சென்னை, ஜூன் 9– இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
இளநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகளும், ஆள் மாறாட்டமும் நடைபெற்றுள்ளது. அரியானாவில் ஒரு மய்யத்தில் தேர்வு எழுதிய ஏழு மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். சிலருக்கு தேசிய தேர்வு முகமை கருணை மதிப் பெண்ணும் வழங்கியுள்ளது. இது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. தொடர்ந்து நீட் தேர்வின் மீதான நம்பகத்தன்மை கேள் விக்குரியதாக மாறி வருகிறது. எனவே நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து நேர்மையான, நடுநிலையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தவறு செய்தோர் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். நீட்டிலிருந்து விலக்கு பெற, தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை ஒன்றிய அரசு பெற்றுத்தர வேண்டும்.
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் மருத்துவ இடங்களுக்கு நீட்டிலிருந்து விலக்கு அளிக்கத் தவறும் ஒன்றிய அரசின் மாநில விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு இரா.முத்தரசன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.