இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமான ஜெய்ப்பூரில் உள்ள அரசு சேத் ஆனந்திலால் போடார் செவித் திறனற் றோர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 100-க்கும் மேற் பட்ட காதுகேளாத, பேசமுடியாத மாணவர்கள், தங்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பேசவும், கேட்கவும் இயலாத இந்தக் குழந்தைகள், தங்கள் கல்வி உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும், கண்ணீருடன் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 5 அன்று, வகுப்பறை கூரையிலிருந்து சுவர் பகுதி உடைந்து ஒரு மாணவர் மீது விழுந்ததை அடுத்து, பயத்தில் வகுப்பறைகளை விட்டு வெளியேறிய மாணவர்கள், பள்ளி முகப்புவாயிலில் அமர்ந்து போராட்டத்தைத் தொடங்கினர்.
பள்ளிக் கட்டடம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது கூரையிலிருந்து சுவர் உடைந்து விழுகிறது.
விடுதி உணவு தரமற்றதாக உள்ளது; மாணவர்களுக்குப் போதிய உணவு வழங்கப்படுவதில்லை; கழிப்பறைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன, சுகாதாரம் இல்லை!
சைகை மொழி தெரிந்த ஆசிரியர்கள் இல்லை சில ஆசிரியர்கள் வகுப்பறையில் கைத்தொலைப்பேசியில் நேரத்தைக் கழிக்கின்றனர்
ஒரு ஆண் ஊழியர் மாணவிகளைத் தொல்லை செய்கிறார் என்ற குற்றச்சாட்டு! மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கும் பணம் வசூலிக்கப்படுகிறது
பேசவும், கேட்கவும் இயலாத இந்தக் குழந்தைகள், தங்கள் கோரிக்கைகளை சைகை மொழி, மூலம் வெளிப்படுத்தினர். மாணவர்களின் போராட்டத்தினை அறிந்து கொண்ட ஒரு சேவை அமைப்பினர் பள்ளிக்கு வந்தபோது, மாணவர்களின் சைகைகள் மூலம் அவர்களின் துயரத்தை எடுத்துக் கூறினர்.
இந்தப் போராட்டம் சமூகவலைதளத்தில் பரவி, பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் ராஜஸ்தான் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டிகாராம் ஜுல்லி ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்களைச் சந்தித்தனர்.
ஜுல்லி, பாஜக அரசு மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு அடிப்படை வசதிகளைக் கூட வழங்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
போராட்டத்தை அடுத்து, கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்தனர். முதன்மைக் கல்வி அலுவலர் ஆஷா குப்தா, மாணவர்களைச் சந்தித்து அவர்களின் குறைகள் தீர்க்கப்படும் என உறுதியளித்தார். மேலும், பள்ளி முதல்வர் பாரத் ஜோஷி உடனடியாக பணியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அரவணைக்கப்பட வேண்டிய, பாதுகாக்கப்பட வேண்டிய மாற்றுத்திறனாளிக் குழந்தைகள், தங்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. கல்வி, உணவு, பாதுகாப்பு, சுகாதாரம் — இவை அனைத்தும் ஓர் அரசின் அடிப்படைக் கடமைகள். ஆனால், இந்தக் குழந்தைகள் தங்கள் குரலற்ற குரலால், சைகை மொழியால், தங்கள் உரிமைகளைக் கேட்க வேண்டியிருக்கிறது.
ஜெய்ப்பூரின் மிகப்பெரிய அரசு செவித்திறனற்றோர் பள்ளியில் இத்தகைய நிலை நிலவுவது, மாற்றுத்திறனாளிகளின் கல்வி மற்றும் நலனில் அரசு எவ்வளவு (மெத்தனமான) அக்கறை கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.
மிகவும் கொடுமையானது என்னவெனில் அரவணைக்கவேண்டிய மாற்றுத்திறனாளிகளை அவர்களின் உரிமைகளுக்காக போராட விடுவது மனித நேயமுள்ள எந்த அரசும் அவர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளாது.
அதிலும் பேசமுடியாத – காதுகேளாத குழந்தைகள் தங்களின் கல்வி உரிமைக்காகப் போராடவிடுவது மிகவும் கொடூரமானதும் மனிதாபிமானம் மரணித்துப் போனால் தான் இவ்வாறு நடக்கும்!
பாஜக ஹிந்துத்துவக் கட்டமைப்பில் எழுந்த கட்சி; ஹிந்துத்துவம் ‘‘பாவம் செய்தவர்கள்’’ என அனைத்து இன்னலையும் அனுபவிக்கும் மக்களைக் கூறும் கருத்தைக் கொண்ட ஒன்று ஆகும்
ஒருவர் வறியவனாக உள்ளார் என்றால் அவர் முற்பிறவியல் செய்த பாவம், ஒருவர் மாற்றுத்திறனாளியாக உள்ளார் என்றால் அவர் முற்பிறவியல் செய்த பவம் என்று தொடர்ச்சியாக கூறும் கொள்கையைக் கொண்ட மனநிலையில் உள்ள பாஜக ஆளும் மாநிலமான ஜெய்ப்பூரில் தங்களில் பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு முதல் உண்ணும் உணவு வரை தரமற்று உள்ளது என்று கூறி போராடும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஹிந்து ராஷ்டிரத்தை அமைக்கும் ஒரு கட்சியின் ஆட்சி என்பது எத்தகைய மனிதாபிமானமற்றது என்பதற்கு பிஜேபி ஆளும் ராஜஸ்தானின் மாற்றுத் திறனாளிகளுக்கான இந்தப் பள்ளியே எடுத்துக்காட்டாகும்.

