கொல்கத்தா, ஜன.17 ராமன் கோவில் குடமுழுக்கு செய்யப்பட்ட நாள்தான் இந்தியாவின் உண்மையான சுதந்திர நாள் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. இதைப்போல திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தாவும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இது தேசவிரோதம். நான் இதை கடுமையாக கண்டிக்கிறேன். இது ஒரு ஆபத்தான கருத்து. இதை நிச்சயம் திரும்பப்பெற வேண்டும். இது வரலாற்றை திரிக்கும் முயற்சி. நமது சுதந்திரத்தை பாதுகாக்க நாம் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். இந்தியாவுக்காக எங்கள் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம். இந்த கருத்தை பொறுத்துக்கொள்ள மாட்டோம்’ என சாடினார்.
நீதிமன்றங்களில் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி கழிப்பறைகள் உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஜன.17 இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் அணுகக் கூடியதாகவும், மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தக் கூடிய வகையிலும் பொது கழிப் பறைகளை கட்ட உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜே.பி.பர்திவாலா, நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (16.1.2025) விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “கழிப்பறை என்பது வசதிக்கானது மட்டுமல்ல, மனித உரிமையின் அடிப்படை அம்சமாகும்” என்று குறிப்பிட்டனர்.
தனி கழிப்பறைகள்
மேலும், “அரசமைப்பின் 21-ஆவது பிரிவின் கீழ், சரியான சுகாதார வசதி என்பது ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது வாழ்வுரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை உறுதி செய்கிறது” என்று தெரிவித்த நீதிபதிகள், அனைத்து நீதிமன்றங்களிலும், குறிப்பாக முறையான வசதிகள் இல்லாத இடங்களில் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மற்றும் ஊழியர்கள் எளிதில் அணுகக்கூடிய கழிப்பறை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு தனித்தனி கழிப்பறைகளை கட்ட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த பணிகளை கண்காணிக்க 6 வாரங்களுக்குள் அனைத்து மாநில நீதிமன்றங்களிலும் ஒரு நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.