சென்னை, ஜன. 11- சென்னையில் தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பின் தலைவர் அதியமான் தலைமையில் அருந்ததியர் உள்இடஒதுக்கீடு பாதுகாப்பு பேரணி நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதீர்மானங்கள் வருமாறு:
அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டையாக வாழ்ந்து வந்த அருந்ததியர் சமூகத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் (2009) முன்னெடுக்கப்பட்ட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்றுத்தர உறுதுணையாக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓட்டுமொத்த அருந்ததியர் சார்பாக தெஞ்சார்ந்த நன்றியினை தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு தெரிவித்துக் கொள்கிறது.
தாழ்த்தப்பட்ட (பட்டியல்) சமூகங்களில் ஒன்றுக்கொன்று படிநிலைச் சமூகங்களாகத்தான் இருந்து வருகின்ற சூழலில் பட்டியலில் உள்ள 16 ஜாதிகள் கல்வி வேலை வாய்ப்புகளில் அவரவர் மக்கள் தொகைக்கு உரிய சமூகநீதி கிடைக்கப்படவில்லை.
சமூகநீதியை உறுதி செய்கின்ற வகையில் மொத்தமுள்ள பட்டியல் ஜாதிகளில் முன்னேறியவர்கள், பின் தங்கியவர்கள் என்பதை கண்டறிந்து அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப அதேசமயம் பின்தங்கிய நிலையையும் கருத்தில் கொண்டு இட ஒதுக்கீடை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வகைப்படுத்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
இந்திய சமூக அமைப்பு படிநிலை ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கியதாகும். காலம் காலமாக ஒரு சில குறிப்பிட்ட சமூகங்களே இட ஒதுக்கீட்டின் உரிமைகளை அனுபவித்துக்கொண்டு கல்வி, பொருளாதாரம், அரசியல், அதிகாரம் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் முன்னேறி வருகின்றனர். பெரும்பான்மையாக வாழ்கின்ற பிற்படுத்தப்பட்ட, ஓடுக்கப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டு உரிமைகள் சென்று சேரவில்லை. சமூகநீதி நிலைக்கு வேண்டும் என்றால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற வேண்டும்.
எனவே மத்தியில் ஆட்சிசெய்கின்ற பாரதிய ஜனதா கட்சி அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.