புதுடில்லி, ஜன. 12- ஆம் ஆத்மி ஆதரவு வாக்காளர்களை நீக்கியுள்ளார்கள் என்ற புகார் கூறியநிலையில் எங்கள் ஆதரவாளர்களை யாரோ நீக்கியுள்ளனர் என்று புகார் கூறியுள்ளது பாஜக.
புதுடில்லியில் 60 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக பா.ஜ. பிரமுகர் பர்வேஷ் வர்மா குற்றம்சாட்டி உள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே புதுடில்லி சட்டப் பேரவைக்கு பிப்.5ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பிப்.8ஆம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
60 ஆயிரம்
வாக்காளர்கள் நீக்கம்!
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் ஆம் ஆத்மி, காங்., பா.ஜ., ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் குதித்துள்ளன. இந் நிலையில், புதுடில்லியில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 60 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாக பா.ஜ.க. குற்றம்சாட்டி உள்ளது.
இந்தக் குற்றச்சாட்டை அக்கட்சியின் தலைவரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பர்வேஷ் வர்மா கூறி உள்ளார். அவர் மேலும் கூறி இருப்பதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் புதுடில்லியில் 60 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் காணாமல் போயுள்ளன. புதிய பட்டியலில் 20 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் ஊடகத்திற்கு பேட்டியளித்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக “ஆபரேசன் லோட்டஸ்” என்ற பெயரில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவான வாக்காளர்களை ரகசியமாக நீக்கி வருகின்றனர், எப்பாடுபட்டாவது தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வாக்களார் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது போன்ற நேர்மை யற்ற வழிமுறைகளை கையாளத் தொடங்கிவிட்டது.
எனது புதுடில்லி தொகுதியில் டிசம்பர் 15ஆம் தேதி முதல் “ஆபரேஷன் லோட்டஸ்” செயலில் உள்ளது. 5 ஆயிரம் வாக்காளர்களை நீக்குவதற்கான விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. புதிதாக 7 ஆயிரத்து 500 வாக்காளர்களை இணைப்பதற்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஷாதாராவில் மட்டும் 11,800 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் தேர்தல் ஆணையத்தின் தலையீட்டால் இந்த நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 29ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் புதுடில்லியில் செய்த சுருக்க திருத்தத்தில் புதிதாக 1 லட்சம் வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
என்றாலும் பாஜகவின் வாக்காளர் பட்டியலில் 12 சதவீத முறைகேடு குற்றச்சாட்டு தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது.” என்று தெரிவித்தார்.
அரசியல் அழுத்தம்
மேலும், “ஒரு தொகுதியில் முறையே 2 மற்றும் 4 சதவீதங்களுக்கு அதிகமாக வாக்களார்கள் சேர்ப்பு மற்றும் நீக்கம் நடந்திருந்தால் தேர்தல் பதிவு அதிகாரிகள் அதனை ஆழமாக சரிபார்க்க வேண்டும்.
எந்த அரசியல் அழுத்தத்துக்கும் அடிபணியாமல் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அந்த கோப்புகளில் உங்கள் கையெழுத்து பல ஆண்டுகளுக்கு நீடித்திருக்கும். தவறாக எதுவும் செய்ய வேண்டாம். பின்னர் அதற்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும்.” என்றும் வலியுறுத்தினார்.
பட்டியல் நீக்கப்பட்ட பலரை நேரில் அழைத்துவந்து இவர்கள் குறிப்பிட்ட முகவரியில் இல்லை என்று கூறி பெயரை நீக்கி உள்ளனர். ஆனால் இவர்கள் அங்கேதான் ஆண்டாண்டு காலமாக உள்ளனர் என்று கூறி இருந்தார்.