அறிவியல் மற்றும் விண்வெளி ஆய்வுகளில் இந்தியா உலக நாடுகளுக்குப் போட்டியாக முன்னேறி வரும் வேளையில், மறுபுறம் அரசு இயந்திரங்கள் மதச்சடங்குகளுக்காகவும், அறிவியல் பூர்வமற்ற நம்பிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சந்திர கிரகணம் (நிலவு மறைப்பு): அறிவியல் உண்மை
வானியல் ரீதியாக ‘சந்திர கிரகணம்’ என்பது ஒரு மிகச் சாதாரண இயற்கை நிகழ்வு. சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது விழுவதையே நாம் ‘சந்திர கிரகணம்’ (நிலவு மறைப்பு) என்கிறோம். இது நிழல் விளையாட்டே தவிர, இதில் எந்தவிதமான ‘தீட்டும்’ அல்லது ‘அசுத்தமும்’ இல்லை . என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. ராகு கேது விழுங்குகிறார்கள் என்பது எல்லாம் கடைந்தெடுத்த முட்டாள் தனம் ஆகும்
தீயணைப்புத் துறையின் ‘புனிதப்’ பணி?
அண்மையில் உஜ்ஜைனில் உள்ள புகழ்பெற்ற மகாகாலேஷ்வர் கோயிலில், ‘சந்திர கிரகணம்’ (நிலவு மறைப்பு) முடிந்தவுடன் ஒரு வினோதமான நிகழ்வு அரங்கேறியது. கிரகணம் முடிந்து கோயில் ‘அசுத்தமாகிவிட்டதாக’க் கருதி, அதைத் தூய்மைப்படுத்த தீயணைப்புத் துறை வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் மூலம் 150 கிலோமீட்டர் தூரமுள்ள நர்மதா நதி நீர் 340 கிலோமீட்டர் தூரமுள்ள யமுனை 400 கிலோமீட்டர் தூரமுள்ள கங்கை மற்றும் உஜ்ஜைனில் ஓடும் ஷிப்ரா என்ற நதி நீரும் அனைத்தும் கொண்டு வரப்பட்டு, கோயில் கோபுரம் மற்றும் வளாகம் முழுவதும் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதில் ஷிப்ரா நதி நர்மதையின் கிளை நதி ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது
மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஓர் அவசர கால அரசுத் துறை, விபத்து மற்றும் தீ விபத்துகளிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய தனது முதன்மைப் பணியை விட்டுவிட்டு, ஒரு மத நம்பிக்கையின் பெயரால் கோயிலைக் கழுவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
கேள்விகள்
அரசின் கடமை என்ன? ஒரு மதச்சார்பற்ற நாட்டில், அரசு இயந்திரங்கள் இதுபோன்ற மூடநம்பிக்கை சார்ந்த சடங்குகளுக்குத் துணையாக நிற்பது முறையானதா?
தீயணைப்புத் துறையின் பொறுப்பு: அவசர காலப் பயன்பாட்டிற்காக இருக்க வேண்டிய தீயணைப்பு வாகனங்களையும், வீரர்களையும் இதுபோன்ற சடங்குகளுக்குப் பயன்படுத்துவது அந்தத் துறையின் கண்ணியத்தைக் குறைக்காதா?
மக்களின் வரிப்பணம்
நதி நீரைச் சேகரித்து, வாகனங்கள் மூலம் கொண்டு வந்து தெளிப்பதற்கான செலவுகள் மக்களின் வரிப்பணத்திலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றன. இது ஒரு வீண் விரயம் இல்லையா?
அறிவியல் மனப்பான்மையை (Scientific Temper) வளர்ப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை என்று நமது அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ அரசுத் துறைகளே இதுபோன்ற அறிவியல் ரீதியாக ஆதாரமற்ற சடங்குகளை முன்னின்று நடத்துவது, வருங்காலத் தலைமுறைக்கு நாம் எத்தகைய செய்தியைச் சொல்ல வருகிறோம் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
