சென்னை, ஜூலை 3- தமிழ்த் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் துறையின் முன்னோடியும், புகழ்பெற்ற கல்வெட்டாய்வாளருமான முனைவர் எஸ். ராஜ்கோபால் காலமானார்.
தமிழி (தமிழ்-பிராமி) கல்வெட்டுகளை வாசித்து விளக்குவதில் ராஜ்கோபால் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. புகழ்பெற்ற கல்வெட்டியல் அறிஞர் அய்ராவதம் மகாதேவனுடன் இணைந்து மாங்குளம், அரிட்டாப்பட்டி, அழகர்மலை உள்ளிட்ட பல மலைக்குகைகள் மற்றும் தொல்லியல் தளங்களில் நேரடியாக கள ஆய்வுகளை மேற்கொண்டு, தமிழி (தமிழ்-பிராமி) கல்வெட்டுகளை ஆவணப்படுத்தி அவற்றின் வாசிப்பில் முக்கிய பங்களிப்பை வழங்கினார்.
கல்வெட்டுகளைப் படிக்கும் முறைகள், எஸ்டாம்பேஜ் (Estampage) எடுக்கும் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு செய்முறைப் பயிற்சிகள் மூலம் கற்பித்து, புதிய தலைமுறை கல்வெட்டியல் ஆய்வாளர்களை உருவாக்குவதிலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
அவரது ஆயுள் முழுவதுமான தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் சேவையைப் பாராட்டி, 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு “திசையாயிரம்” என்ற சிறப்புப் பாராட்டு நூலை வெளியிட்டது.
இந்நிலையில், முனைவர் எஸ். ராஜ்கோபால் நேற்று (ஜூலை 2) காலமானார். அவரது மறைவுக்கு தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இறுதி நிகழ்வு இன்று (ஜூலை 3) காலை 10 மணியளவில் திருவொற்றியூர் தேரடி மேட்டுச் சுடுகாட்டில் நடைபெற்றது.
