சென்னை, மே 24- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நாங்குநேரி, நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் நாங்குநேரி நீதிமன்றம் முன் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஒரு காவலர் ஏறி உள்ளார். அவரிடம் பேருந்தின் நடத்துநர் பயணச்சீட்டு வாங்குமாறு கூறியபோது, அரசு பேருந்தில் அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவருக்குமே பயணச்சீட்டு கிடையாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த காட்சிப் பதிவு சமூக வலைத்தளத்தில் (22.5.2024) வைரலானது. இதையடுத்து இந்த நிகழ்வு குறித்து போக்குவரத்து துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது.
காவல்துறையினர் பேருந்தில் பயணிக்கும்போது கட்டாயம் பயணச்சீட்டு எடுக்க வேண்டும். வாரண்டு இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர் களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப் படுகிறது. அந்த தொகையையும் போக்குவரத்து துறை அரசிடம் திரும்ப பெற்றுக்கொள்கிறது. எனவே, நாங்குநேரியில் நடைபெற்ற நிகழ்வின் போது பேருந்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
-இவ்வாறு போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது. இதற்கிடையே காவல்துறையினர் பயணச்சீட்டு பெற்று பயணம் செய்வது குறித்து 2019-ஆம் ஆண்டு பெறப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட கடிதம் ஒன் றையும் பேருந்து நடத்துநர்கள் தங்களுக்குள் வாட்ஸ்-அப் மூலம் பகிர்ந்து, இது போன்ற நிகழ்வுகளின் போது அதனை காண்பிக்குமாறு தங்களுக்குள் அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசுப் பேருந்துகளில் காவல்துறையினருக்கு இலவச பயணம் கிடையாது போக்குவரத்துத் துறை அறிவிப்பு

Leave a Comment