம்மகாநாடு கருதுகின்றது என்பவைகளாகும்.
ஆகவே, உண்மையான விடுதலைக்கு இந்திய மக்கள் இப்போது செய்ய வேண்டிய வேலையிதுவே யாகும். இந்த வேலைத் திட்டம் காங்கிரசிலோ, காந்தியத்திலோ கிடையாது என்பதை அறிஞூர் ஒவ்வொருவரும் அறிந்தே இருப்பார்கள். காங்கிரசின் 20 திட்டங்களிலும் ஜவஹர்லாலின் பூரண சுயேச்சைத் திட்டத்திலும், காந்தியின் ராமராஜ்யத் திட்டத்திலும் இவை கிடையாதென்றும் சொல்லுவோம்.
சுயராஜ்யப் பிரச்சினையும் பூரண சுயேச்சை விளம்பரமும், ராமராஜ்ய கோஷமும் ஒரு சில தனிப்பட்டவர்களின் பெருமைக்கோ, நன்மைக்கோ மாத்திரம் என்றால் அவை சரியான திட்டங்கள்தான். அப்படிக்கில்லாமல் “இந்திய மக்கள் 35 கோடி ஜனங்களுக்காக நாங்கள் கேட்கின்றோம்” என்றால் அவைகளை நாம் ஒருக்காலும் ஒப்புக் கொள்ள முடியாது. அவை இந்தியாவை இன்னமும் மோசமான நிலைமைக்குத்தான் கொண்டு போய்விடும்.
சமதர்மம்
கர்மத்தையும், கடவுள் செயலையும் நம்புகின்றவர் களுக்குச் சுதந்திரமும், சமதர்மமும் இல்லையென்பதை அறிவுள்ளவன் உணராமல் இருக்க மாட்டான்.
அவ்விரண்டும் வெகு நாளைக்கு முன் ஒழிக்கப் பட்டு இருந்திருக்குமானால் இன்று சுயராஜ்யத்திற்கும், பூரண சுயேச்சைக்கும் நாம் யாருடைய தயவையும் எதிர்பார்க்க வேண்டியிருக்காது. “சுயராஜ்யமென்கின்ற செப்பிடு வித்தையை வைத்துக் கொண்டு அந்நிய நாட்டாரின் ஆட்சி கூடாது” என்று சொல்லுகின்றார்களே யொழிய, இன்ன ஆட்சி முறை கூடாது என்று சொல்லுவதில்லை. இது வேண்டுமென்றே சூழ்ச்சியால் மறைக்கப்பட்டிருக்கின்றதென்றே சொல்லுவோம்.
நம்மைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட கொள்கை மக்களை ஆட்சி புரிய வேண்டுமேயொழிய ஒரு குறிப்பிட்ட நாட்டார்களோ, வகுப்பார்களோ, மதக்காரர்களோ ஆட்சி புரிய வேண்டும் என்பதல்ல. பல மதம், பல ஜாதி, பல சமுக அபிமானம் கொண்டு மக்கள் வாழும் நாட்டில் பல மதம், பல ஜாதி, பல சமுக அபிமானம் ஆகியவைகள் ஒழிகின்ற வரை இவைகளில் சம்பந்தப்படாத அல்லது ஜாதி, மத சமுக வித்தியாசமோ, அபிமானமோ இல்லாத அவைகளில் கவலையற்ற மக்கள்தான் ஆட்சி புரிய வேண்டும் என்போம். அதனாலேதான் பிரிட்டிஷ் கவர்ன்மெண்டு ஒழிந்தால் ருஷிய அரசாங்கக் கொள்கையே இந்தியாவை ஆட்சி புரிய வேண்டும் என்கின்றோம். அந்தக் காலத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ தகராருக்கு இடமேயிருக்காது. தீண்டாமைக் கொடுமைக்கு இடமிருக்காது. ராமராஜ்யத்தைப் பற்றிய பேச்சே இருக்காது. தகப்பன் எலும்பைக் கங்கையில் போட்டு மோட்சம் தேடிக் கொடுக்கும் செப்பிடு வித்தையும் நடக்காது. ஆகையால், அப்படிப்பட்ட ஆட்சி யோக்கியமான முறையில் சமாதான முறையில் நமக்கு வேண்டுமானால் தூத்துக்குடி தீர்மானப்படி மக்களைத் தயார் செய்ய வேண்டியதே முக்கிய கடமையாகும்.
சுயராஜ்ய தத்துவம்
நமது லட்சியம் இன்னது, தேவையின்னது என்று வெளியிடுவதில் உள்ள தந்திரமே இன்று நாம் பொதுவாழ்வில் அபிப்பிராய பேதமும், அல்லலும் பட்டுக்கொண்டு இருக்கின்றோம். இந்துக்கள் சுயராஜ்ய தத்துவம் இந்துமத ராஜ்யமாக வேண்டும் என்பதும், முஸ்லீம்களின் சுயராஜ்ய தத்துவம் இஸ்லாம் ராஜ்யமாக வேண்டுமென்பது தவிர, வேறு அர்த்தத்தைக் கொண்டிருக்கவில்லை என்று கோபுரத்தின் மீது இருந்தும் கூவுவோம். இந்த இரண்டு அந்தரார்த்தமும் இரு சமுக பாமர மக்களையும் பூச்சிப் புழுக்களாக்கி நசுக்கிப் பிழிகின்றன. ஆனால், மத வெறியால் இக்கஷ்டத்தை மக்கள் உணர முடியாமல் மறைக்கப்பட்டிருக்கின்றது.
இந்தியாவில் உள்ள இந்து வாலிபர்களானாலும் சரி, முஸ்லீம் வாலிபர்களானாலும் சரி, மதத்தை அடியோடு மறந்தாலல்லது மனித விடுதலை கிடையாது, கிடை யாது என்கின்றோம். ஆங்கிலேயனுக்கு மதமில்லை, அமெரிக்கனுக்கு மதம் இல்லை. பிரஞ்சியனுக்கு மதம் இல்லை. அவர்கள் மதம் எதையும் தியாகம் செய்து உலகபோக போக்கியத்தைத் தாங்களே அனுபவிக்க வேண்டுமென்பதைத் தவிர வேறில்லை. ருஷியாக்காரனுக்கு அதுகூட கிடையாது. எல்லா இன்பங்களும் எல்லா மக்களுக்கும் பொது. ஆகையால், சகலத்தையும் எல்லோருக்கும் சமமாய் அனுபவிக்க வேண்டும் என்பதே அவர்கள் மதம். இதுவே உயர்ந்த எண்ணம், உயர்ந்த மதமென்று உணருங்கள். அன்பையும், சமத்துவத்தையும் உண்மை மதமாய்க் கொண்ட எவனும் இந்தக் கொள்கையை ஆட்சேபிக்க மாட்டான். அன்பும், சத்தியமும், சமத்துவமும்தான் கடவுள் என்ற, கடவுள் நம்பிக்கை கொண்ட எவனும் இதை ஆட்சேபிக்க மாட்டான்.
அந்தப்படி யாராவது அன்பையும், சத்தியத்தையும், சமத்துவத்தையும் கடவுள் என்றும் மதம் என்றும் பண்ணிக் கொண்டிருக்கின்ற ஒருவன் சமதர்மக் கொள்கையையும், பொது உடைமைக் கொள்கையையும் ஆட்சேபிப்பானேயானால் அவன் கடவுள் பேராலும், மதத்தின் பேராலும், மக்களை ஏமாற்றித் திரியும் பாஷாண்டியே யாவான் என்பதை தூக்குமேடையிலிருந்து சொல்லுவோம். ஆகையால் வாலிபர்களே! ஏமாந்து பாஷாண்டிகள் கையில் நாட்டைக் காட்டிக் கொடுத்து விடாமல் தைரியமாய் நின்று உண்மையைச் சொல்லுங்கள். உண்மைக்காகக் கும்பல் கும்பலாய் உயிர் விடுவதில் நாட்டுக்கு ஒன்றும் நஷ்டம் வராது. இந்தியாவுக்கு ஏற்கனவே பூபாரம் அதிகமாய் விட்டது. ஏதாவது காரணத்தால் பூபாரம் சற்று குறைந்ததால் இருக்கின்ற மக்களுக்குச் சற்று சவுகரியம் அதிகம் ஏற்படலாம்.
ஏனெனில், இந்தக் கோழை நாட்டிற்கு, வஞ்சக நாட்டிற்கு, சோம்பேறி நாட்டிற்கு, மனிதர்களைத் தின்னும் மர நாட்டிற்கு முப்பத்தைந்தரைக் கோடி மக்கள் இருப்பதானது இந்த நாட்டிற்கு மிகவும் பாரமாகும். ஆகையால், உண்மைக்கும் சமத்துவத்திற்கு மிடையில் உயிரை விடுவது நன்மையாகும். நாம் பொது உடமைக் கொள்கை ஏற்படுத்த வேண்டும் என்பது இந்து மதத்திற்கும், மனுதர்மக் கொள்கைக்கும் கேடு செய்ததாகாது. அவைகளின் பலனை அவை அனுபவிக்கச் செய்ததாகுமே தவிர வேறில்லை. மனுதர்ம சாஸ்திரத்தில் சூத்திரன் (தொழிலாளி) சொத்து வைத்திருந்தால் பார்ப்பான் (சோம்பேறி) பலாத்காரத்தால் பிடுங்கிக் கொள்ளலாம் என்று இருக்கின்றது. ஆனால், நாம் இப்போது சோம்பேறி பணம் வைத்திருந்தால் பலாத்காரமில்லாமல் பிடுங்கிக் கொள்ளலாம் என்று தான் சொல்லுகின்றோம். இது தான் சுயமரியாதை இயக்கத்தின் கடைசி லட்சியம். ஆகையால், இதை அக்கிரமமன்று எந்த அறிவாளி, எந்த யோக்கியன் சொல்லக்கூடும் என்று கேட்கின்றோம்.
ஆகவே, இதற்கு விரோதமான எந்த ஸ்தாபனமும், எந்த தர்மமும், சுயமரியாதை இயக்கத்துடன் சேரவோ, ராஜி பேசவோ முடியாது என்பதையும், இதனால் என்ன வருவதனாலும் சுயமரியாதைச் சங்கத்தார் பொறுத்தருள வேண்டும் என்றும் உண்மையாய்த் தெரிவித்துக் கொள்வதோடு சத்தற்ற எலும்பைக் கடித்து பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலியுண்டாக்கிக் கொள்வதுபோல் அந்நியன், அந்நியன் என்கின்ற உணர்ச்சியில் வெள்ளைக்காரர்களுடன் மோதிக் கொள்வதில் பயனில்லை என்றும் நமது நோக்கம் தடைபடும் என்றும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
குடிஅரசு – தலையங்கம் – 12.4.1931