சென்னை, மே 31- வானில் வர்ண ஜாலமாக ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள் வரும் அதிசய நிகழ்வு, ஜூன் 3 ஆம் தேதி நிகழ்கிறது என்று சென்னை பிர்லா கோள ரங்க இயக்குநர் லெனின் தமிழ்கோவன் கூறினார்.
ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்
சூரியக்குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன. இதில் பூமி ஒருமுறை சூரியனை சுற்றிவர 365 நாட்கள் ஆகின்றன. இதேபோல, ஒவ்வொரு கோளுக்கும் குறிப்பிட்ட நாட்கள் ஆகின்றன. கோள்களின் சுற்றுவட்டப் பாதையில் ஒன்றை ஒன்று சந்திக்கும் அபூர்வ நிகழ்வுகள் அவ்வப்போது ஏற்படுகிறது. இதுதவிர, சமீபத்தில் வானில் பன்னாட்டு விண்வெளி ஆய்வு மய்யம் நகர்ந்து சென்றதையும் வெறும் கண்களால் காண முடிந்தது. இவ்வாறு அவ்வப்போது விண்ணில் ஏதாவது ஒரு வர்ண ஜாலத்தை காணமுடிகிறது. அந்த வகையில் ஒரு அரிய காட்சி விண்ணில் அரங்கேற இருக்கிறது.
வானில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என்ற 8 கோள்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் அதற்குரிய கோணத்தில் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.
சூரிய உதயத்திற்கு முன்பு
வரும் ஜூன் 3 ஆம் தேதி கிழக்கு திசையில் சூரிய உதயத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக அடிவானில், வியாழன் (ஜூபீடர்), புதன் (மெர்குரி), யுரேனஸ், செவ்வாய் (மார்ஸ்), நெப்டியூன், சனி என்ற வரிசையில் 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வருவதை பூமியில் இருந்து பார்க்க லாம். இதில் யுரேனஸ், நெப்டியூன், புதன் சற்று தூரமாக இருப்பதால் இதனை பார்ப்பது கடினம். வானம் தெளிவாக இருந்தால் கடற்கரை பகுதிகளில் பார்க்க முடியலாம். மீதம் உள்ளவற்றை பைனாகுலர் மூலம் தெளிவாக பார்க்கலாம்.
தமது சூரியப் பாதையில் ஒவ்வொரு கோளும் வெவ்வேறு (பலநூறு கோடி கிலோ மீட்டர்) தூரத்திலும், வெவ்வேறு சாய்வு கோணத்திலும் சுற்றி வருவதால் அவை எப்போதும் ஒரே நேர்கோட்டில் அணிவகுப்பதற்கு வாய்ப்பில்லை, அவ்வாறு ஒரே வரிசையிலும் ஒரே நேர்கோட்டிலும் அணிவகுத்து வருவது மிக அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
அதேநேரம், கோள்கள் ஒரே நேர்கோட்டில் காணப்படவில்லை. மாறாக பூமியில் இருந்து பார்க்கும்போது இந்த கோள்கள் ஒரே நேர்கோட்டில் இருப்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தை நமக்கு தருகிறது. இதனை காற்று மற்றும் ஒளி மாசுபாடு இல்லாத. அடிவானம் மறைக்காத சற்று உயரமான இடத்தில் அமர்ந்துகொண்டு பார்ப்பது மிகவும் சிறந்தது.
அபூர்வ நிகழ்வு
செவ்வாய், சனி கோள்கள் வெறும் கண்ணுக்கு மங்கலாக தெரியும். ஜூன் 3 ஆம் தேதி சனிக்கோளுக்கு கீழேயும். 4 ஆம் தேதி செவ்வாய் கோளுக்கு கீழேயும் பிறைச்சந்திரனையும் காணலாம். இது கண்ணுக்கு விருந்தாக அமையும்
5-க்கும் மேற்பட்ட கோள்கள் அரிதாக, வருகிற ஆகஸ்டு 28 ஆம் தேதி 2025 ஆம் ஆண்டு ஜனவரி 18, பிப்ரவரி 28, ஆகஸ்டு 29 ஆகிய தேதிகளில் தெரியும்.
இவ்வாறு சென்னை பிர்லா கோளரங்க இயக்குநர் லெனின் தமிழ்கோவன் கூறினார்.