பாட்னா, ஜன.21- பீகாரில் கள்ளச் சாராயம் குடித்து 7 பேர் பலியானதாகக் கூறப்படும் நிலையில் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றது.
பீகாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் தொடர்ந்து 7 பேர் பலியானதைத் தொடர்ந்து அவர்கள் கள்ளச் சாராயம் குடித்து பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் முதல் மரணம் ஏற்பட்டு 4 நாள்கள் கடந்த நிலையில் பலியான 7 பேரின் உடல்களும் ஏற்கெனவே எரியூட்டல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கள்ளச் சாராயப் பலி
விசாரணையில் பலியான அனைவரும் லாரிய காவல் நிலைய வட்டத்துக்குள் இறந்தது தெரிய வந்துள்ளது.
இவர்கள் அனைவரும் கள்ளச் சாராயம் குடித்து பலியானதாக அந்தப் பகுதிவாசிகள் தெரிவித்த நிலையில், அதில் ஒருவர் டிராக்டர் விபத்தில் பலியானதாகவும், மற்றொருவர் பக்கவாதத்தில் பலியானதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். “முதல் மரணம் ஜனவரி 15 ஆம் தேதி நிகழ்ந்தது.
ஆனால், நேற்றுதான் (ஜன. 20) இந்த சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரியவந்தது. மீதமுள்ள 5 மரணங்களுக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.
ஏனெனில் ஏழு உடல்களும் காவல் துறைக்கு தகவல் தெரிவிப்பதற்கு முன்பே எரியூட்டல் செய்யப்பட்டன. இதற்கான காரணத்தைக் கண்டறிய நாங்கள் ஒரு குழு ஒன்றை அமைத்துள்ளோம்,” என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
விசாரணைக் குழு
இதனைத் தொடர்ந்து, 24 மணி நேரத்தில் இந்த சம்பவம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பலியான நபர் ஒருவரின் சகோதரர் கூறுகையில், “என் சகோதரர் பிரதீப் அவரது நண்பருடன் கள்ளச் சாராயம் குடித்தார். இருவருமே இறந்து விட்டனர்” என்று கூறினார்.
பீகாரில் மது விற்பதற்கும் அருந்து வதற்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.