அமெரிக்காவில் இருந்து நிலவில் ஆய்வு நடத்த இரண்டு லேண்டர்கள் அனுப்பி வைப்பு

Viduthalai
1 Min Read

வாசிங்டன், ஜன.16 1960-களில் இருந்து நிலவின் மேற்பரப்பில் 5 நாடுகள் மட்டுமே வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கி உள்ளன. மேனாள் சோவியத் யூனியன், அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகியவை தான் அந்த நாடுகள். அதிலும், நிலவின் தென்துருவத்தில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இதற்கிடையே, நிலவில் ஆய்வு நடத்துவதற்காக, ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் தனது ‘பால்கன் 9’ ராக்கெட் மூலம் 2 ‘லேண்டர்’ சாதனங்களை நிலாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. அமெரிக்காவில் கேப் கேனவரல் நகரில் உள்ள அமெரிக்க விண் வெளி மய்யமான ‘நாசா’வின் கென்னடி விண்வெளி மய்யத்தில் இருந்து நேற்று (15.1.2025) அவை செலுத்தப் பட்டன. 2 ஆண்டுகளுக்கு முன்பு, ஜப்பான் நாட்டின் ‘அய்ஸ்பேஸ்’ நிறுவனத்தின் முதலாவது ‘லேண்டர்’ நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளானது. தற்போது, அந்நிறுவனம் தனது லேண்டரை மீண்டும் அனுப்பி வைத்துள்ளது. அதனுடன் ‘ரோவர்’ சாதனமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்காக நிலவில் அழுக்குகளை சேகரிக்க ‘ரோவர்’ சாதனம் பயன்படுத் தப்படும். எதிர்கால ஆராய்ச்சியாளர்களுக்காக நிலவில் உணவு மற்றும் நீர் ஆதாரம் இருக்கிறதா என்ற ஆய்வும் நடத்தப்படும். இது போல், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த ‘பயர்பிளை ஏரோஸ் பேஸ்’ நிறுவனத்தின் ‘லேண்டர்’ சாதனம் முதல் முறையாக நிலாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.2 மீட்டர் உயரம் கொண்ட அந்த லேண்டர், முதலில் நிலாவை சென்றடையும். மார்ச் மாதத்தின் ஆரம்பத்திலேயே போய்ச் சேரும். ஆய்வுக்காக அழுக்குகளை சேகரிக்கும். மேற்பரப்புக்கு அடியில் நிலவும் வெப்பநிலை அளவிடப்படும்.

ஆனால், சற்று பெரிதான ‘ஐஸ்பேஸ்’ நிறுவனத்தின் லேண்டர் மெதுவாக பயணம் செய்யும். மே மாதம் அல்லது ஜூன் மாதத்தில்தான் நிலவில் தரையிறங்கும். மேற்கண்ட 2 லேண்டர்களும் ஒன்றாக ராக்கெட்டில் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், 1 மணி நேரத்துக்கு பிறகு, திட்டமிட்டபடி பிரிந்து, தனித் தனி சுற்றுவட்டப் பாதையில் பயணத்தை தொடர்ந்தன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *