தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் ‘பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள்’ கொண்டாட்டம்

viduthalai
1 Min Read

சென்னை, அக். 1– தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் ‘பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள்’ சென்னையில் நேற்று (30.9.2024) கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பல்வேறு மொழிபெயர்ப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
திசைதோறும் திராவிடம் (தமிழ் இலக்கிய மற்றும் தமிழ்நாடு வரலாற்று நூல்கள் மொழிபெயர்ப்பு), முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்பு திட்டம் (மருத்துவ மற்றும் தொழில் நுட்ப நூல்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு), இளந்தளிர் இலக்கிய திட்டம் (குழந்தைகளுக்கான இலக்கியங் களை தமிழ் எழுத்தாளர்களைக் கொண்டு எழுதி வெளியிடுதல் மற்றும் அந்நூல்களை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்தல்), தமிழில் குழந்தைகளுக்கான உலக இலக்கியங்கள் ஆகிய திட்டங் களின்கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளி யிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30ஆம் நாள் பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாளாக கடைப் பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் நேற்று (30.9.2024) நடைபெற்ற மொழிபெயர்ப்பு நாள் விழாவில் பல்வேறு மொழிபெயர்ப்பாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் அய்.லியோனி தலை மையில் நடைபெற்ற இந்த விழாவில், ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் சார்பில் அறிஞர் அண்ணாவைப் பற்றி வெளியிடப்பட்ட ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர், சிறுகதை மொழிபெயர்ப்பாளர் இராமகிருஷ்ணன், மருத்துவர்கள் பாலசுப்பிரமணியன், ரூபசிறீ, செந்தில்குமார், பேராசிரியர் ஃபீரிடா ஞானராணி, முனைவர் தீபப்பிரியா உள்ளிட்டோர் பாராட்டப்பட்டனர்.

மகப்பேறு மருத்துவர் ஜெயசிறீ தனது மொழிபெயர்ப்பு அனுபவங் களை பகிர்ந்து கொண்டார். பாடநூல் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர். பொ.சங்கர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *