இந்தியாவிலோ, தமிழ்நாட்டிலோ இதுவரை எழுதப்பட்டுள்ள பெரும்பான்மை வரலாற்று நூல்கள் அனைத்தும் ஆணாதிக்க மனப்பான்மையிலேயே அணுகப் பட்டுள்ளன.
பெண்களைக் குறித்த வரலாற்றுக் குறிப்புகள் ஓரிரு இடங்களில் இடம்பெற்றுள்ளதே தவிர, அவர்களைப் பற்றிய முழுமையான வரலாறு போதுமான அளவு பதிவு செய்யப்படவில்லை. இதற்குத் திராவிட இயக்கமும் விதிவிலக்கன்று. இத்தனைக்கும் வேறெந்த இயக்கங்களைக் காட்டிலும் அதிகமான அளவு பெண்கள் பங்கேற்பு இருந்தது திராவிட இயக்கத்தில்தான்.
எடுத்துக்காட்டாக 1938இல் நடைபெற்ற மொழிப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் எண்ணிக்கை தேசிய இயக்கத்தில் ஈடுபட்ட பெண்களைவிட பன்மடங்கு அதிகமாக இருந்தது என்கிறார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் தேவி சட்டர்ஜி (The mobilization of women was effectively used in the anti-Hindi agitation through the 1938-39 period when their participation in the movement surpassed the participation of women during the national movement in Tamilnadu (Up against caste, page. 62).
அண்மைக் காலங்களில் பெண்களின் போராட்ட வரலாறு சரியான முறையில் பல்வேறு ஆய்வாளர்களால் பதிவு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, திராவிட இயக்கத்தின் போராளிகளின் வரலாறு எழுத்தாளர் ஓவியா, வழக்குரைஞர் அருள்மொழி ஆகியவர்களின் முயற்சியால் ‘கருஞ்சட்டைப் பெண்கள்’, ‘திராவிடப் போராளிகள்’ என்னும் பெயர்களில் நூலாக்கம் பெற்றுள்ளன. அப்போராளிகளுள் ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றை மட்டும் எடுத்துக் கொண்டு அரியதொரு ஆவணத்தை நமக்குத் தந்துள்ளார் தோழர் ஜீவசுந்தரி.
2016ஆம் ஆண்டு வெளிவந்த ’மூவலூர் இராமாமிர்தம் – வாழ்வும் பணியும்’ என்ற நூல் இப்போது ஆங்கிலத்தில் பாரதி அரிசங்கர் என்பவரால் மொழிமாற்றம் செய்யப்பட்டு “The life and work of Moovalur Ramamirtham ammaiyaar” என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
மூவலூரார் குறித்து, பொதுவாக அறியப்பட்ட செய்திகளை மட்டும் அல்லாது, இதுவரை பதிவு செய்யப்படாத செய்திகளையும் தேடி வெளிக் கொணர்ந்துள்ளதே இந்நூலின் சிறப்பு. தொடர்ச்சியான தேடலும், அயராத உழைப்பையும் நல்கினால் மட்டுமின்றி இத்தகைய நூலைக் கொண்டு வருவது சாத்தியமன்று. இத்தகைய பணிக்காக இராமாமிர்தம் அம்மையாரின் வாரிசுகளைச் சந்தித்தது உள்ளிட்ட செய்திகளையும் நூலாசிரியர் நூலில் பதிவு செய்துள்ளார்.
காங்கிரஸ் இயக்கத்தில் மூவலூர் அம்மையார் பயணித்தபோது, தேவதாசி ஒழிப்பிற்காக மேற்கொண்ட பணிகளை விவரிக்கும் இந்நூல் மூவலூரில் நடைபெற்ற முதல் தேவதாசிகள் மாநாட்டை அவரது கைக்காசைக் கொண்டு நடத்தினார் என்ற செய்தியை நமக்குத் தருகிறது. அவரது முயற்சிகளுக்குப் பின்புலமாக தந்தை பெரியார், திரு.வி.க., வரதராஜுலு போன்றோரின் ஆதரவு இருந்ததையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
காந்தி தமிழ்நாட்டிற்கு வரவிருக்கும் தகவலை அறிந்து அவரைப் பங்கேற்க வைப்பதற்காக மயிலாடுதுறையில் உள்ள திருவெழுந்தூரில் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்கிறார் மூவலூரார். அதற்கு இராஜகோபாலாச்சாரியார், ரூ.500 கொடுத்தால் மட்டுமே காந்தி மாநாட்டில் பங்கேற்பார் என்று கூறிவிடுகிறார். இதனால் வெகுண்டெழுந்த மூவலூரார், காந்தி இருக்கும் இடத்திற்கே நேரடியாகச் சென்று, காந்தி அவருக்கு எழுதிய பாராட்டுக் கடிதத்தை வாசித்துக் காண்பித்து காந்தி தான் நடத்தும் மாநாட்டுக் வர மறுப்பது ஏன் என்று கேட்கிறார்.
அதற்குப் பிறகு தனது மனைவி கஸ்தூரி பாயுடன் அம்மாநாட்டில் காந்தி கலந்து கொண்டது வரலாறு. இது போன்ற பல்வேறு சுவையான வரலாற்றுத் தகவல்களையும் கொண்டிருக்கிறது இந்நூல். தேவதாசி ஒழிப்புப் போராட்டம் மட்டுமின்றி, இந்து எதிர்ப்பிலும் மூவலூராரின் பங்கேற்பு குறிப்பிடத்தக்கது.
தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப் படுவதில் பெரும்பங்கு ஆற்றிய மூவலூர் அம்மையார் குறித்து முத்துலட்சுமி அம்மையார் தனது தன்வரலாற்று நூலில் ஒரு இடத்தில்கூட குறிப்பிடாதது ஏண் என்ற கேள்வியை முன்வைக்கிறார் நூலாசிரியர். இக்கேள்வி முக்கியமானது.
திராவிடர் கழகத்திலிருந்து விலகி, திராவிட முன்னேற்றக் கழகத்திலும் பயணித்தவர் மூவலூர் அம்மையார். அப்போது தான் நடிக்கும் நாடகம் ஒன்றிற்கு மூவலூர் அம்மையாரைத் தலைமையேற்க அறிஞர் அண்ணா தந்தி மூலம் விடுத்த அழைப்பையும் இந்நூல் பதிவு செய்துள்ளது. இப்படி எண்ணற்ற வரலாற்றுச் செய்திகள் இந்நூலின் செழுமையைக் கூட்டுகின்றன.
இந்நூலின் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ள மூவலூராரின் படைப்புகள், இப்போதைய தலைமுறையினர் வாசிக்க வேண்டியவை. மூவலூராரின் படைப்புகளின் வழியாக அவரைப் பற்றி அறிந்து கொள்வற்கு நூலாசிரியர் பின்னிணைப்பின் மூலம் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்துள்ளார்.
மூவலூராரின் முயற்சிகளுக்கு இயக்க ரீதியாக ஆதரவு கொடுத்ததோடு, தேவதாசி ஒழிப்பிற்குப் பெரியார் முன்னெடுத்த முயற்சிகளையும் இந்நூலில் சற்று விரிவாக ஆவணப்படுத்தியிருக்கலாம். வாய்ப்பிருப்பின் அடுத்த பதிப்பில் இவற்றைச் சேர்க்க நூலாசிரியர் பரிசீலிக்கலாம்.
இந்த நூல் “திசைதொறும் திராவிடம்’ என்ற தமிழ்நாடு அரசின் திட்டத்தின்கீழ் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வரலாறு சார்ந்த, குறிப்பாக திராவிட இயக்க வரலாறு சார்ந்த நூல்கள் இத்திட்டத்தின் மூலம் அதிக அளவில் கொண்டு வரப்பட வேண்டும். அப்போதுதான் இன்றைய இளைய தலைமுறையினரையும், தமிழகம் தாண்டியும் திராவிட இயக்க வரலாற்றை, சிந்தனைகளைக் கொண்டு செல்ல முடியும்.