சென்னை, ஏப். 15- மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைத்து, ஹிந்தி பேசும் மாநிலங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசு முயல்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். இதனை முறியடிக்க வரவிருக்கும் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒன்றிய அரசு 2026,ல் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை, மக்கள் தொகையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு எதிரானது.
தென் மாநிலங்களில் தற்போதுள்ள 130 மக்களவை இடங்கள் 103 ஆகக் குறையும் அபாயம் உள்ளது. இதனால் மக்களவையில் தென்னகத்தின் பிரதிநிதித்துவம் 23.74%-லிருந்து 18.97% ஆக வீழ்ச்சியடையும்.
மாநில வாரியான இழப்பு: தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் 42 இடங்கள் 34 ஆகக் குறையும்.
இதற்கு நேர்மாறாக, உத்தரப் பிரதேசம் (80-லிருந்து 91), பீகார் (40-லிருந்து 50), மத்தியப் பிரதேசம் (29-லிருந்து 33) மற்றும் ராஜஸ்தான் (26-லிருந்து 31) என ஹிந்தி பேசும் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும்.
ஹிந்தி ஆதிக்கமும் அரசியல் சதியும்
ஹிந்தி பேசும் 10 மாநிலங்களில் மட்டும் பா.ஜ.க. அதிக இடங்களைப் பெற்று, நாட்டின் பிற பகுதிகளைப் புறக்கணித்துவிட்டு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்க இந்த மறுசீரமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது. பா.ஜ.க. அரசின் இந்த நடவடிக்கைகளைத் தடுக்க, வருகிற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

