வள்ளலார் தமது பாடல்களில் “துஞ்சிய மாந்தரை எழுப்புக”, “செத்தார் எழுந்தனர்” என்றெல்லாம் பாடி யுள்ளார். இவைகளுக்கு ‘மாண்ட மனிதர்கள் மீண்டும் எழுவர்’ என்று பொருள் கொள்கின்றனர். செத்தவரைப் பிழைக்க வைக்கலாம் என்று நம்புகின்றனர் பலர். இந் நம்பிக்கை மூடநம்பிக்கை. வள்ளலார் கருத்து இது அன்று ; இறந்த மனிதரைப் பிழைக்க வைக்க முடியும் என்று அவர் கூறவில்லை. அதாவது, அழிந்த உடலை மீண்டும் எழுப்பலாம் என்று அவர் கூறவில்லை. அவர் கூறிய ‘‘செத்தார் எழுந்தனர்” என்பதன் கருத்து வேறு.
“ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ’’ என்பது நமது இளமைப் பாடம் அல்லவா? துருப் பிடித்து மண்ணாகிப்போன இரும்புக் கம்பி மீண்டும் கம்பியாவதில்லை. உடைந்து போன மண்பாண்டம் மண்ணோடு கலக்க வேண்டியதுதான்.உலகப் பொருள்களால் ஆகிய உடல் சிதைந்தவுடன் உலகப் பொருள்களோடு கலக்கவேண்டியதுதான்.
உடல் ஓர் இயந்திரம் போன்றது. இயந்திரத்தில் முக்கியமல்லாத இரண்டொரு மறையாணிகள் கழன்று விட்டாலும், தளர்ந்துவிட்டாலும் இயந்திரம் ஓடிக்கொண்டுதான் இருக்கும். இயந்திரத்தின் சில பாகங்களுக்குப் பழுது நேர்ந்தால் அதற்கு ஒட்டுப்போட்டு ஓட்டுகிறோம். இயந்திரத்தின் ஒரு பகுதி உடைந்துவிட்டால் அதை அகற்றிவிட்டுப் புதிய பகுதியைச் சேர்த்து ஓட்டுகின்றோம். இதைப்போல இன்று உடம்பிலும் பழுதடைந்த உறுப்பை அகற்றிவிட்டுப் புதியஉறுப்பைச் சேர்க்கும் வித்தை வளர்ந்து வருகின்றது. கண் பழுதடைந்தால் வேறு கண் வைக்கின்றனர். பல் பழுதடைந்தால் வேறு பல் ; இதயம் பழுதானால் வேறு இதயம் வைத்து உடம்பை இயக்க முயற்சிக்கின்றனர்.
ஆனால் ஓர் இயந்திரத்தின் எல்லா உறுப்புக்களுமே நெடு நாள் ஓடித் தேய்ந்துவிட்டால் பிறகு அதை ஒன்றும் செய்ய முடியாது. இதைப்போலவே நமது உடலும். எவ்வளவு பாது காத்து வந்தாலும் நீண்டநாளாகிவிட்டால் தேய்ந்து தளர்ந்து போய்விடுகின்றது.அதன் பிறகு ஓட்டம் நின்றுவிடுகின்றது. இத்தகைய நிலையில் ஏற்படும் சாவுதான் இயற்கைச் சாவு – இயற்கைச் சாவு எய்தியவரை மீண்டும் பிழைக்க வைப்பது என்பது இயலாத காரியம்.
இனி வள்ளலார் குறிப்பிடும் செத்தாரைக் கவனிப்போம். மக்களாகப் பிறந்தும் ஒரு சுகத்தையும் காணாமல் இயந்திரம் போல உழைத்து ஒடுங்கிக்கிடப்பவர்கள் செத்தவர்கள்; உலகப் போக்கை உணரும் அறிவின்றி, மாடுகள்போல் உழைத்துக் கிடப்பவர்கள் செத்தவர்கள்; நன்மையிது தீமையிது, நம்மை முன்னேறச் செய்யும் வழியிது, அடிமைப்படுத்தும் வழியிது என்று அறியாமல் மூடத்தனத்தில் மூழ்கியிருப்பவர்கள் செத்தவர்கள். இத்தகைய செயலற்ற மக்களையே செத்தவர்கள் என்று குறிப்பிடுகிறார் வள்ளலார்.
“துஞ்சிய மாந்தரை எழுப்புக ! நலமே சூழ்ந்த
சன்மார்க்கத்தில் செலுத்துக!
இறந்த மக்களை – அல்லது தூங்கிக் கிடக்கும் மக்களை எழுப்புங்கள், எல்லா நன்மைகளும் நிறைந்த உண்மை வழியில் செல்லும்படி செய்யுங்கள்”
“செத்தார் எழுந்தனர் – சுத்த சன்மார்க்கம் சிறந்தது. பிணம்போல் செத்துக் கிடந்தவர்கள் விழித்துக் கொண்டனர். அவர்கள் முயற்சியால் குற்றமற்ற உண்மை நெறி பரவி விட்டது.”
“இன்பால் உலகங்கள் யாவும் விளங்கின
துன்பால் இறந்தவர் துன்பற்றுத் தோன்றினர்.
இன்பத்தை அடையும் மார்க்கத்தைக் கண்டு, அதைப் பின் பற்றி இன்புறுகின்றமையால் உலகமெல்லாம் சிறந்து காணப் படுகின்றன; இதுவரையில் துன்பத்தினால் செத்துக் கிடந்த மக்கள் இன்று துன்பமின்றி மகிழ்ச்சியோடு காணப்படுகின்றனர்.”
“மடம்பெற்ற மனிதர்கள் மதிபெற்று வாழ்கின்றார்
திடம்பெற்றே எழுகின்றார் செத்தவர் தினம்தினம்.
மூடத்தனத்திலே மூழ்கிக் கிடந்த மக்கள் இன்று அறிவுபெற்று வாழ்கின்றார்; கோழைத்தனத்தால் செத்துக் கிடந்தவர்கள் ஒவ் வொரு நாளும் திடம் பெற்றுத் தமது உரிமைக்காகப் போராடப் புறப்படுகின்றனர்.’’
‘‘புல்லொழுக்கம் எல்லாம்
புணரியிடைப் போயொழிக!
நல்லொழுக்கம் ஒன்றே நலம்பெறுக –
இல்லொழுக்கில்,
செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துமனம்
ஒத்தாராய் வாழ்க உவந்து.
கொடுஞ் செயல்கள், கெட்ட நடத்தைகள் எல்லாம் கடலில் வீழ்ந்து ஒழியட்டும். மக்களெல்லோரும் இன்புறுதற்கான நல்ல செயல்களே, நடத்தைகளே உலகில் உயர்வுபெற்று விளங்கட்டும். இல்லற வாழ்க்கையில் இன்பமின்றிச் செத்துக் கிடந்தவர்கள் எல்லோரும் மீண்டும் ஊக்கத்தோடு எழுந்து எல்லா மக்களோடும் ஒன்றுபட்டு ஒருமனம் உடையவர்களாய் மகிழ்ந்து வாழ்க!”
மேலே காட்டிய வள்ளலார் வாக்கை நோக்குவார்க்குச் செத்தார் “யார்?” என்பது புலப்படும். அவர் பிழைப்பது எப்படி யென்பதும் விளங்கும்.
உண்மை நெறியை உணராதவர் செத்தார்! துன்பத்தில் வாழ்பவர் செத்தார்! மூடத்தில் வாழ்பவர் செத்தார்! கோழைகள் செத்தார்! இல்லற இன்பம் பெறாதவர் செத்தார்! இவைகளையே மேற்கண்ட பாடல்களில் கூறியுள்ளார்.
(தொடரும்)