தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு ஆளுநர் ரவி அவர்கள் ஆற்றிய உரை

viduthalai
9 Min Read
சமூகநீதி, கல்வி வளர்ச்சி, வேளாண் திட்டம், புதுமைப் பெண்கள் திட்டம், 
மகளிர் நலம், தொழில் வளம் – அலை அலையாக வளர்ச்சித் திட்டங்கள்
முதலீட்டாளர்கள் மாநாட்டின் வெற்றி என்பது
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான சாட்சியமாகும்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு ஆளுநர் ரவி அவர்கள் ஆற்றிய உரை
சென்னை, பிப்.12 தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சிக்கான திட்டங்களை உள்ளடக்கி ஆண்டு அறிக்கையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (12.2.2024) சட்டப் பேரவையில் படித்தார். அறிக்கையில் குறிப்பிடப்பட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு:
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் வெற்றி
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, 14.54 இலட்சம் நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகை யில், முன் எப்போதும் இல்லாத அளவிலான, மொத்தம் 6.64 இலட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்வதற்கு, சாதனை படைக்கும் வகையில் நிறுவனங்களுடன்  தமிழ்நாடு அரசு 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற் கொண்டுள்ளது. இம்முதலீடுகள், மாநிலத்தின் முன்னேற்றப் பாதையை வடிவமைத்து, உயர்நிலை பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும். மேலும், இந்நிகழ்வில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 1டிரில்லியன் டாலர் தமிழ்நாடு பொருளாதாரம் குறித்த தொலை நோக்கு ஆவணத்தை வெளியிட்டார். இந்த உயரிய இலக்கை அடைவதற்குத் தேவை யான அனைத்து நடவடிக்கைகளையும் நமது அரசு மேற்கொண்டுவருகிறது.
மக்களுடன் முதல் அமைச்சர்
இத்தகைய சவால்களுக்கு இடையேயும் மக்களின் குறைகளை உடனுக்குடன் களைந் திடும் திறன்மிகு நிர்வாகத்தை வழங்கிட இந்த அரசு உறுதியாக உள்ளது. ‘முதல்வரின் முகவரி’ என்ற துறையின் கீழ், இதுவரை, மொத்தம் 20.31 இலட்சம் மனுக்கள் பெறப் பட்டு, தகுதிகளின் அடிப்படையில் 19.69 இலட்சம் மனுக்களுக்கு வெற்றிகரமாகத் தீர்வுகள் காணப்பட்டுள்ளன. அரசு நிருவாகத் தையும் பொதுமக்களையும் மேலும் இணைக் கும் பொருட்டு, இந்த அரசு, “மக்களுடன் முதல்வர்” என்ற மற்றொரு முன்னோடித் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது. இத்திட் டத்தின் பெயருக்கேற்ப, தமிழ்நாட்டு மக் களின் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும்,   முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து உடன் பயணிப்பார் என்ற நம்பிக்கையை இந்த முன்னோடித் திட்டம் விதைத்துள்ளது. இத் திட்டத்தின் முதற்கட்டத்தில்,  முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து மாவட்டங்களிலுள்ள நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் புறநகரைச் சுற்றியுள்ள (ஜீமீக்ஷீவீ-uக்ஷீதீணீஸீ) ஊராட்சிகளில், 30 நாட்களுக்குள் சேவைகளை வழங்கி, மனுக்கள் மீது தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள, 2,058 முகாம்கள் நடத்தப்பட் டுள்ளன. பொதுமக்களோடு நேரடித் தொடர் பில் உள்ள 13 அரசுத் துறைகள் வழங்கும் சேவைகள் மீது இந்த முகாம்கள் கவனம் செலுத்துகின்றன. இதுவரை பெறப்பட்ட 2.67 இலட்சம் மனுக்களில், 240 இலட்சம் மனுக் களுக்கு மனநிறைவுடன் தீர்வு காணப் பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் மாநாடு உணர்த்துவது என்ன?
சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு மாநில அரசு முன்னுரிமை வழங்குவதினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவ னங்களால் தமிழ்நாடு அமைதியான மாநில மாகக் கருதப்படுகிறது. இது, அண்மையில் நடந்து முடிந்த  உலக  முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதிபலிக்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்களைத் தடுப்பதில் இந்த அரசு சமரசமற்ற அணுகுமுறையைக் கடைப் பிடித்து வருகிறது. மேலும், சமுதாயக் கண்காணிப்பு, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்காணிப்பு மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுத்தல், சட்டம் ஓழங்கை நிலை நிறுத்திட தேவையான அனைத்து நட வடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.
புதுமைப் பெண் திட்டம்! 
பெண்களின் முன்னேற்றத்திற்கு கல்வி முக்கியம் என்பதை நன்கு உணர்ந்துள்ள இந்த அரசு, உயர்கல்வியில் மாணவியர் சேர்க்கையை உயர்த்தத் தேவையான அனைத்து  நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த இலக்கினை நோக்கி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று, பின்னர் உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கிடும் வகையில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டம் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. நடப்புக் கல்வியாண்டில், இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 2.73 இலட்சம் மாணவிகள் பயனடைகின்றனர். இம்முயற்சியின் விளைவாக, நடப்புக் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்று, கல்லூரிகளில் சேரும் மாணவியரின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டம்!
நாட்டிலேயே பல முன்னோடி நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நம் மாநிலத்தின் மாபெரும் மரபின் தொடர்ச் சியாக, இந்த அரசின் முன்னோடித் திட்ட மான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைத்’ தொடங்கி,   முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் பெயரை இந்திய வரலாற்றில் மீண்டும் ஒருமுறை பொறித்துள்ளார். இந்தியத் திருநாட்டிற்கே முன்மாதிரியாக விளங்கும் இத்திட்டத்தை தெலங்கானா மாநிலம் பின்பற்றத் தொடங்கியுள்ளது. முதல் ஆறு மாத காலத்திற்கு 1,543 பள்ளிகளில் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனைக்குப் பிறகு, இத்திட்டம் மாநிலத்தில் உள்ள 30,992 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 16.85 இலட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்பு வரையிலான இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு காலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சத்தான உணவை  இத்திட்டம் வழங்குகிறது. இதன் மூலம் அவர்களது ஊட்டச்சத்து உயர்வது மட்டுமன்றி, மாணவர்களின் வருகைப் பதிவும், கற்றல் விளைவுகளும் மேம்பட்டுள்ளன. மேலும், இலட்சக்கணக்கான உழைக்கும் பெண்கள் மற்றும் தாய்மார்களின் சுமைகளை இந்த அரசு பகிர்ந்து கொள்வதால், இத்திட்டம் மேம்பாட்டிற்கும் வழிவகுத்துள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள்!
ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்குப் பெருமளவில் உதவிடும் வகையில், விடுதிகளில் மாதாந்திர உணவுக் கட்டணத்தை பள்ளி மாணவர்களுக்கு 1,000 ரூபாயிலிருந்து 1,400 ரூபாயாகவும் கல்லூரி மாணவர்களுக்கு 1,100 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகவும் அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் 1.71 இலட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
குடியுரிமை சட்டத்தை
நடைமுறைப்படுத்த முடியாது
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
– கணியன் பூங்குன்றனார்
சங்ககாலத் தமிழர் கடைபிடித்த உலக உடன்பிறப்பு நேயத்தை எடுத்துரைக்கும் இந்த மகத்தான வரிகள் தான் இந்த அரசை வழிநடத்திச் செல்கின்றன. வேற்றுமையில் ஒற்றுமை என்ற நமது நாட்டின் உன்னதமான கொள்கைகள் தற்போது கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தைப் பேணி பாதுகாப்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது. சிறுபான்மையினர் மற்றும் இலங்கைத் தமிழர்களின்  உரிமைகளைப் பாதுகாத்து அவர்களுடன் நாம் என்றும்  துணை நிற்போம். அந்த வகையில் ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் ஒரு போதும் நடைமுறைப்படுத்த அனுமதிப்பதில்லை என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.
வேளாண் வளர்ச்சி
விவசாயிகளின் நலன் மற்றும் வேளாண் வளர்ச்சி மேம்பட பல முன்னோடித் திட்டங்களை இந்த அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. 76 கோடி ரூபாய் செலவில் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியதன் விளைவாக, நடப்பாண்டில் குறுவை சாகுபடிப் பரப்பு, முன்னெப்போதும் இல்லாத அளவில் 5.59 இலட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. முழுமையான வேளாண் வளர்ச்சியை எய்திடத் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்திட, இந்த ஆண்டில் 190 கோடி ரூபாய் செலவில் 2,504 கிராம ஊராட்சிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கலைஞர் நூற்றாண்டு நூலகம்
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் வகையில், 2 இலட்சம் சதுர அடியில், 6 மாடிக் கட்டடத்தில் 4 இலட்சம் புத்தகங்களைக் கொண்ட அதிநவீன கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை, மதுரையில் சுமார் 218 கோடி ரூபாய் செலவில் இந்த அரசு அமைத்துள்ளது. கலைக்கூடம், பல்நோக்கு அரங்கம், குழந்தைகளுக்கான சிறப்பு அரங்கம், மாநாட்டுக் கூடம் என அனைத்து நவீன வசதிகளுடன் செயல்படும் இந்நூலகம் தென் மாவட்ட மக்களுக்கு பெரும் பயனளித்து வருகிறது.
அமைப்பு சாராத் தொழிலாளர்கள் நலன்
பல்வேறு துறைகளில் பணியாற்றும் அமைப்புசாராத் தொழிலாளர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக பல முயற்சிகளை அரசு எடுத்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு இணையவழி தற்சார்புத் (GIG workers) தொழிலாளர்கள் நலவாரியத்தை’ தொடங்கியுள்ளது. உணவு விநியோகம், வாடகைப் பயணம் போன்ற இணையவழி அடிப்படையிலான ஒருங்கிணைப்புத் தளங்கள் மூலமாகப் பணியாற்றும் 1 இலட்சத்திற்கும் அதிகமான அமைப்புசாராத் தொழிலாளர்களின் நலனை இந்த வாரியம் பாதுகாக்கும்.
வாக்குறுதிகள் நிறைவேற்றம்
இந்த அரசு பதவியேற்றது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மட்டுமன்றி, அவர்களின் எதிர்பார்ப்புகளையும் தாண்டி அவர்களது தேவைகளையும் நிறைவு செய்துள்ளோம். இந்தக் குறுகிய காலத்தில் நாங்கள் நிறைவேற்றிய சாதனைகள் மற்றும் நாங்கள் ஒன்றாக அடைந்த முன்னேற்றம் குறித்து இன்று இந்த மக்கள் மன்றத்தின் முன் பெருமிதத்தோடு நிற்கிறோம். தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வு மற்றும் செழுமைக்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதோடு, மகத்தான தமிழ்க் கனவை நனவாக்க உறுதியாக உள்ளோம். இந்த அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்வதோடு, சமூகநீதி, மத நல்லிணக்கம், பகுத்தறிவுச் சிந்தனை மற்றும் மக்களாட்சியின் மாண்புகள் போன்றவற்றிற்கு நாட்டிற்கே வழிகாட்டியாக தமிழ்நாடு தொடர்ந்து திகழும் வகையில் இந்த நம்பிக்கை வரும் காலங்களிலும் நிலைக்கும் என நம்புகிறேன்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரையாற்றினார்
பேரவைத் தலைவர் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை படித்தார்
சென்னை, பிப்.12 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று 2024ஆம் ஆண்டிற்கான ஆளுநர் உரையை அவர் உரையாற்றியதின் தமிழாக்கத்தை
பேரவைத் தலைவர் மு. அப்பாவு படித்தார்.
2024 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டம் இன்று (12.2.2024) காலை 10 மணியளவில் கூடியது.
முன்னதாக தலைமை செயலக வளாகத்திற்குள் தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் வருகை தந்தபோது தேசிய கீதம் பேண்ட் வாத்தியத்தில் இசைக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து  பேரவை தலைவர் மு. அப்பாவு அவர்கள் ஆளுநரை பேரவைக்கு உள்ளே வரவேற்று அழைத்து வந்தார்.  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,   எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அமைச்சர் பெரு மக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். ஆளுநர் தனது இருக்கைக்கு வந்ததும் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார்.
அவை நடவடிக்கை தொடங்கியதும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. பின்னர் 2024ஆம் ஆண்டிற்கான ஆளுநர் உரையை அவர் உரையாற்றத் தொடங்கி அனைவருக்கும் அவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு,
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து  (குறள் 738)
மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய அய்ந்தும் ஒரு  நாட்டுக்கு அழகு என தெரிவித்து தனது உரையை முடித்து கொண்டு அமர்ந்தார்.
இதையடுத்து பேரவைத் தலைவர் மு. அப்பாவு அவர்கள்  ஆளுநரின் முழு ஆங்கில உரையின் தமிழாக்கத்தை படித்து முடித்தார்.
தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே ஆளுநர் வெளியேறினார்
உடனே ஆளுநர் தேசிய கீதம் பாடி முடிவதற்குள் அவையை விட்டு வெளியேறினார். பின்னர் அவை முன்னவர் துரை முருகன் அவர்கள் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார்:-
பேரவைத் தலைவர் அவர்களே, தற்போது இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத் தொடரின் தொடக்கமாக சட்டமன்றப் பேரவை மரபுகளின்படி  ஆளுநர் அவர்களின் உரை நிகழ்ந்துள்ளது.   ஆளுநர் அவர்கள் தனது உரையினை வாசித்த பின்னர், பேரவைத் தலைவராகிய தாங்களும் அரசு தயாரித்த உரையின் தமிழாக்கத்தினை அவையில் வாசித்தீர்கள்.  இது தொடர்பாக சட்டப் பேரவை விதி 17-அய் தளர்த்தி, பின்வரும் தீர்மானத்தினை இப்பேரவையில் முன்மொழிகின்றேன்:
தீர்மானம்: “2024 ஆம் ஆண்டுக்கான இந்த முதல் கூட்டத்தொடரில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆளுநர் உரை இந்த மாண்புமிகு மன்றத்திற்கு வழங்கப்பட்டபடியே அவைக்குறிப்பில் பதிவேற்றம் செய்திட வேண்டும்” என்னும் தீர்மானத்தை முன்மொழிகின்றேன் என்றார்.
 பேரவைத் தலைவர்: மாண்புமிகு அவை முன்னவர் அவர்களின் தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்படுகிறது.
ஏற்போர் ‘ஆம்’ என்க.(ஆம்)
மறுப்போர் ‘இல்லை’ என்க.
மறுப்போரே இல்லை என்று கருதுகிறேன்.
மறுப்போரே இல்லை. தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
இன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆளுநர் உரையின் ஆங்கிலம் மற்றும் தமிழில் அச்சிடப்பட்ட பகுதிகள் மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும்.  வேறு எவையும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பேரவைத் தலைவர் மு. அப்பாவு அறிவித்தார்.
இதையடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு இன்றைய நிகழ்வு முடிந்தது.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *