பெங்களூரு, ஜன.18- இன்ஃபோசிஸ் நிறுவனம் நேற்று (17.1.2025) தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது, டிசம்பர் காலாண்டில் சிறப்பான லாபத்தையும், வருவாயும் பதிவு செய்தாலும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களை ஈர்க்க தவறியுள்ளது. இந்த நிலையில் நேற்று (ஜனவரி 17) இன்போசிஸ் பங்கு விலை கடந்த கடுமையாக சரிவடைந்தது.
பாதிப்பு
இதனால் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் குடும்பமான நாராயணமூர்த்தி குடும்பத்தின் சொத்து மதிப்பு பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் பங்கு விலை கிட்டத்தட்ட 6 சதவீதம் சரிந்து ரூ.1,812.70 க்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த வீழ்ச்சியின் காரணமாக நாராயணமூர்த்தி குடும்பத்திற்கு சுமார் ரூ.1,900 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
நாராயணமூர்த்தி தி குடும்பம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மொத்தம் 4.02 சதவீதம் பங்குகளை வைத்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரா என்.ஆர்.நாராயணமூர்த்தி 0.40 சதவீதம் பங்குகளை வைத்துள்ளார். அவரது மனைவியும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுதா மூர்த்தி 0.92 சதவீதம் பங்குகளையும், மகன் ரோகன் மூர்த்தி 1.62 சதவீதம் பங்குகளையும் வைத்துள்ளனர்.
வீழ்ச்சி
இதை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் மேனாள் பிரதமர் ரிஷி சுனக்-ன் மனைவியும், நாராயண மூர்த்தியின் மகளுமான அக்ஷதா மூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தில் 1.04 சதவீதம் பங்குகளை வைத்துள்ளார். மேலும், நாராயண மூர்த்தி பேரன் எகாகிரஹ் ரோகன் மூர்த்தி 0.04 சதவீதம் பங்குகளை வைத்துள்ளார். இப்படி நாராயண மூர்த்தி-யின் குடும்பம் மொத்தமாக 4.02 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.
நேற்றைய (17.1.2025) சந்தை வீழ்ச்சிக்கு முன்னர், நாராயண மூர்த்தி குடும்பத்தின் இன்ஃபோசிஸ் பங்குகளின் மதிப்பு ரூ.32,236 கோடியாக இருந்தது. ஆனால் பங்கு விலை 6 சதவீதம் வரையில் சரிவடைந்ததால், அவர்களது பங்குகளின் மதிப்பு ரூ.30,334 கோடியாக குறைந்துள்ளது. இதன் காரணமாக அவர்களின் மொத்த சொத்து மதிப்பில் 1900 கோடி ரூபாய் சரிவு ஏற்பட்டுள்ளது.