சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கமும் இசைத் துறையும்

Viduthalai
8 Min Read

வை. கலையரசன்

சமூக புரட்சி வரலாற்றில் தனித்துவம் பெற்றது சுயமரியாதை இயக்கம். ஒரு நூற்றாண்டுக்கு முன் உருவான சமூகப் புரட்சி இயக்கமான சுயமரியாதை இயக்கம் ஒரு மேடையில் தொடக்க விழாவுடன் துவங்கிய இயக்கம் அல்ல.
தந்தை பெரியாராலும் அவர்தம் “குடிஅரசு” ஏட்டாலும் தூவப்பட்ட சுயமரியாதை வெடித்துகள்கள் வெடித்து பெரும் சுயமரியாதை தீ பிழம்பாய் மாற்றமடைந்து உருவானது தான் சுயமரியாதை இயக்கம். ஈராயிரம் ஆண்டுகளாய் ஆதிக்கம் செலுத்தி வந்த வைதீக கோட்டைகளை உடைத்து நொறுக்கி, மதத்தின் பெயரால், மூடச் சடங்குகளின் பெயரால் அடிப்படை உரிமைகளை மறுத்து வந்த ஆதிக்கவாதிகளை நடுங்க வைத்தது. அஃறிணை போல் நடத்தப்பட்ட பெண்கள் வாழ்வில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.
அரசியல், சமூகம், பொருளாதாரம், இலக்கியம், கல்வி, கலைத்துறை என அனைத்து துறைகளிலும் பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதையை மீட்டெடுத்தது.

சங்கீத மாநாடு
அக்காலகட்டத்தில் சங்கீதத்துறை என வழங்கப்பட்ட இசைத் துறையில் பார்ப்பனரல்லாத மக்கள் சிறந்து விளங்கினாலும், அவர்களின் திறமைக்கும் சுயமரியாதைக்கும் மதிப்பில்லாமல் இருந்தது. அந்த சூழலில் தான் 1930 ஆம் ஆண்டு மே மாதம் 24 மற்றும் 25 தேதிகளில் ஈரோட்டில் நடைபெற்ற மாகாண சுயமரியாதை மாநாட்டுடன் மாகாண சங்கீத மாநாட்டையும் சேர்ந்து நடத்தியது சுயமரியாதை இயக்கம்.
அம் மாநாட்டின் நோக்கம் குறித்து குடிஅரசு ஏட்டில் (20.04.1930) எழுதிய தந்தை பெரியார் அதற்கான காரணத்தை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
“நம்மைப் பொறுத்தவரை நாம் இம்மாநாட்டில் கலந்து கொள்வதானது அக்கலையில் உள்ள மேன்மையை உணர்ந்தல்லவென்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறோம். மற்றென்னவெனில், சங்கீதத்துறையிலும் நமது பார்ப்பனரல்லாத மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி ஏற்படவேண்டும் என்பதற்காகவேதான் சுயமரியாதை மாநாட்டை அனுசரித்து இதை நடத்த வேண்டுமென்று கருதி நாம் அதில் கலந்து கொள்ள ஆசைப்பட்டதாகும்.
எப்படி நமது நாட்டில் மற்ற எல்லாத் துறைகளையும் பார்ப்பனர்கள் கைப்பற்றி தங்கள் ஆதிக்கத்திற்குள்ளாக்கி அத்துறையில் மற்ற மக்களைத் தலையெடுக்க ஒட்டாமல் “அழுத்தி வைத்திருக்கிறார்களோ, அதுபோலவே சங்கீதத்துறையும் முழுவதும் பார்ப்பனர் ஆதிக்கமாகி அதன் மூலம் நமது பொருள்கள் கொள்ளை போவதுடன், அதைக் கொண்டிருக்கும் நமது மக்களின் சுயமரியாதையும் கொள்ளை போயிருக்கின்றது; போய்க்கொண்டும் வருகிறது.

உதாரணமாக, நமது தமிழ்நாட்டில் சங்கீத விஷயத்தில் தேர்ச்சியுள்ள பார்ப்பனரல்லாத வித்வான்கள் அனேகர் இருக்கிறார்கள், அதிலும் சங்கீத சம்பந்தமான பல கலைகளிலும் தமிழ் நாட்டிற்கே சிறந்தவர்கள் முதன்மையானவர்கள் இணையில்லாதவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதார்களே யாவார்கள். இப்படி இருந்தாலும் இவர்களது வாழ்வும். அந்தஸ்தும் பெரிதும் மிக்க சுயமரியாதையற்றத் தன்மையாகவே இருந்து வருகின்றது. பார்ப்பனரல்லாத சங்கீத வித்வான்கள் – அதாவது வாய்ப்பாட்டு, வீணை. புல்லாங் குழல், பிடில், நாதசுரம். மிருதங்கம். தவில் முதலாகிய வாத்தியங்களில் முதன்மையான பார்ப்பனரல்லாத வித்வான்கள் தங்களிலும் எவ்வளவோ கீழ்த்தரப் பார்ப்பன வித்வான்களால் மிக்க இழிவாகவே நடத்தப்படுகிறார்கள். அது மாத்திரமல்லாமல். இதன் பயனாய் பிரபுக்கள் என்று சொல்லப்படும் பார்ப்பனரல்லாத பணக்காரர்கள் பலரும்கூட பார்ப்பனரல்லாத வித்வான்கள் என்றால் மிக்க இழிவாகவே கருதும் உணர்ச்சியைக் கொண்டு இருக்கின்றார்கள்.
மேலும் பார்ப்பனர் அல்லாத இசைவாணர்கள் எப்படி எல்லாம் அவமதிக்கப்படுகிறார்கள் என்பதை அந்த தலையங்கத்தில் கீழ்கண்டவாறு தொடர்கிறார்.

“பார்ப்பனரல்லாதப் பெண் வித்வான்களாயிருந்தால் உட்கார்ந்து பாடும்போது சபைக்கு ஒவ்வொரு மனிதன் வரும் போதும் எழுந்து எழுந்து கும்பிட்டு விட்டுத்தான் உட்கார வேண்டியிருக்கிறது. ஆண் பாட்டுக்கார வித்வான்களோ பிரபுக்களிடம் பேசும் போதும் இடுப்பில் மேல் வேட்டியை எடுத்து சுருட்டிக் கட்டிக் கொண்டும் முழங்காலுக்கு மேல் இடுப்பு வேஷ்டியைக் கட்டிக் கொண்டும். இடக்கையை வலக்கக்கத்தில் வைத்து வலக்கையால் வாயைப் பொத்தி குனிந்து ”மகாராஜா”: ”எஜமான்” “ஸ்வாமி” “சமூகம்” என்று மேல் மரியாதை வைத்து பேச வேண்டியிருக்கின்றது. இப்பிரபுக்களும், இவ்வித்வான்களிடம் பேசும்போது நீ, அவன், டேய் என்கின்ற ஒருமை அடிமை முறையில் பேசுவதும் வழக்கமாய் இருக்கின்றது. இதே தொழிலிலிருக்கும் பார்ப்பனர்களும் தங்கள் சகோதரத் தொழிலாளிகள் பார்ப்பனரல்லாதவர்களாய் இருந்தால் அவர்களிடமும் இப்படியேதான் நீ, அவன், அடே என்கிற வரிசை வைத்துதான் பேசுகிறார்கள். ஒரு இரண்டு மூன்று ஜாண் உயரம் உள்ள பையனாயிருக்கும் பார்ப்பன வித்வானும்கூட எட்டரை ஜாண் இருக்கும் பார்ப்பனரல்லாத வித்வானை ஒருமையிலேயேதான் அவன், நீ அடே என்று பேசுகிறான். அந்தச் சிறு வித்வானிடம் இந்தப் பெரிய வித்துவான்கள் பேசும்போதும் “ஸ்வாமிகள்” என்று மரியாதை வைத்துப் பேசுகின்றார்கள். நிற்க, நமது பிரபுக்கள் என்பவர்கள் பார்ப்பன வித்வான்களிடம் பேசும் போதெல்லாம் மரியாதையாகவே பேசுவதும், தாங்களாகவே முதலில் கும்பிடுவதும். இதற்கு பார்ப்பனர்கள் இடதுகையை தங்கள் இடுப்பிற்கு கீழாகக் காட்டி “ஆசிர்வாதம்” என்று சொல்லுவதுமான காரியங்கள் தினமும் நடந்து வருகின்றது

கவுரவ குறைவு
ஆனால் சதுர் முதலிய கச்சேரிகளில் தாசிகளுக்குப் பின்னால் நின்று கொண்டு அவர்களை ஆட்டுவிப்பவராயிருந்தாலும், தாளம் போடுகிற வராயிருந்தாலும், அல்லது அப்பெண்களுக்கு மாமாக்களாய்கூட இருப்பவர்களாய் இருந்தாலும் அவர்களைக் கண்டால் நமது பிரபுக்கள் கும்பிடுவதும் சுவாமிகளே என்று கூப்பிடுவதும் ஆன காரியங்கள் முக்கியமாக எல்லா கிராமாந்திரப் பிரபுக்களிடமும் இன்னமும் பார்க்கலாம். இவை ஒருபுறமிருக்க. பார்ப்பன பிரபுக்கள் தங்கள் வீட்டு விஷேசங்களுக்கும். சடங்குகளுக்கும் மேளம் வாசிப்பதற்குத் தவிர மற்றபடி சபைக்கச்சேரிகளுக்கு பாடவோ, கதைகள் செய்யவோ கண்டிப்பாய் பார்ப்பனரல்லாதார்களை கூப்பிடுகின்ற வழக்கமே ஒரு சிறிதும் இல்லை. அதுமாத்திரமல்லாமல், பார்ப்பனரல்லாதார். பாடுவதையோ.கதை செய்வதையோ புராணம் உபன்யாசம் முதலியவை செய்வதையோ பார்ப்பனர்கள் கேட்பது மதசம்பிரதாயப்படி தோஷம் என்றே கருதி இருக்கிறார்கள். ஏனெனில். “சூத்திரன் வாக்கைக் கேட்கக்கூடாதாம்” அன்றியும் பார்ப்பன பக்க வாத்தியக்காரர்களில் அனேகர் பார்ப்பனரல்லாத வித்வான்களுக்கு பக்கவாத்தியம் வாசிப்பதையும் இழிவாய் கருதுகிறார்கள், பார்ப்பனரல்லாத பக்க வாத்தியக்காரர்கள்கூட ஒரு பார்ப்பனச் சிறு வித்வானுக்கு வாசிப்பதைப் பெருமையாய்க் கருதுகின்றார்களேயொழிய, பார்ப்பனரல்லாத விதவான்களுக்கு வாசிப்பதைக் கவுரவக் குறைவாகவே கருதுகின்றார்கள்.

அன்றியும் ஒரு பார்ப்பனச் சிறுவன் பாடினாலும் கருவிகளால் வாசித்தாலும் சுற்றிலும் பார்ப்பனர்கள் உட்கார்ந்து கொண்டு “பலே “பலே” “பேஷ்” “பேஷ்” என்று கைத்தட்டுவதும், தலையை ஆட்டு வதும் மெய்மறந்ததுபோல் கண்கள் மேலே சொருகும்படி வேஷம் போடுவதும், அதை ஒன்றுக்கு இரண்டாக விளம்பரம் செய்து அவனுக்கு பிரக்யாதி சம்பாதித்துக் கொடுப்பதிலும் அதிகக் கவலையாய் இருக்கிறார்கள்.
ஆனால் பார்ப்பனரல்லாத வித்வான்களாயிருந்தால் அவர்கள் எவ்வளவு பெரிய வித்வான்களாயிருந்தாலும் வேண்டுமென்றே ‘கட்டை சாரீரம்’ என்பதும், கணக்கு போதாது என்பதும், ‘மேல் ஸ்தாயி சுகப்படாது என்பதும் மற்றும் ஏதேதோ பொருத்த மற்றவைகளைச் சொல்லி விஷமப் பிரசாரம் செய்வது எங்கும் வழக்கமாக இருக்கின்றது.
இவைகளை நாம் சுமார் 40 வருஷத்திற்கு மேல்பட்ட நமது பிரத்தியட்ச அனுபவத்தில் கண்டு வந்திருக்கின்றோம்.
ஆகவே நாம் சங்கீத மகாநாட்டில் கலந்துகொள்ள ஆசைப்பட்டதின் முதல் காரணம் சங்கீத ஞானத்திற்கு ஆகவோ, சங்கீத கலை வளர்ச்சிக்கு ஆகவோ மாத்திரம் அல்ல என்றும் மேல்கண்ட பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்னும் உயர்வு தாழ்வு விஷம் சங்கீதத்திற்குள்ளும் புகுந்து அதன் மூலம் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதைக்கு விரோதமாயிருக்கும் கொடுமையை அழிப்பதற்கே ஒழிய வேறில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

சுயமரியாதை
இதை உத்தேசித்தே சில சங்கீத சம்பந்தமான சபைகளில் நாம் பேச நேர்ந்த போதுகூட சங்கீதத்தில் இச்சை வைத்ததற்காகவும். சங்கீதத்தை தொழிலாகக் கொண்டதற்காகவும் பார்ப்பனரல்லாதார் என்கின்ற காரணத்திற்காக இவ்வளவு கேவலமாயும் இழிவாயும் நடத்தப்படுவதாயிருந்தால் சங்கீதக் கலையே அடியோடு அழிந்து போவதே மேல் என்றும் அதனால் யாருக்காவது ஜீவனத்திற்கு கேடு வருமானால் அப்படிபட்டவர்கள் இச்சங்கீதத்திற்கு “கருமாதி” செய்துவிட்டு ரோட்டில் கல் உடைத்து வயிறு வளர்ப்பதே மேல் என்றும், அத்தொழிலும் ஜீவனமும் சங்கீதத்தை விட கவுரவமும், மேன்மையுமான வேலை என்றும் சொல்லி வந்திருக்கிறோம்.
ஆகவே சமீபத்தில் ஈரோட்டில் நடக்கும் சங்கீத மகாநாட்டில் மற்ற சங்கீத மகாநாடுகளைப்போல் சங்கீத சாஸ்திரம் என்பதைப்பற்றிப் பேசியே காலம் போக்காமல் சங்கீதத்தை கைக்கொண்ட பார்ப்பனரல்லாத மக்களுடைய சுய மரியாதையைக் காப்பாற்றும் விஷயத்திலும் அதிகமான கவனம் செலுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். நிற்க இன்றைய தினம் தமிழ்நாட்டில் சங்கீத விஷயத்தில் வாய்ப்பாட்டு, புல்லாங்குழல், பிடில், மிருதங்கம். கஞ்சிரா, ஜலதரங்கம், கடம், கொன்னைக்கோல், நாதசுரம் முதலிய அனேகம் துறைகளில் நிகரில்லாதவர்களும் மிக்க விற்பத்திறன் பெற்றவர்களுமாக சுமார் 400. 500. பேர்கள் வரையில் பார்ப்பனரல்லாதார்களில் இருந்தும் அவர்களைப் பற்றிய பெயர்கள்கூட அனேகருக்குத் தெரிய முடியாமல் அடக்கி வைக்கப் பட்டிருக்கின்றது. அவர்களில் சிலரின் பெயர்களையும் திரு. இராமசுப்ரமணியம் அவர்கள் கொடுத்த லிஸ்டுப்படி மற்றொரு பக்கத்தில் காணலாம். மற்றப் பெயர்களும் பின்னால் வெளிவரும் இந்த சமயத்தில் நாம் இந்த வித்வான் எல்லோரையும் அவசியம் இம்மகாநாட்டுக்கு வரும்படி இதன்மூலம் அழைக்கின்றோம். அவர்களில் அனேகர் அவசியம் வரவும் கூடும் என்று எதிர்பார்க்கின்றோம். அனேக விதமான சிரோன்மணிகள் வருவதாகவும் வந்து பாடவும் வாசிக்கவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நாம் மனப் பூர்த்தியான நன்றி அறிதலை தெரிவித்துக் கொள்வதோடு பொதுஜனங்களிலும் சங்கீத் கலையிலும் சுயமரியாதையிலும் கவலையுள்ள மக்கள் பெருந்திரளாகக் கூடி வந்து இம்மாநாட்டைச் சிறப்பிக்கச் செய்து அதை கைக்கொண்ட பார்ப்பன ரல்லாத மக்களுக்கு மேன்மையும் சுயமரியாதையும் ஏற்படுவதற்கு உதவியாய் இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறோம்.

– ‘குடிஅரசு’ தலையங்கம், 20.04.1930
குடிஅரசு ஏட்டில் தொடர்ந்து இசைக் கலைஞர்களின் பட்டியல்கள் முகவரியுடன் வாத்தியம் வாரியாக வெளியிடப்பட்டன.

தமிழ் மாகாண சங்கீத மாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்கள்
(1) சிறந்த நாதசுர வித்வான் மதுரை. திரு. பொன்னுசாமி அவர்கள் காலஞ் சென்றமைக்காக இந்த மாநாடு மிகவும் வருந்துகிறது. இந்த தீர்மானம் எல்லோராலும் எழுந்து நின்று நிறைவேற்றப்பட்டது.
(2) எல்லா தேசச் சங்கீதமும் தமிழ்நாட்டுச் சங்கீதத்தில் அடங்கியிருப்பதால் அயல்நாட்டு சங்கீதம் கற்க மாணவர்களை அனுப்புவதை இந்த மாநாடு கண்டிக்கிறது. (திரு. இ.கே. முனுசாமி அவர்களால் பிரேரேபிக்கப்பட்டு பட்டுக்கோட்டை திரு. அழகிரிசாமி, சேலம் பிடில் காளியப்பப்பிள்ளை ஆகியவர்களால் ஆமோதிக்கப்பட்டு நிறைவேறியது)
(3) சங்கீதக் கலாசாலைக்கு நமது தமிழ் மக்கள் தங்கள் குழந்தைகளை அனுப்பிப் பயிற்றுவிக்க வேண்டுமென்று இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது. (சென்னை திரு. நாதமுனி பிரேரேபிக்க திரு. இராம சுப்பிரமணியம் ஆதரிக்க ஏகமனதாக நிறைவேறியது)
(4) சிதம்பரம் அண்ணாமலை யூனிவர்சிடியின் சார்பாக ஆரம்ப சங்கீதப் பள்ளிக்கூடம் ஒன்று வைக்க வேண்டுமென்று அதன் அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறது. இந்தத் தீர்மானம் சிதம்பரம் திரு. செல்வரத்தினம் பிள்ளையவர்களால் பிரேரேபிக்கப்பட்டுச் சென்னை பிடில் சுப்ரமணிய பிள்ளையால் ஆமோதிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேறியது.
(5) சங்கீதத்தைத் தொழிலாக கொண்டவர்கள் தங்களுடைய சுயமரியாதையில் முழுவதும் கவனம் செலுத்த வேண்டும்.
(6) சங்கீதத்தைத் தன் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுக்கப் பிரியப்படும் தொழிலாளர்கள் முதலில் தங்கள் பிள்ளைகளுக்குப் பொதுக்கல்வி அறிவு உண்டாக்க பிரயத்தனப்பட வேண்டும்.
(7) சங்கீதக் கச்சேரியை வைக்கப் பிரியமுள்ள நண்பர்கள் தமிழராகிய சங்கீத வித்வான்களையே ஆதரிக்க வேண்டும்.
(8) தற்காலம் சங்கீத அபிவிருத்திக்கு ராஜா சர். அண்ணா மலையார் கொடுத்திருக்கிற சந்தர்ப்பத்தை முறையாய்க் கற்றுக் கொள்ளவிருப்பமிருக்கும் தமிழர் அக்காலேஜுக்கு மாணவர்களை அனுப்பிப் பலப்படுத்த வேண்டும். இந்தத் தீர்மானங்களை புளியம்பட்டி திரு. அய்யா முத்து அவர்கள் பிரேரேபிக்க திரு. வாலாஜாபாத் திரு. மாசிலாமணி ஆதரிக்க ஏகமனதாக நிறைவேறியது.
(9) பார்ப்பனரல்லாத மக்கள் எல்லோரும் தங்களுடைய விசேஷ காலங்களுக்குப் பார்ப்பனரல்லாத சங்கீத வித்வான்களையே ஆதரிக்கும்படி இந்த மகாநாடு கேட்டுக் கொள்கிறது. இந்த தீர்மானத்தை திரு. அழகிரிசாமி பிரேரேபிக்க திரு. நாதமுனி அவர்கள் ஆமோதிக்க ஏகமனதாக நிறைவேறியது.

– ‘குடிஅரசு’, 1.6.1930

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *