சென்னை, மார்ச் 11- மெரினா கடற்கரையில் ரூ.1.43 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ‘கல்விச் சிலை – கற்றனைத் தூறும் அறிவு’ சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (10.3.2026) திறந்து வைத்தார்.
கற்றனைத் தூறும் அறிவு சிலை
இந்தியாவிலேயே பள்ளிக்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதை எடுத்துச் சொல்லும் விதமாக, மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்வது போலவும், அவர்கள் உயர் பதவிகளில் இருப்பது போலவும் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சங்கிலிகளை அறுத்துக் கொண்டு மாணவர்கள் முன்னேறிச் செல்வது போன்ற கருப்பொருள் சிலையில் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் ரூ.2 லட்சத்து 603 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பள்ளிக் கல்வியில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளதை எடுத்துச் சொல்லும் விதமாக, இந்த சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலையை போல், கற்றனைத் தூறும் அறிவு சிலையும் முக்கியத்துவம் வாய்ந்த சிலையாக பார்க்கப்படும். சிலையின் சங்கிலிகளை அறுத்தெறிந்து மாணவர்கள் செல்வது போன்ற கருப்பொருளை இதில் வைத்துள்ளோம்.
பள்ளிக்கல்வித்துறையில் 2021ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள் இந்த சிலையில் வைக்கப்பட்டுள்ளன. கரோனா காலத்தில் பள்ளிக்கு செல்லாத மாணவர்களை பள்ளிக்கு திரும்ப அழைத்து வந்து, ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தின் மூலம் படிக்க வைத்தோம். அதைப் பார்த்து இந்தியா முழுவதும் செயல்படுத்தினர். அதுமட்டுமின்றி, கரோனாவால் தாய், தந்தை இழந்த குழந்தைகளை கண்டறிந்து ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தின் மூலம், அவர்கள் படித்தால் போதும் என்பதற்காக மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் நிதி உதவியும் அளிக்கப்படுகிறது.
யாரும் விடுபடாமல் எல்லாரையும் படிக்க வைக்க வேண்டுமென ஆசைப்படக் கூடிய ஒரு அரசு செயல்படுகிறது. அதனுடைய நோக்கம் தான் சிலை வடிவாக உள்ளது. அடுத்த தலைமுறைக்கு இது ஊக்கத்தை தரக் கூடியதாக அமையும். 200 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு எல்லோரும் படிக்கவில்லை. நீதிக்கட்சி படிப்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது என்பதையும், அடிமைச் சங்கிலி எவ்வாறு உழைத்தனர் என்பதையும் காட்டும் வகையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு தொடர்பான கேள்விக்கு, “சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால், விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு உணவு கிடைப்பதில் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
பொதுத்தேர்வு குறித்த கேள்விக்கு, “கடந்த காலங்களை ஒப்பிடும்போது, பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த ஆண்டும் பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்களை தொடர்பு கொண்டு, அவர்களை தேர்வு எழுத வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
