குரூப்-4 காலிப்பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிப்பு! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

viduthalai
1 Min Read

சென்னை, அக். 11- குரூப் 4 காலிப்பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிப்பு செய்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று, தற்போது குரூப் 4இல் சுமார் 2208 கூடுதல் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வழி மொத்த காலிப்பணியிடங்கள் 8,932 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் போட்டித் தேர்வு எழுத, இளைஞர்கள் கடுமையாக தயாராகி வருகின்றனர். அனைத்து வகையான தேர்வுகளிலும் பங்குபெற்று, அதிகாரத்தைப் பிடிக்க, தமிழ்நாட்டு இளைஞர்கள் காட்டும் ஆர்வம் வியப்புக்குரியதாய் அமைந்து வருகிறது.

அவ்வகையில், இளைஞர்களின் தேவையை நிறைவேற்றும் வகையில், கிராம நிர்வாக அலுவலர், வரி தண்டலர் (பில் கலெக்டர்), ஆவின் நிர்வாக உதவியாளர், இளநிலை நிர்வாகி, வனக் காவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு குரூப் 4 தேர்வை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.

இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜனவரி 30 ஆம் நாள் தொடங்கி பிப்ரவரி 28 ஆம் நாள் வரை நடைபெற்றது. அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, ஜுன் 9ஆம் நாள் நடைபெற்று முடிந்துள்ளது. சுமார் 20 லட்சம் பேர் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 7,247 மய்யங்களில் 15.8 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதி இருந்தனர்.

இந்நிலையில், குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதன்மூலம் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 6,724 ஆக உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து, தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று, தற்போது குரூப் 4இல் சுமார் 2,208 கூடுதல் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வழி மொத்த காலிப்பணியிடங்கள் 8,932 ஆக அதிகரித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *