தனியார் துறை வங்கிகளை நாட்டுடைமையாக்க ஒன்றிய அரசு முன் வர வேண்டும்
கடந்த 1969 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் நாள் வங்கிகள் நாட்டுமையாக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தினம். கடந்த 54 ஆண்டுகளாக வங்கித்துறையில் கருத்தாலும், கரத்தாலும் காலம் கருதாது கடமையாற்றிய வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் அளவற்ற உழைப்பு நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமின்றி சமுதாய முன்னேற்றத்திலும் வியத்தகு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளும்
நாட்டின் வளர்ச்சியும்
நாட்டுடமையாக்கப்படுவதற்கு முன்னர், வர்த்தக சூதாடிகளுக்கும், ஆலை அதிபர்களுக்கும், வட்டிக் கடை வேந்தர்களுக்கும், குட்டி குபேரர்களுக்கும் மட்டுமே வங்கிகள் இணக்கமாக சேவையாற்றி வந்தன. நாட்டுடமையாக்கப்பட்டதற்கு பின்னர் வங்கிகள், வேளாண்மை, சிறுதொழில், கட்டுமானம், கல்வி, சுய உதவி குழுக்கள், பெண்கள், தொழில் முனைவர்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கவனம் செலுத் தியதன் விளைவாக சமுதாயத்தில் அடித்தளத்தில் இருப்போரின் வாழ்வாதாரமும், நாட்டின் பொருளா தாரமும் வியத்தகு வளர்ச்சியை பதிவு செய்தது. இன்றைய தினம் 1,10,000 பொதுத் துறை வங்கி கிளைகளில் 100 கோடிக்கும் மேற்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் தரமான சேவையை தாமதமின்றி பெற்று வருகின்றனர்.
வாடிக்கையாளர் நலனும்
பொருளாதார வளர்ச்சியும்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களின் நலத்தை காப்பதையும், நாட்டின் பொருளாதார வளர்ச் சியை உறுதிப்படுத்துவதையும் மட்டுமே முதன்மை யான நோக்கமாக கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். வாடிக்கையாளர் நலனையும் நாட்டின் நலனையும் தொடர்ந்து தொய்வின்றி காத்து வரும் பொதுத்துறை வங்கிகளை ஒன்றிய அரசு திட்டமிட்டு பலவீனப்படுத்தி வருவதையே ரிசர்வ் வங்கி வெளி யிட்டிருக்கும் புள்ளி விவரங்கள் வெளிப்படுத்துவதை உணர்ந்து, நாட்டின் நலனில் நாட்டமும், சமுதாய மேம் பாட்டில் ஈடுபாடு கொண்ட நல்லோர் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் உறைந்துள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு 90,520 ஆக இருந்த பொதுத்துறை வங்கிகளின் கிளைகள் 2022 ஆம் ஆண்டு 86,221 ஆக குறைந் திருப்பது வளர்ச்சியை நாடும் வங்கித்துறையில் அதிருப்தி அலைகளை உருவாக்கியுள்ளது. அதைப் போன்றே 2021 ஆம் ஆண்டு 8,07,048 ஆக இருந்த வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 7,94,040 ஆக குறைந்திருப்பது, பொதுத் துறை வங்கிகளில் வேலைப்பளுவை தாங்க முடியாத அளவு உயர்த்தி இருப்பதோடு, வாடிக்கையாளர் சேவையை பெருமளவு பாதிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கும்
சட்ட விரோதப் போக்கு
பொதுத்துறை வங்கிகளில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பணி ஓய்வு, பணி நீக்கம், அகால மறைவு (Death, Dismissal & Retirement) ஆகியவற்றால் ஏற்படும் காலி இடங்களை நிரப்பாமல் விட்டு விட்டு ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டு சொற்ப ஊதியத்தில் நியமனம் செய்யும் பொதுத்துறை வங்கி நிர்வாகங்களை ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது. ஒப்பந்த ஊழியர் ஒழிப்பு சட்டம் (ABOLITION OF CONTRACT LABOUR ACT 1970) நிறைவேற்றிய அரசே சட்ட விரோதமாக பொதுத்துறை வங்கிகளில் ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க அனுமதிக்கக் கூடாது.
தனியார் துறை வங்கிகளின் வீழ்ச்சி
இந்திய வங்கித்துறையில் இதுவரை ஏறத்தாழ 738க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகள் திவாலாகி இருந்த இடம் தெரியாமல் போயுள்ளன. இன்றைய நிலையில் இந்தியாவில் வாடிக்கையாளர்களின் டெபா சிட்டுக்கு ரூ.5 லட்சம் வரை தான் சட்டப்பூர்வமான இன்சுரன்ஸ் பாதுகாப்பு உள்ளது. அமெரிக்காவில் இன் சூரன்ஸ் செய்யப்பட்ட வங்கிகளில் வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் பணத்துக்கு 2 கோடி ரூபாய் வரை (2,50,000 டாலர்) யும் அய்ரோப்பிய நாடுகளில் 92 லட்சம் ரூபாயும் (1,00,000 யூரோ) இன்சூரன்சும், பணி பாதுகாப்பும் உள்ளது. நாளொரு வீழ்ச்சியும், பொழு தொரு சரிவுமாக தனியார் துறை வங்கிகள் பாதாளத் திற்கு சென்று கொண்டிருக்கும் சூழலை நிதித்துறை கடந்த காலத்தில் பதிவு செய்துள்ளது. இத்தகைய சூழலில் வங்கிகளில் டெபாசிட் வைத்திருப்போருக்கு தற்போது உறுதிப்படுத்தப்படும் அய்ந்து லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் தொகையை அய்ம்பது லட்சமாக உயர்த்த தொலைநோக்கோடு ஒன்றிய அரசு முடிவெடுத்து செயல்படுத்த முன் வரவேண்டும்.
அரசு நாட்டுடமையாக்க
பொதுத்துறை வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்ட 55ஆவது ஆண்டை வங்கித் துறையும், நாடும் கொண்டாடும் தருணத்தில், அனைத்து தனியார்துறை வங்கிகளையும் நாட்டுடமையாக்க ஒன்றிய அரசு முன் வருவது மட்டும் தான் வங்கி வாடிக்கையாளர்களின் பணத்துக்கு பாதுகாப்பை அளிப்பதாகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் உகந்த தாகவும் இருக்கும் என்பதை உணர்ந்து செயல்பட முன் வரவேண்டும்.
– எஸ்.பி.இராமன்
தலைவர்,
பாரத ஸ்டேட் பேங்க் மேனாள் தொழிற்சங்க
தலைவர்கள் கூட்டமைப்பு (AFCCOM)