சென்னை, ஏப்.16- இந்து வாக்காளர்களை மட்டுமே குறிவைக்கும் பாஜக தேர்தல் அறிக்கையை தமிழ்நாடு மக்கள் புறக்கணிப்பார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று (15.4.2026) வெளியிட்ட காட்சிப் பதிவில் கூறியிருப்பதாவது:
பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, ஏற்கெனவே திமுக மற்றும் அதிமுக கட்சிகள் வெளியிட்ட வாக்குறுதிகளின் நகலாகவே உள்ளது. இதில் எந்தப் புதுமையும் இல்லை. மாறாக, இந்து வாக்காளர்களை குறிவைத்து அவர்களை கவரும் நோக்கில், வகுப்புவாத மற்றும் இந்துத்துவ கருத்துகளை பாஜக முன்னிறுத்தியுள்ளது. உதாரணமாக, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்வோம் என பாஜக கூறுகிறது. திருப்பரங்குன்றத்தில் புதிதாக இவர்கள் தான் தீபம் ஏற்றப் போவதாகவும், இதுவரை தீபமே ஏற்றப்படாதது போன்றும் ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றனர்.
பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டு கோயில்களில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. பாஜக வந்துதான் அதைச் செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதேபோல், தைப்பூசம் ஏற்கெனவே தமிழ்நாடு முழுவதும் பக்தர்களால் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தைப்பூசத்தை மாநில விழாவாக அறிவிப்போம் என்று பாஜக கூறுவதும், மக்களை ஏமாற்றும் வேலை. முருகனுக்கான தைப்பூசத்தை மாநிலம் முழுவதும் பொதுமைப்படுத்துவது என்பது எந்த வகையில் சாத்தியம்? இவையாவும் தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு முரணானவை.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, சிறுதொழில் முன்னேற்றம் அல்லது ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதிப் பங்கீட்டை கூடுதலாக பெற்றுத் தருவது குறித்து இந்த அறிக்கையில் எந்த உருப்படியான திட்டமும் இல்லை. நடைமுறைக்கு சாத்தியமற்ற வகையில், மக்களின் வாக்குகளை பெற்றால் போதும் என்கிற நோக்கில் தான் பல வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டைப் புறக்கணித்து பழிவாங்கிய பாஜக-வின் இந்த தேர்தல் அறிக்கையை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிப்பார்கள் என்பது உறுதி. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

