ஆசிரியர் விடையளிக்கிறார்

4 Min Read

கேள்வி 1: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் முற்றாக மாநில அரசை பல்கலைக்கழகங்களின் மானியக் குழு அப்புறப்படுத்தும் நிலையில் மாநில கட்சிகளான தெலுங்கு தேசமும், அய்க்கிய ஜனதா தளமும் எதிர்க்கவில்லையே?

– ரவீந்திரன், ஊற்றங்கரை

பதில் 1: அவர்களுக்கு அவ்வப்போது நிதி என்ற தூண்டில் – அதில் தொங்கும் ஈர்ப்பு கிடைத்து வருகிறதே! எனவே, இதன் பலன் பிறகு எப்படி – மக்களால் ஒதுக்கப்படும் ஆபத்து உருவாகி வருகிறது என்பதை ‘ஜால்ரா’ தட்டும் கட்சிகளுக்கு இப்போது புரியாது!

– – – – –

கேள்வி 2: தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், சட்டப் பேரவையின் மாண்பையும் அவமதிக்கும் ஆளுநருக்கு எதிராக எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் திரளாமல் தடுப்பது எது ?

– த.மணிமேகலை, வீராபுரம்

பதில் 2: பதவி ஆசை அரசியல் பார்வை! தத்துவங்களை மறந்த தன்னலம்!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

– – – – –

கேள்வி 3: கடந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் ரூ.16.11 லட்சம் கோடிகளை தொழிலதிபர்களுக்கு வாரித் தந்ததோடு கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளனவே, இதை எதிர்த்து பெரிதாக எந்த கிளர்ச்சியும் நடந்ததாக தெரியவில்லையே ஏன்?

– கலையரசன் கண்ணபிரான், கோவர்த்தனகிரி

பதில் 3: எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மேலும் தேவை என்பதற்கான சாட்சியமே தங்கள் கேள்வி!

– – – – –

கேள்வி 4: சிலர் “இயற்கை வழி வாழ்வியலாளர்கள் கூட்டமைப்பு” என்று ஓர் அமைப்பை உருவாக்கி அவர்கள் மூலம் வீடுகளில் சுகப்பிரசவம் செய்து கொள்ள அனுமதி வேண்டும் என்று கேட்கிறார்களே?

– உ. விஜய், சோழங்குறிச்சி

பதில் 4: ஆபத்தான – அறிவியலுக்கு எதிரான சிந்தனைகள். முன்கால இழப்புகளை எண்ணினால் தற்கால இழப்பு குறைவு என்பதே அதற்கான சரியான ஆதார விடையாகும்.

– – – – –

கேள்வி 5: அரசுப் பள்ளிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகள் தத்தெடுத்து உதவுவது என்பது சரியானதா?

– தமிழ் மைந்தன், சைதாப்பேட்டை

பதில் 5: சரியானதல்ல; மாறாக சரியாக நடக்காத தனியார் பள்ளிகளை மூடாமல், அரசே எடுத்து அரசுப் பள்ளியாக்கி நடத்தியதே (விரும்பத்தக்க) பழைய வரலாறு. முடிவை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மறு சீரமைப்பு செய்தல் அவசியம்! அவசரம்!

– – – – –

கேள்வி 6: தனியார் பள்ளிகளில் கோ பூஜை, பாத பூஜை போன்ற மூடநம்பிக்கைகளை மாணவர்களைக் கொண்டு செய்வதை சட்டரீதியாக அரசால் தடுக்க முடியாதா?

– சென்னகிருஷ்ணன், திருவேற்காடு

பதில் 6: சுற்றறிக்கை மூலம் பள்ளிக் கல்வி இயக்ககம் இதைத் தடுக்க அறிவுறுத்தி ஆணையிட வேண்டும். இவையெல்லாம் அறிவியலுக்கு விரோதம். ஆசிரியர் பாதபூஜை வரை நடப்பதெல்லாம் அடிமைப் புத்திக்கு அரணாக்கிடவே. அனுமதிக்கவே கூடாது!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

– – – – –

கேள்வி 7: இந்திய அஞ்சல் துறை – நூல் அஞ்சல் சேவையை எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் நிறுத்தியுள்ளதே?

– மன்னை சித்து, மன்னார்குடி – 1.

பதில் 7: வன்மையாகக் கண்டிக்க வேண்டும். எத்தனை எத்தனை கண்டனங்களும் போராட்டங்களும்! என்னே கொடுமை!!

– – – – –

கேள்வி 8: 12 ஆண்டுகளுக்குப் பிறகு மலரும் குறிஞ்சி மலர் போல நீண்ட 12 ஆண்டுகள் பல போராட்டங்கள் நடத்திக் காத்துக்கிடந்து மண்டல் குழுப் பரிந்துரைகளை அமல்படுத்தியது பற்றி…

– க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி

பதில் 8: மக்கள்தான் மறவாமல் நினைத்து, பெற்ற உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும். இன்னும் பெற வேண்டியவைகளுக்குப் போராடவும் மக்களை அறிவுறுத்தல் அவசியம் ஆகும்!

– – – – –

கேள்வி 9: 2019ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் நாட்டுப் பண் பற்றிய ஒரு வழக்கில், உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி ‘நாட்டுப் பண் இசைப்பது கட்டாயமல்ல’ என்று கூறியுள்ள நிலையில் தமிழ்நாட்டு ஆளுநர் இதில் முரண்டு பிடிப்பது ஏன்?

– க.தனசேகரன், அரூர்.

பதில் 9: பொது வழக்குப் போட்டு இதனை நீதிமன்றத்திற்கு உங்களைப் போன்றவர்கள் கொண்டு செல்ல வேண்டும்.

– – – – –

கேள்வி 10: பாஜகவின் மூத்த தலைவர் ரமேஷ் பிதுரி அண்மையில் பேசும்போது, நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி பற்றியும், டில்லி முதலமைச்சர் ஆதிஷி பற்றியும் அநாகரிகமாகப் பேசியது குறித்து மகளிர் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளுமா?

– செல்விபாபு, மதுரை.

பதில் 10: அருவெறுப்பு அரசியல், தனி மனிதத் தரந்தாழ்ந்த பண்பற்ற வர்ணணை. உள்ளம் எவ்வளவு பெரிய பள்ளம் என்பதைக் கூறினாலும் தண்டிக்க வேண்டிய கட்டம் உள்ளது! “பார்லிமெண்ட்ரி உரிமை மீறல் பிரச்சினை எழுப்பப்பட வேண்டும். நீதி உறங்கக் கூடாது!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *