சென்னை, மே 14- சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் வர்த்தகப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 20.6 கி.மீ நீள ஈரடுக்கு உயர்மட்டச் சாலைப் பணிகள் தற்போது புதிய வேகமெடுத்துள்ளன.
உயர்மட்டச் சாலை
சுமார் 3,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் சென்னையின் உள்கட்டமைப்பில் ஒரு மிகமுக்கிய மைல்கல்லாக அமையவுள்ளது.
இந்தத் திட்டத்தின் மிக முக்கிய சிறப்பம்சம் இதன் ஈரடுக்கு வடி வமைப்பாகும்.
இதில் மேல் அடுக்கு தனிப்பாதையாக சென்னை துறைமுகத்திற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் கனரகக் கண்டெய்னர் லாரிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் லாரிகள் நகரின் பொதுப் போக்கு வரத்திற்கு இடையூறு இல்லாமல் தடையின்றி பயணிக்க முடியும்.
அதே வேளையில் கீழ் அடுக்கு உள்ளூர் வாகனப் போக்குவரத்திற்காக வடி வமைக்கப்பட்டுள்ளது.
நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாக னங்கள் ஏறி இறங்கும் வசதிக்காக 13 இடங்களில் ஏறுதளம் மற்றும் இறங்குதளங்கள் அமைக்கப்படு கின்றன.
தற்போது நிலவும் போக்குவரத்து நெரிசலில் மதுரவாயலில் இருந்து துறைமுகத்தை அடைய சுமார் 2 மணி நேரம் வரை ஆகிறது.
ஆனால் இந்த உயர்மட்டச் சாலை பயன்பாட்டிற்கு வரும்போது இப்பயணம் வெறும் 25 முதல் 30 நிமிடங்களாகக் குறையும்.
நாளொன்றுக்குச் சுமார் 20,000 உள்ளூர் கார்கள் மற்றும் 5,000-க்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் இந்தப் பாலத்தைப் பயன்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளதால் கோயம் பேடு, தந்தை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுமானப் பணிகளைப் பொறுத்த வரை ஆற்றின் குறுக்கே மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் இந்தப் பாலம் அமைக்கப்படுவதால் சில இடங்களில் நவீன ‘கேபிள் ஸ்டேடு’ தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது.
தற்போது தந்தை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை மற்றும் கூவம் ஆற்றின் கரையோரங்களில் தூண்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் இரவு நேரங்களில் கூடுதல் பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் கொண்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்தச் சாலைத் திட்டம் சென்னை துறைமுகத்தின் செயல்பாட்டுத் திறனைப் பல மடங்கு உயர்த்தும்.
2047-ஆம் ஆண்டிற்குள் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறனை 200 மில்லியன் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விரைவுச் சாலை அதற்கான முதுகெலும்பாக அமையும்.
தற்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை 2027-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் முழுமையாக நிறைவு செய்து மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
