சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு மே மாதம் 25ஆம் தேதி நடைபெறும் பட்டதாரிகள் பிப்ரவரி 11ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்

viduthalai
3 Min Read

புதுடில்லி, ஜன.23 சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு மே 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு பட்டதாரிகள் பிப்ரவரி 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

சிவில் சர்வீஸ் பணி

அய்ஏஎஸ், அய்பிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். இதில் பட்டதாரிகள் பெறும் மதிப்பெண்கள் வைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படும். அதன்படி நடப்பாண்டு 979 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது.

முதல் நிலைத் தேர்வு

இதையடுத்து முதல்நிலைத் தேர்வு மே 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வெழுத விரும்பும் பட்டதாரிகள் https://upsc.gov.in/ எனும் வலைத்தளத்தில் பிப்ரவரி 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அவற்றை பிப்ரவரி 12 முதல் 18-ஆம் தேதி வரை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். தேர்வுக்கான பாடத்திட்டம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம் உட்பட கூடுதல் தகவல்களை மேற்கண்ட வலைத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம் என்று யுபிஎஸ்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வக மேம்பாட்டுக்காக
கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட்டுக்கு
ரூபாய் 12 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை, ஜன.23 சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டுக்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

ரூ.12 கோடி நிதி

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (22.1.2025) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தில் தமிழ்நாடு அரசின் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கீழ் சென்னை கிண்டியில் நோய் தடுப்பு கிங் மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையம் (கிங் இன்ஸ்டிடியூட்) செயல்பட்டு வருகிறது.
இந்த ஆராய்ச்சி நிலையத்துக்கு நவீன வகை கருவிகளுடன் மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டுக்கு ரூ.12 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கிண்டி நோய் தடுப்பு கிங் மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மருந்துகள் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்திடம் இருந்து ஊசி மூலம் செலுத்தப்படும் அனைத்து மருந்து மாதிரிகள் வாடிக்கையாகவும் இடை சோதனைக்காகவும் பெறப்பட்டு பல்வேறு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.
மருந்து சார்ந்த பாதுகாப்பு கண்காணிப்பு, இந்திய ரத்த கண்காணிப்பு திட்டம் போன்ற திட்டங்களின் மருந்து சார்ந்த தீய விளைவுகள் மற்றும் புகார்கள் தன்மை கண்டறிதலும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த மருந்துகள் தர கட்டுப்பாடு நவீன ஆய்வகத்தில் மருந்துகளின் தரங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதனால், ஆரம்ப சுகாதார மய்யங்கள், மருத்துவ மனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் பொதுமக்கள் முக்கியமாக பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் பல இணை நோய்களால் பாதிக்கப்பட்டோர் பயன்பாட் டுக்கு பாதுகாப்பான தரமிக்க மருந்துகள் மட்டுமே சென்றடையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியாயவிலைக் கடைகளை இயக்க ரூ.300 கோடி மானியம் விடுவிப்பு
தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, ஜன.23 நியாயவிலைக் கடைகளை தொடா்ந்து சிறப்புடன் இயக்குவதற்காக கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.300 கோடி மானியத்தை விடுவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

கூட்டுறவுத் துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சங்கங்கள் சாா்பில், 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் செயல்படுகின்றன.

இந்தக் கடைகளை நடத்துவதால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்வதற்கு ரூ.300 கோடி அளவுக்கு முன்பண மானியமாக அனுமதிக்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தாா்.
இதனைப் பரிசீலனை செய்த தமிழ்நாடு அரசு முன் பணமானியமாக ரூ.300 கோடி வழங்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி, 2024–-2025ஆம் ஆண்டுக்கான முன்பண மானியமாக ரூ.300 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகை தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மூலம் மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டு, அங்கிருந்து நியாயவிலைக் கடைகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *