சென்னை, ஜூன் 20- பல ஆண்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் மீண்டும் சிறிய பேருந்துகள் இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. விரிவான சிறிய பேருந்து திட்டம்-2024 என்ற பெயரில் புதிய வரைவு திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் இன்று பல்வேறு கிராமங்கள் பேருந்து சேவை பெறக் காரணம் கடந்த 1997ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சிறிய பேருந்து சேவைகள் தான். பேருந்துகளே பல ஆண்டுகளாக செல்லாத கிராமங்கள் எல்லாம் சிறிய பேருந்து சேவை காரணமாக 2000களில் பேருந்து சேவையை அனுபவிக்கத் தொடங்கின.
ஆனால் அதன் பிறகு புதிதாக சிறிய பேருந்துகள் இயக்க அனுமதி யாருக்கும் வழங்கப்படவில்லை..
சென்னை நகருக்குள் மட்டுமே சிறிய பேருந்து சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதுவும் மாநகர பேருந்துகள் செல்ல முடியாத வழித்தடங்களை குறிவைத்து சிறிய பேருந்து சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலோ அல்லது கிராமங் களிலோ புதிதாக புதிய சிறிய பேருந்துகள் இயக்குவதற்கான அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் மீண்டும் சிறிய பேருந்து சேவை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
அதற்காக புதிய விரிவான சிறிய பேருந்து திட்டம்-2024 என்ற திட்டத்தை உருவாக்கி இருக்கிறது. அதற்கான வரைவு அறிக்கையை தமிழ்நாடு அரசின் உள்துறை வெளியிட்டிருக்கிறது.
அந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
“சாலைப் போக்குவரத்தில் மாற்றியமைக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் படி, புதிய சிறிய பேருந்து திட்டம் வரைவு அறிக்கை -2024 தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் சிறிய பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதி வழங்க வழிவகை செய்யப் பட்டுள்ளது.
இருப்பினும் சென்னை மாநக ராட்சிக்கு உட்பட்ட தண்டையார் பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் ஆகிய பகுதிகளுக்கு மட்டும் இந்த சிறிய பேருந்து சேவை வழித்தடம் வழங்கப்படாது. அதேவேளையில் சென்னை மாநகராட்சியுடன் 2011ஆம் ஆண்டு இணைந்த திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு சிறிய பேருந்து சேவை அளிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் எந் தெந்த வழித் தடங்களில் சிறிய பேருந்துகளுக்கான அனுமதியை வழங்கலாம் என்பதனை போக்கு வரத்து துறையின் ஆர்.டி.ஓ.க்கள் முடிவு செய்வார்கள்.
மேலும் ஒரு வழித்தடத்தில் எத்தனை சிறிய பேருந்துகளுக்கு அனுமதி தரலாம் என்பதனையும் ஆர்டிஓக்களே முடிவு எடுப்பார்கள். இந்த சிறிய பேருந்துகள் அதிக பட்சமாக 25 கிலோ மீட்டர் தூரம் வரை இயக்க அனுமதி அளிக்கப்பட உள்ளது.
அதில் 18 கிலோ மீட்டர் சேவை இல்லாத வழித்தடமும், 8 கிலோ மீட்டர் சேவையுள்ள வழித் தடத்திலும் இயக்க அனுமதி வழங்கப்பட உள்ளது. அதாவது 70-க்கு 30 என்ற வழித்தட முறை பின்பற்றப்படும்.
ஒரு சிறிய பேருந்தில், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அல்லாமல் அதிகபட்சமாக 25 பேர் வரை இருக்கை வசதி செய்யலாம். அனைத்து சிறிய பேருந்துகளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட வேண்டும். இந்த சிறிய பேருந்துகளின் சேவைகள் மூலம் இனி 100 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் பகுதிகளுக்கும் பேருந்து சேவை கிடைக்கும்” இவ்வாறு அந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வரைவு அறிக்கை குறித்து எதிர்வரும் 30 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். மேலும் இது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் அடுத்த மாதம் 22ஆம் தேதி சென்னை கோட்டை 10ஆவது மாடியில் உள்ள கூட்டரங்கில் உள்துறை முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெறுகிறது” இவ்வாறு அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.