சென்னை, பிப்.26 வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடுமுழுவதும் சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகள் வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால், சென்னையிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் அதிகளவிலான பயணிகள் தமிழ்நாடுமுழுவதும் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக பல்வேறு முக்கிய நகரங்களிலிருந்து கீழ்க்கண்டவாறு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன:
கிளாம்பாக்கத்திலிருந்து: நாளை (27.2.2026) 310 பேருந்துகளும், நாளை மறுநாள் (28.2.2026) 325 பேருந்துகளும் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும்.
கோயம்பேட்டிலிருந்து: திருவண்ணாமலை, நாகை, பெங்களூரு போன்ற இடங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் தலா 55 பேருந்துகள் இயக்கப்படும்.
மாதவரத்திலிருந்து: நாளை மற்றும் நாளை மறுநாள் தலா 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
பிற நகரங்கள்: பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்த வார இறுதியில் பயணம் செய்ய இதுவரை 27.2.2026 5,850 பேரும், 28.2.2026 2,607 பேரும், 1.3.2026 5,944 பேரும் முன்பதிவு செய்துள்ளனர்.
குறிப்பு: 1.3.2026 அன்று பயணிகள் தங்கள் ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, தேவையைப் பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். இந்த சிறப்புப் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் போதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி
சென்னையில் அமெரிக்காவின் எம்ட்யூஆர் சிஸ்டம்ஸ், எட்ஜ் ஏஅய் மய்யம் தொடக்கம்
சென்னை, பிப்.26 அமெரிக்காவின் சிலிக்கான் வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எம்ட்யூஆர் சிஸ்டம்ஸ் எம்பெடட் சிஸ்டம்ஸ் மற்றும் எட்ஜ் ஏஅய் தீர்வுகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளது.
இந்நிறுவனத்தின் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ராஜ் சுப்ரமணியம் கூறியதாவது:
“பன்னாட்டு அளவில் எட்ஜ் ஏஅய் தீர்வுகளை உருவாக்குவதில் சென்னை மற்றும் தமிழ்நாடு ஒரு முக்கிய மய்யமாகத் திகழ்கிறது. இங்குள்ள சிறந்த தொழில்நுட்பத் திறமை மற்றும் நிலையான சூழலால், நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாக ‘மாடல் வொர்க்ஸ்’ மற்றும் ‘ஃபியூஷன் ஸ்டுடியோ’ ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளோம். இதற்காகச் சென்னையில் 100 பொறியாளர்கள் பணியாற்றும் வகையில் பிரத்யேக ‘எட்ஜ் இன்டெலிஜென்ஸ்’ ஆய்வு மய்யத்தை நிறுவனம் அமைத்துள்ளது.
தற்போது இந்நிறுவனத்தில் 400 பொறியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், 2026-க்குள் இந்த எண்ணிக்கை 550-க்கும் மேலாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஏஅய்/எம்எல், தரவு அறிவியல் சிஸ்டம் ஆர்க்கிடெக்ட்ஸ் வல்லுநர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது,” இவ்வாறு அவர் கூறினார்.
