சென்னை, நவ.10 நயவஞ்சக சக்திகளின் நாசக்கார சீண்டலுக்கும் தூண்டலுக்கும் நாம் இரையாகிவிட கூடாது என்று திருமாவளவன் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்; அண்மைக் காலமாக அரசியலரங்கில் நம்முடைய நிலைப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பொது வெளியில் தொடர் உரையாடல்கள் நிகழ்ந்து வருகின்றன. பல்வேறு ஊகங்களின் அடிப்படையில் அவை நிகழ்கின்றன. நம்மை ஆதரித்தோ எதிர்த்தோ ஊடகத் தளங்களில் பல்வேறு தரப்பினர் பேசி வருகின்றனர். அதாவது, அரசியலடிப்படையில் நாம் குறி வைக்கப்பட்டிருக்கிறோம்.
அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. நாம் ஆளுங்கட்சி திமுக தலைமையிலான “மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில்” இடம் பெற்றிருப்பது ஒரு காரணம். அதுவே முதன்மையான காரணமாகும். இக்கூட்டணியைச் சிதறடிக்கத் திட்டமிடுவோர் நம்மை ஒரு கருவியாகப் பயன்படுத்த முனைகின்றனர். அவர்கள் யாவரென கேள்வி எழுவது இயல்பேயாகும். குறிப்பாக, திமுக’வைப் பிடிக்காதவர்கள், திமுக கூட்டணியின் கட்டுக்கோப்பைக் கண்டு எரிச்சலடையக் கூடியவர்கள், நம்மையும் அறவே வெறுப்பவர்கள் போன்ற சக்திகள் தாம். இவர்களில் கட்சி அடையாளமில்லாத ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உள்ளனர்.
இவர்கள் கடந்த 2019 நாளுமன்றப் பொதுத் தேர்தலிலிருந்தே இத்தகைய முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் சிலர் அவ்வப்போது நம்மை ஆதரிப்பது போலவும் காட்டிக்கொண்டே நமது கூட்டணிக்கெதிராக நம்மைச் சீண்டியும் தூண்டியும் வருகின்றனர். அவற்றுக்குப் பலியாகாமல் நாம் மிகுந்த எச்சரிக்கையோடு இயங்கி வருகிறோம். கடந்த காலங்களில் அத்தகைய அரசியல் சதிகளையும் முறியடித்திருக்கிறோம்.
“மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி” என்பது திமுக – விசிக உட்பட பத்துக்கும் மேற்பட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கிய ஒரு ‘கூட்டமைப்பாகும்’. 2017-இல் அது காவிரி நீர் உரிமைக் கான ஒரு போராட்டக் களத்தில் கருக்கொண்டது. அது அடுத்தடுத்து பல்வேறு போராட்டக் களங்களைச் சந்தித்தது. அவற்றினூடாக அதுவே ஒரு ‘தேர்தல் கூட்டணி’ யாகவும் பரிணாமம் பெற்று, தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிவருகிறது. 2019, 2021, 2024 பொதுத்தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் என அனைத்திலும் மகத்தான வெற்றிகளைக் குவித்து வருகிறது.
இதனை கொள்கைப் பகைவர்களாலும் அரசியல் போட்டியாளர்களாலும் எவ்வாறு ஏற்றுக்கொள்ள, சகித்துக்கொள்ள இயலும்? 2026-இல் நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும் இந்தக் கூட்டணி வெற்றிப் பெறுவதற்கு அவர்கள் எங்ஙனம் அனுமதிப்பார்கள்? என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.