பாட்னா, ஜன.22 பீகாரில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், போராட்டத்திற்குத் தன்னுடைய ஆதரவை தெரிவித்தார்.
பீகார் அரசு பணியாளர் தேர்வாணையம் (BPSC) சார்பில் நடத்தப்பட்ட தேர்வு விதிகள் மீறப்பட்டதாகவும், அந்தத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், பாட்னாவின் கர்தானி பாக்கில் தேர்வர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் போராட்டக் களத்திற்கு நேரில் சென்றார். அங்கு இளைஞர்களின் கோரிக்கையை கேட்டறிந்தார்.
பீகார் முதலமைச்சருக்கு…
இது குறித்து ராகுல் தனது ‘எக்ஸ்’ தளத்தின் மூலம் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு ஒரு கோரிக்கை விடுத்தார். அந்தப் பதிவில், ‘பீகார் முதலமைச்சருக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். போராடும் மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிடாமல், நேரில் அவர்களை சந்தித்து, கோரிக்கைகளை கேட்டறிந்து, அதனைப் பரிசீலிக்க வேண்டும்.’
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.