சென்னை, பிப்.26– மறைந்த தகைசால் தமிழர் விடுதலைப் போராட்ட வீரர் தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்கள் மறைவுற்ற செய்தியை அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது வேதனையையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளதோடு, மறைந்த தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்க தோழர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்கள் இந்திய சுதந்திர போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம் மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக என தனது வாழ்நாளில் பெரும்பகுதியை போராட்டம், சிறை வாழ்க்கை என அர்பணித்துக் கொண்டவர். பொதுவுடமை கருத்தியலும், திராவிட கருத்தியலும் கொண்டு, தொழிலாளர் நலன் மற்றும் எளிய வாழ்வின் சான்றாக திகழ்ந்த அந்த மாமனிதருக்கு 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசானது தகைசால் விருதை வழங்கி பெருமைப்படுத்தியது.
தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கு 2007 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் சகாயோகி விருதினையும், அதே ஆண்டு தமிழ்நாடு அரசு அம்பேத்கர் விருதினையும் வழங்கி அன்னாரை பெருமைப்படுத்தியது.
விடுதலைப்போராட்ட வீரராக மாபெரும் சமூக செயற்பாட்டாளராக மற்றும் அரசியல் கட்சித் தலைவராக அவர் இந்திய நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் ஆற்றிய தொண்டினை போற்றும் விதமாக அவரது உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
