சென்னை, ஜன. 5- திருவள்ளுவர் திருநாள் விருதுக்கான விருதாளர்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
திருக்குறள் நெறி பரப்பும் பெருந்தகையாளர் ஒருவரைத் தேர்வு செய்து திருவள்ளுவர் நாள் விருதுகள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
அதன்படி, திருவள்ளுவர் விருதுக்கு மு.படிக்கராமுவும், அறிஞர் அண்ணா விருதுக்கு தஞ்சை கீழையூரை சேர்ந்த எல். கணேசனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திரு.வி.க. விருது
பாரதியார் விருதை கவிஞர் கபிலனுக்கும், புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் விருதை பொன்.செல்வகணபதிக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தென்றல் திரு.வி.க., விருது மருத்துவர் ரவீந்திரநாத்துக்கும், முத்தமிழ் காவலர் விசுவநாதம் விருது வே.மு. பொதியவெற்பனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் விருது
தந்தை பெரியார் விருது விடுதலை ராஜேந்திரனுக்கும், அண்ணல் அம்பேத்கரின் விருது மக்களவை உறுப்பினர் ரவிக்குமாருக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் விருது முத்து வாவாசிக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பெறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் ரொக்கமும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படும்.
இதில், தந்தை பெரியார் விருது மற்றும் அண்ணல் அம்பேத்கர் விருது பெறுபவர்களுக்கு ரூ.5 லட்சம் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.,15இல் நடக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்