சென்னை, பிப். 27- தேர்தல் கூட்டணிப் பேச்சு வார்த்தையை நிதானத்துடன் கையாளுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கூட்டணிப் பேச்சுவார்த்தை நடக்கும் காலங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே சில முரண்பாடுகள் எழும். இதற்கு முன்பும் சலசலப்புகள் எழுந்தன; அவற்றைச் சுமுகமாகப் பேசித் தீர்த்தோம். ஆட்சியில் பங்கு கேட்டு காங்கிரஸ் அழுத்தம் கொடுப்பதை வைத்துக் கொண்டு, தி.மு.க. கூட்டணியைப் பிடிக்காத சில சக்திகள் அதனை ஊதிப் பெரிதாக்க விரும்புகிறார்கள். ஆனால், நிலைமை அந்த அளவுக்குப் போகாது. முதலமைச்சர் அனைத்தையும் மிகுந்த நிதானத்துடன் கையாளுகிறார். அவர் காங்கிரஸை விட்டுவிடமாட்டார்; பேசித் தீர்ப்பார்.”
தகுதி மதிப்பெண் குறைப்பு
முதலமைச்சருக்கு மாற்றுத் திறனாளிகள் நன்றி!
கந்தர்வகோட்டை, பிப். 27- தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில இணை பொதுச் செயலாளர் அ.ரகமதுல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்ணை மாற்றுத்திறனாளி தேர்வுகளுக்கு 40 சதவீதமாக குறைத்து அரசாணையை திருத்தம் செய்து வெளியிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வை (டிஇடி) தகுதிப் பெற்றிருக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு 2011 முதல் நடைபெற்று வருகிறது. ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் பொது பிரிவினருக்கு 60 சதவீதமாகவும், மற்ற இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 55 சதவீதத்தின் அடிப்படையில் கடந்த காலத்தில் தேர்வு நடைபெற்று வருகிறது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
செப்டம்பர் 1ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அரசு பள்ளி அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் பணியில் இருப்பதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் கட்டாயமாக ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பினால் எந்த ஒரு ஆசிரியரும் பாதிக்கப்படக்கூடாது என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து ஆசிரியர் சமுதாயத்திற்கு மிகுந்த நம்பிக்கையை அளித்து வருகிறார்.
ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி மதிப்பெண்ணை குறைக்க வேண்டுகோள்.
ஆந்திரா, தெலங்கானா, பீகார், ஒடிசா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளதுபோன்று, தமிழ்நாட்டிலும் ஆசிரியர் தகுதி தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று தகுதி மதிப்பெண்ணைக் குறைத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு சோதனை நிறைவு!
வடபழனி – பூவிருந்தவல்லி மெட்ரோ ரயில் விரைவில் இயக்கப்படும்!
அதிகாரிகள் தகவல்
சென்னை, பிப்.27- வடபழனி – பூவிருந்தவல்லி இடையேயான மெட்ரோ ரயில் இயக்கத்துக்கான இரண்டாவது கட்ட பாதுகாப்புப் பரிசோதனை 25.2.2026 அன்று நிறைவடைந்தது. இதையடுத்து ரயில் இயக்கம் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனா்.
சென்னையில் முதல்கட்டமாக சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் மீனம்பாக்கம் விமானம் நிலையம் வரை இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கம் இரு வழிகளில் இயக்கப்பட்டு வருகிறது.
வடபழனி – பூவிருந்தவல்லி மெட்ரோ
இரண்டாம் கட்டமாக மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் 4 -ஆவது வழித்தடமாக மெரீனா கலங்கரை விளக்கம் முதல் பூவிருந்தவல்லி புறவழிச்சாலை வரை தண்டவாளம், ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வழித்தடத்தில் வடபழனி முதல் பூவிருந்தவல்லி புறவழிச்சாலை வரை 14. 64 கி.மீ. தொலைவுக்கான தண்டவாளப் பணிகள், ரயில் நிலையப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதில் ரயில் இயக்கப்படுவதற்கான பாதுகாப்பு பரிசோதனையானது பிப். 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. பெங்களூரில் இருந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையா் மதுகா் சவுத்ரி தலைமையிலான குழுவினா் பரிசோதனை மேற்கொண்டனா். இதையடுத்து இரண்டாவது கட்ட பாதுகாப்பு பரிசோதனை 24.2.2026 அன்று தொடங்கியது. ரயில்களைக் குறிப்பிட்ட வேகத்தில் இயக்கி சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பரிசோதனையை அடுத்து 25.2.2026 அன்று ரயில் பாதுகாப்பு ஆணையா் மதுகா் சவுத்ரி மற்றும் மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். அப்போது ரயிலை இயக்குவதற்கான சாத்தியக் கூறுகள், இறுதிக் கட்டப் பணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பாதுகாப்பு பரிசோதனை சான்று விரைவில் வழங்கப்பட்டதும், ஓரிரு வாரங்களில் ரயில் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
