கேள்வி: நமது மனோநிலை எப்படி இருக்கவேண்டும்?
பதில்: இறைவனது திருவடிகளில் எல்லா வற்றையும் அர்ப்பணம் செய். அவரிடம் வக்காலத்துக் கொடு. அவர் எது நல்லது என்று நினைக்கிறாரோ அதைச் செய்யட்டும். ஒரு நல்ல மனிதரிடம் பொறுப்பை விட்டால், அவர் ஒருபோதும் வஞ்சிக்கமாட்டார்.
– ‘விஜயபாரதம்’,
ஆர்.எஸ்.எஸ்.
வார இதழ்,
6.9.2024
இறைவன் ஒருவன், அவன் உருவமற்றவன், அய்ம்புலன்களுக்கும் சிக்காதவன் என்று பொது வாகச் சொல்லுகிறார்கள் ஆன்மிகப் பெரிய மனுஷர்கள்.
அப்படி இருக்கும்போது, இறைவனின் ‘‘திருவடி’’ எங்கிருந்து குதிக்கிறது?
‘பால் நினைந்தூட்டும் தாய்’ என்பார்கள். மனித னாகிய தாயே குழந்தையின் பசியை அறிந்து பால் ஊட்டும்போது, எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்ததாகக் கூறப்படும் இறைவனுக்கு, தன்னால் படைக்கப்பட்டதாகக் கூறப்படும் மக்களுக்கு எது தேவை என்பது தெரியாதா? அதை நிறைவேற்றும் கடமை, மக்களைப் படைத்ததாகக் கூறப்படும் இறைவனுக்குக் கிடையாதா?
ஒரு விபத்தில் ஆயி ரக்கணக்கான மக்கள் செத்து மடிகிறார்கள்; ஒரு திடீர் வெள்ளத்தால் எத்தனை ஆயிரம் வீடுகள் மூழ்கின; மக்களும், விலங்குகளும், உயிரினங்களும் செத்து மடிந்தன.
இப்படி விபத்துக்கு ஆளாகி, மரணம் அடை கிறவர்களில் ஒருவர்கூட இறைவன் திருவடிகளில் மனம் வைக்காதவர்களா?
இன்னும் சொல்லப் போனால், கோவில் விழாக்களிலேயே கூட கூட்ட நெரிசலில் மக்கள் செத்து மடிகிறார்கள்; கடவுள் சிலையை வைத்து, ஆராதனை செய்யப்பட்டு, பக்தர்களால் இழுத்துச் செல்லப்படும் தேர்ச்சக்கரங்களில்கூட சிக்கிப் பக்தர்கள் சாகும் பரிதாபங்களும் நடக்கத்தானே செய்கின்றன!
வறுமை, நோய்த் தொற்று, வேலை வாய்ப் பின்மை, இன்றியமையாத தேவைகளை எல்லாம் அரசாங்கமே செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பது, போராடுவது என்பதை விட்டுவிட்டு, மக்கள் எல்லாம் இறைவன் திருவடிகளில் அர்ப்பணம் செய்தால் போதுமா?
உண்மையைச் சொல்லப்போனால் இறைவன் உறைவதாகக் கூறப்படும் கோவில்களைக் காப்பதும், கோவில் கர்ப்பக்கிரகத்தில் உள்ள ‘கடவுள்’களையும் பாதுகாப்பதே அரசின் கடமையாக அல்லவோ இருக்கிறது!
சிந்தியுங்கள்!
‘கடவுளை மற, மனிதனை நினை’ என்பது தந்தை பெரியாரின் கருத்து.
– மயிலாடன்