புதூரான்
“டபுள் எஞ்சின் சர்க்கார் அல்ல, டப்பா எஞ்சின் சர்க்கார்” என்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கூற்றுக்கு சரியான சான்றுகளாக பல சம்பவங்கள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அன்றாடம் நடந்து வருகின்றன.
பிரதமர் மோடி கூறிய டபுள் எஞ்சின் சர்கார் நடந்து வரும் மத்தியப் பிரதேசத்தில் பள்ளிப் பாடப் புத்தகத்தைக் கிழித்து அதில் மதிய உணவு போட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் முதல்யானது முறை அல்ல!
ஏற்கெனவே கடந்த ஆண்டும் இதே போல் நடந்தது.
2022ஆம் ஆண்டு அழுகிப்போன வாழைப்பழமும், ஊசிப்போன சுண்டலும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டதும், புழுக்கள் நெளியும் மாவை சத்துமாவு என்று கூறி கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுத்த கொடூரமும் இதே டபுள் எஞ்சின் சர்க்கார் என்று மோடி கூறும் மத்தியப் பிரதேசத்தில்தான் நடந்தது.
இந்தக் கோர நிகழ்வுகளை தமிழ்நாட்டிலும் நடத்திடத்தான் மோடி இங்கே வந்து ஹிந்தியில் டபுள் எஞ்சின் சர்க்கார் என்று கதைவிடுகிறார்.
இவர்கள் திருந்தவில்லை,
நோட்டுப் புத்தகத்தில் மதிய உணவு
நோட்டுப் புத்தகத்தில் மதிய உணவு
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் சுகாதாரம் குறித்த கேள்விகள் மீண்டும் ஒருமுறை எழுந்துள்ளன.
மதிய உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்குத் தட்டுகளுக்குப் பதிலாக, அவர்கள் கல்வி கற்கும் நோட்டுப் புத்தகக் காகிதங்களில் உணவு வழங்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், மைஹார் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசு தொடக்கப் பள்ளியில் 27.1.2026 அன்று இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள மாணவர்களுக்கு மதிய உணவாகப் பருப்பு மற்றும் சாதம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களிடம் தட்டுகள் இல்லாத காரணத்தால், வேறு வழியின்றித் தங்களின் நோட்டுப் புத்தகங்களிலிருந்து தாள்களைக் கிழித்து, அதில் சூடான உணவைப் பெற்றுச் சாப்பிடும் அவலநிலை ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் நிதிப் பயன்பாடு குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன: மாணவர்களுக்குத் தேவையான தட்டுகள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கு அரசு ஏற்கெனவே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நிதி வழங்கப்பட்டும் தட்டுகள் ஏன் வாங்கப்படவில்லை? அல்லது வாங்கப்பட்ட தட்டுகள் மாணவர்களுக்குக் கொடுக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்கதையாகும் நிர்வாகத் தோல்வி
இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது முதல்முறை அல்ல என்பதுதான் வேதனையான விஷயம். கடந்த ஆண்டு, இதே போன்று ஷீயோபுர் (Sheopur) மாவட்டத்திலும் மாணவர்களுக்குக் காகிதத்தில் உணவு வழங்கப்பட்ட காட்சிப் பதிவு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
மீண்டும் ஒருமுறை அதே போன்றதொரு நிகழ்வு மைஹாரில் நடந்திருப்பது, மதிய உணவுத் திட்டத்தின் கண்காணிப்பு மற்றும் நிர்வாகத் திறனை கேள்விக்குறியாக்கியுள்ளது.
அதிகாரிகளின் அதிரடி விசாரணை
இந்த அவலம் குறித்த காட்சிப் பதிவு வைரலானதை அடுத்து, மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் உடனடியாகக் களத்தில் இறங்கியுள்ளனர்.
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உணவை வழங்கும் சுயஉதவிக் குழுவினரிடம் விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. பணியில் மெத்தனமாக இருந்தவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
சமூக ஆர்வலர்களின் கவலை
கல்வி கற்கும் தாள்களை உணவருந்தப் பயன்படுத்துவது குழந்தைகளின் மனநிலையையும், சுகாதாரத்தையும் பெருமளவில் பாதிக்கும் எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். “அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து கொடுக்காமல் தரமான கல்வியை எப்படிக் கொடுக்க முடியும்?” என்பதே பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது.
