பெரியார் மருத்துவக் குழுமம் – இரண்டாம் நாள் – ஒரே நாளில் மூன்று இடங்களில்… பெரியார் மருத்துவக் குழுமம் நடத்திய பெரு வெள்ள நிவாரண சிறப்பு மருத்துவ முகாம்கள்!

viduthalai
7 Min Read

சென்னை.டிச.18 பெரியார் மருத்துவக் குழுமம் சார்பில் ஒரே நாளில் மூன்று வெவ்வேறு இடங்களில் பெரு வெள்ள மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.
மிக்ஜாம் புயல், வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு முழுவீச்சில் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. அரசுக்குத் துணை நிற்கும் வகையில் பெரியார் மருத்துவக் குழுமம் டிசம்பர் 16 இல், மேற்கு தாம்பரம் பெரியார் சமத்துவ புரம் அங்காள பரமேஸ்வரி கோயில் அருகிலும், அமைந்தகரை கடைவீதி தெருவிலுள்ள திருவீதி அம்மன் கோயிலினுள்ளுமாக இரண்டு இடங்களில் மருத்துவ முகாம்கள் சிறப்பாக நடைபெற்றன. டிசம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை அன்று, பழைய பெருங்களத்தூர் சசிவர்தன் நகர், வடசென்னையில் மேல்பட்டி பொன்னப்பன் தெரு, ஆடுதொட்டி அருகிலுள்ள வ.உ.சி. நகர் ஆகிய இரண்டு இடங்களுமாக மொத்தம் மூன்று இடங்களில் மருத்துவ முகாம்கள் சிறப்பாக நடைபெற்றது.

திராவிடர் கழகம்

மேற்கு தாம்பரத்தில் காலை 10 மணியளவில் பழைய பெருங்களத்தூர் சசி வரதன் நகர் 1ஆவது தெரு முதல் 10 ஆவது தெருக்களில் பெரியார் மருத்துவ குழுமம் மற்றும் குழந்தைகள் உதவி அறக்கட்டளை (Child health foundation – Tamil Nadu Flood Relief) We for all foundation சார்பில் கன்னியப்பன் மருந்துகள் வழங்கி மகிழ்ந்தார்கள். நிகழ்ச்சியில் ப.முத்தையன் தலைமையில், கோ.நாத்திகன், சு.மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலையில். இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் காசி, கதிர் மெமோரியல் மருத்துவர் நந்தகுமார், மருத்துவர் தினேஷ் குமார், மருத்துவர் அருண் சங்கர் மற்றும் அன்னை அருள் மருத்துவமனை செவிலியர் சுதாகர் உடன் செவிலியர்கள் அபி மற்றும் அபிஷா மற்றும் பெரியார் தொண்டறம் அணித் தோழர்கள் மா.குணசேகரன், இறைவி, இரா.சு.உத்ரா, பூவை க.தமிழ்செல்வன், மாடம்பாக்கம் அ.கருப்பைய்யா, எஸ்.ஆர்.வெங்கடேஷ், வெ.விஜயகலா, எழிலரசி, பல்லாவரம் ச.அழகிர்(எ)நரேஷ் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் களப் பணியில் ஈடுபட்டனர். பகுதி மக்கள் பெருந்திரளாக வந்து மருத்துவம் பார்த்து பயனடைகின்றனர்.

இந்நகரில் தோழர் கிருத்துவ பாதிரியார் பால்ராஜ் சாமியானா பந்தல்,20 பிளாஸ்டிக் இருக்கை மற்றும் 4 டேபிள் வழங்கி சிறப்பு செய்தார்கள். இப்பகுதியை சேர்ந்த தோழர்கள் அன்பு மற்றும் லட்சுமணன் ஆகியோர் நம் குழுவினருக்கு தேநீர், பிஸ்கெட் மற்றும் குடிநீர் வழங்கி மகிழ்ந்தனர்.

வடசென்னையில்…

திராவிடர் கழகம்

வடசென்னை மேல்பட்டி பொன்னப்பன் தெரு, பி.பி.சாலை சந்திக்கும் முனையில் கழகத் தோழர் த.மரகதமணி தலைமையில் தி.மு.க. பகுதி செயலாளர் ஜெய ராமன், தி.மு.க. 45 ஆவது வட்டப் பிரதிநிதி கண்ணன், தி.மு.க. பெரம்பூர் தெற்கு இலக்கிய அணி துணை அமைப்பாளர் கோதண்டன், தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர் ஜானகி ராமன், தி.மு.க. தோழர் வினோத், பொறியாளர் ச.இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தே.செ.கோபால், முரளி கிருஷ்ணன் சின்னத்துரை, உடுமலை வடிவேல், நா.பார்த்திபன், அன்பு, தமிழ்ச்செல்வன், புகழேந்தி, இராமச்சந் திரன், முத்துப்பிரியா, சாய்கணேஷ், கண்ணதாசன் நகர் துரை, எம்.கே.பி.நகர் வழக்குரைஞர் இராமச்சந்திரன், டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆலோசகர் பெரம்பூர் ஜெய்சங்கர், ஆ. கிசோர் ஆகியோர் முன்னிலையில் காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டது. மழை வரலாம் என்று எதிர்பார்த்து, முகாம் நடத்துவது என்று தேர்வு செய்த இடத்திலேயே வசிக்கும் தேவசேனாபதி அவர்களின் வீட்டின் கீழ்தளத்தில் அனுமதி பெற்று சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒருங்கிணைப்புப் பணிகளில்…

வழக்குரைஞர்கள் தளபதி பாண்டியன், துரை அருண், சோ. சுரேஷ் ஆகியோர் வடசென்னையில் நடைபெற்ற இடங்களிலும் மாறி மாறி சென்று ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அன்னை மணியம்மையார் மருத்துவமனை மருத்துவர் பா.யுவேதா, செவிலியர் உமா லூசி, திட்டக்குடி மருத்துவர் செந்தில், மருத்துவர் கணேஷ், மருத்துவர் சங்கீதா, செவிலியர் சபானா ஆகியோர் பங்கேற்று மக்களுக்கு தொண்டு செய்தனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை 222 பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். பதிவு செய்தல், எடைபார்த்தல், இரத்த அழுத்தம் பரிசோதனை ஆகியவை எடுக்கப்பட்டு, இவற்றின் அடிப்படையில் மருத்துவர்கள் மக்களிடம் கனிவுடன் பேசி, அவர்களுக்கான மருந்து, மாத்திரைகளை வழங்குகின்றனர். குழந்தைகளுக்கு பிஸ்கட், பெண்கள் அனைவருக்கும் சானிட்டரி நாப்கின் வழங்குவது ஆகியவை மருத்துவ முகாமில் நடைபெற்ற பணிகளாகும்.

புளியந்தோப்பு – ஆடுதொட்டி

திராவிடர் கழகம்

மூன்றாவது முகாம் வடசென்னை புளியந்தோப்பில் ஆடுதொட்டி அருகிலுள்ள வ.உ.சி. நகர் முதல் தெருவிலுள்ள சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. மானமிகு இரா.பாலாஜி தலைமையில், திரு.வி.க. சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் தாயகம் கவி, முகாமை தொடங்கிவைத்தார். வழக்குரைஞர்கள் பா.மணியம்மை, சோ.சுரேஷ், தளபதி பாண்டியன், துரை அருண், சரவணன், கி.ராமலிங்கம், க. கலைமணி, பா. பார்த் திபன், தி.மு.க. பகுதி செயலாளர் சாமிக்கண்ணு, தமீம்பாய், வேலு, தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளர் எம்.கிரிஜா ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மு.பசும்பொன், மு.பவானி, புரசை அன்புச்செல்வன் ஆகிய மூவரும் ஒட்டுமொத்த நிகழ்வையும் நிர்வகித்து சிறப்பித்தனர். இங்கே பெரியார் மருத்துவக் குழுமத்தின் செயலாளர் ச.மீனாம்பாள் தலைமையில் எம்.எம்.சி. முதுநிலை மாணவர் சகீலா பேகம், ரேடியோ தெரபிஸ்ட் ஜான்கிசோர், உதயகுமார், செவிலியர்கள் ரூபினி, சகிலா, முருகம்மா ஆகியோர் பங்கேற்று தொண்டு செய்து மக்களின் அன்பைப் பெற்றனர்.

கண்ணதாசன் நகரில்…திராவிடர் கழகம்

மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் கண்ணதாசன் நகரில் கண்மணி ஆப்டிக்கல்ஸ் நடத்திவரும் தோழர் துரை மருத்துவமுகாம் நடக்கிறது வாருங்கள் என்றழைக்கும் துண்டறிக்கையை மக்களிடையே வழங்கி, மருத்துவ முகாம் நடந்துவருவதை மக்களிடம் தெரிவிக்கும் பணியை மேற் கொண்டார். வ.உ.சி. நகரில் பெரியார் தொண்டறம் அணித் தோழர்கள் ஒருபடி மேலே சென்று ஆட்டோவில், அங்குள்ள மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து முகாம் நடப்பது பற்றி பரப்புரை செய்தனர். மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் கோயில் பூசாரி முனுசாமி என்பவர் வந்து சிகிச்சை எடுத்துக்கொண்டு, பெரியார் மருத்துவக் குழுமத்தின் பணிகளை பாராட்டிவிட்டுச் சென்றார். வ.உ.சி. நகரில், சிகிச்சை எடுத்துக்கொண்ட ஒரு பெண் மிகுந்த மனநிறை வுடன், முகாமுக்குள் நுழைந்துகொண்டிருந்த மற்றொரு பெண்ணைப் பார்த்து, “சீக்கிரம் போ, பெரியார் கட்சிக்காரங்க நல்ல மருந்து, மாத்திரை தர்றாங்க” என்று அவசரப்படுத்தினார்.

மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் சிகிச்சை முடித்து வருகிற பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் பணியை அந்தப்பகுதியைச் சேர்ந்த குப்பம்மாள் தன்னார்வத்துடன் முன்வந்து கொடுத்துக் கொண்டிருந்தார். அனைவரையும் அவர் அறிந்தவர் என்பதால் உரிமையுடன் பெண்களை அழைத்து, “இந்தா உன் மகளுக்கும் சேர்த்து வாங்கிக் கொள்” பாட்டியாக இருந்தால், “இந்தா உன் பேத்திக்கும் சேர்த்து வாங்கிக்கொள்” என்று கொடுத்துக் கொண்டிருந்தார். வ.உ.சி நகரில் மருத்துவர்களே பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்களை வழங்கினர். வ.உ.சி நகரில் இருக்கும் தி.மு.க. பெண் நிர்வாகி எம்.கிரிஜா, “1000 குடும்பங்கள் இருக்கின்றன. முழங்காலுக்கு மேல், சில இடங்களில் இடுப்பளவு தண்ணீரில் மூழகிய பகுதி இது. நீங்கள் செய்யும் பணியைக் கண்டு உண்மையிலேயே மனநிறைவாக இருக்கிறது என்று நெகிழ்ந்து போனார்.

தாம்பரத்தில்…

தாம்பரத்தில் சானிட்டரி நாப்கின் வழங்கிய தோழர் இறைவி, “பெண்கள் முதலில் தயங்கினார்கள்; முந்தனையில் மறைத்து வாங்கினார்கள்; எதாவது கவர் இருகிறதா என்று கேட்டார்கள்; நான் இதுவொன்றும் மறைக்க வேண்டியதில்லை என்று கூறினேன். ஆண் தோழர்களும் இது உலகம் முழு வதும் உள்ளதுதான் இது மறைத்து எடுத்துச் செல்ல வேண்டியதல்ல என்று பிரச்சாரமே செய்ததன் விளைவாக, பெண்கள் வீட்டில் மகள் இருக்கிறாள், பேத்தி இருக்கிறாள் அவர்களுக்கும் சேர்த்து கொடுப்பீர்களா? என்று ஆசையுடன் கேட்டு வாங்கிக்கொண்டார்கள். கணவன்மார்கள் நம்மிடம் வந்து, இதென்ன? என்று கேட்கும்போது,
பெண்கள் பயன்படுத்துகிற சானிட்டரி நாப்கின்கள் என்று சொன்னவுடன், பின்னால் வரும் மனைவியைத் திரும்பிப் பார்த்து, எம்மா இதை கண்டிப்பாக வாங்கிக்கொள் என்று பொறுப்புடன் கூறினார்கள். ஓரிருவர் இரண்டுதானா இன்னும் இரண்டு சேர்த்து கொடுங்களேன் என்று கேட்டு வாங்கிச் சென்றார்கள்” என்று மிகுந்த மனநிறைவுடன் நம்மிடம் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், ”வெறுமனே நிவாரணப் பணிகளுக்காக இல்லாமல் உள்ளபடியே பயனுள்ளதாக இருந்தது என்று பொது மருத்துவம் பார்த்த மக்கள் பேசிக்கொண்டனர்” என்று தோழர் இறைவி தெரிவித்தார்.

ஒட்டுமொத்தமாக நடந்த மூன்று முகாம்களிலும் காலையில் வந்தவர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறதே என்று வீட்டுக்குச் சென்று, இன்னும் சிலருடன் மூன்று மணிக்குப்பிறகு வந்துகொண்டிருந்தார்கள். ஆனால், ”மூன்று மணியுடன் முகாம் முடிகிறது, இப்போது வருகிறீர்களே” என்று சிரித்தபடியே கூறி, வருகிறவர்கள் அனைவருக்கும் சிகிச்சை செய்து கொண்டிருந்தனர் மருத்துவர்கள். ஒருகட்டத் தில் முடிக்கமுடியாத சூழல் உருவாகியது.

ஒருவழியாக வந்தவர்கள் அனைவருக்குமே சிகிச்சை அளித்து முடித்தனர். இறுதியில் பெரியார் தொண்டறம் அணித் தோழர்கள், பெரியார் மருத்துவக் குழுமத்திற்கும் வந்திருந்த மருத்துவர் களுக்கும் நன்றி தெரிவித்து அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினர். மேல்பெட்டி பொன்னப்பன் தெருவில் 222, வ.உ.சி நகரில் 254, தாம்பரத்தில் 151 பேர் என நேற்று ஒருநாளில் 627 பேர் பயன்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *