சென்னை, ஜன. 27- வட சென்னை அனல் மின் நிலைய 3ஆம் அலகில் வணிக ரீதியான முழு உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. வடசென்னை அனல் மின் நிலையம் 3இல் 800 மெகாவாட் அளவுக்கு மின்னுற்பத்தி செய்ய முடியும்.
வணிகரீதியான உற்பத்தி
இந்த அனல் மின் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2024ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இதையடுத்து அனல் மின் நிலையத்தில் சோதனை ஓட்டம் உள்ளிட்ட பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் வடசென்னை அனல் மின் நிலையம் 3ஆம் அலகில் வணிக ரீதியான முழு மின்னுற்பத்தியை விரைவில் தொடங்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்.
வணிக ரீதியான உற்பத்தி என்றால் மின் நிலையத்தை முழுதிறனில் 72 மணி நேரம் தொடர்ந்து இயக்க வேண்டும். இதை பூர்த்தி செய்தால்தான் உற்பத்தியாகும் மின்சாரத்தை விற்க முடியும். இதையடுத்து மின்வாரியம் சார்பில் துரிதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் வடசென்னை அனல் மின் நிலையம் 3இல் வணிகரீதியான உற்பத்தி கடந்த 21ஆம் தேதி அதிகாலை 4.30 மணிமுதல் 72 மணி நேரம் தொடர் முழு உற்பத்தித் திறன் ஆய்வு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு 24ஆம் தேதி காலை 4.30 மணிவரை தொடர்ச்சியாக முழு மின் உற்பத்தி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த அனல் மின் நிலையம் கடந்த 24ஆம் தேதிமுதல் 800 மெகாவாட் வணிகரீதியான முழு மின்னுற்பத்திக்கு கொண்டு வரப்பட்டது. மின்னுற்பத்தி பணிகளை மின்வாரியத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன், நேற்று (26.1.2026) நேரில் ஆய்வு செய்து வணிக ரீதியாக மின்னுற்பத்தி மைல்கல்லை எட்டியதற்கு இரவு பகல் பாராமல் உழைத்த அனைத்து பொறியாளர்கள், பெல் நிறுவன பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் இனிப்பு வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.
தொடர்ந்து அனல் மின் நிலையத்தின் சுகாதார மய்யம், ஆம்புலன்ஸ் ஆகியவற்றை தொடங்கி வைத்தார். இதுகுறித்து மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “எதிர் வரும் கோடைக்கால மின் தேவையை பூர்த்தி செய்வதில் இந்த அனல் மின் நிலையம் முக்கிய பங்காற்றும்.
வடசென்னை அனல் மின்நிலையத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்காக சுமார் 18 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இன்னும் 2 ஆண்டுகளில் 85 ஆயிரம் மரக்கன்றுகள் நட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.
