ஏர் இந்தியா விமான நிறுவனம் தங்களது விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்காக உணவு அட்டவணை ஒன்றை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
அதில், ஹிந்து மீல்ஸ், முசல்மான் மீல்ஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக, குழந்தைகளுக்கான, கருவுற்ற பெண்மணிகளுக்கான, முதியவர்களுக்கான, இறைச்சி மற்றும் தாவரக் கறிகளை உண்பவர்கள் என்றுதான் பட்டியலிடுவார்கள்; ஆனால், தற்போது ஹிந்து உணவு, முஸ்லீம் உணவு என்று சேர்த்திருக்கிறார்கள்.
இறைச்சி உண்பவர்கள் அனைவருமே முஸ்லிம்கள் அல்லர்; அதேபோல, மரக்கறி உணவு உண்பவர்கள் அனைவருமே ஹிந்துக்கள் அல்லர் என்பதை ஏர் இந்தியா நிறுவனம் அறியும். ஆனால், என்ன செய்ய! விமானப் போக்குவரத்துத் துறை கேபினெட் அமைச்சர், இணை அமைச்சர் இருவருமே தீவிர சங்கிகளாக இருப்பதால், உணவிலும் தங்களின் மத நஞ்சைக் கக்குகிறார்கள்.
நாளை நாத்திகருக்கான உணவு என்று பட்டியல் போட்டாலும் வியப்பதிற்கில்லை.
ஏர் இந்தியா, அரசுக்குச் சொந்தமாக இருந்த ஒரே விமான சேவை. இப்பொழுது இது டாடாவுக்குச் சென்றுவிட்டது.
ரூ.18 ஆயிரம் கோடிக்கு விலை போனது. சொந்தமாக விமான சேவை இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்து கொண்டது.
பன்மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரம் கொண்ட ஒரு துணைக் கண்டமான இந்தியாவில், மத நம்பிக்கையற்றவர்களும் உண்டு.
இந்நிலையில், மக்கள் சேவைக்கான ஒரு நிறுவனம், மதத்தை முன்னிறுத்தி உணவுப் பட்டியலை வெளியிடுவது – அசல் வெட்கக்கேடு!
இந்தியத் துணைக் கண்டத்தில் எத்தனையோ மதங்கள் உண்டு. அத்தனை மதங்களின் பெயர்களையும் வெளியிட்டு, அவர்களுக்கான உணவு அட்டவணைகளையும் வெளியிடாதவரைக்கும் விசேஷம்தான்! வெளிநாட்டுக்காரர்கள் பயணித்தால், அவர்களின் கதி – அதோ கதிதானோ!
– மயிலாடன்