சென்னை, நவ.1- வணிக பயன்பாடு எரிவாயு உருளைகளின் விலை ரூ.61.50 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சமையல் எரிவாயு உருளை விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.
வணிக பயன்பாடு எரிவாயு உருளையை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெயின் விலை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயிக்கப்படும்.
அந்தவகையில் வணிக பயன்பாடு எரிவாயு உருளை விலை இன்று (நவ.1) மாற்றி அமைக்கப்பட்டது. சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு எரிவாயு உருளை விலை கடந்த மாதம் ரூ.48 உயர்ந்து ரூ.1,903க்கு விற்பனையானது.
இந்நிலையில், சென்னையில் நேற்றுவரை ரூ.1,903 என்று விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் வணிக பயன்பாடு எரிவாயு உருளை விலை தற்போது ரூ.61.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இன்றுமுதல் ரூ.1,964.50க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. அதேவேளை வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயுவின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் ரூ.818.50 ஆக உள்ளது. கடந்த ஜூலை 1இல் விலை குறைக்கப்பட்டது. அதன்பிறகு எரிவாயு உருளை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, கடந்த 4 மாதங்களில் ரூ.155 உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.